ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மூடப்பட்ட மெரினா... முன்னேறும் போராட்டக்காரர்கள்!

மின்னம்பலம் :மீண்டும் போராட்ட அடையாளமாக மெரினாவை மாற்ற நடக்கும் முயற்சியை, சுமார் 5 ஆயிரம் போலீஸாரைக் கொண்டு தடுக்க முனைந்திருக்கிறது தமிழக அரசு.
இன்று (ஏப்ரல் 29) ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜாலியாகக் காற்று வாங்கலாம் என்று சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியாகிவிட்டார்கள். காரணம் உழைப்பாளர் சிலை முதல், லைட் ஹவுஸ் வரை மெரினாவின் உள் சாலைகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. கார்களில், பைக்குகளில் வந்தவர்கள் எல்லாம் கடற்கரைக்கு உள்ளே செல்ல முடியாது என்று போலீஸாரால் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
இதற்குக் காரணம் 25 அமைப்புகள் கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் வேல்முருகன் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டம்தான்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று மெரினா கடற்கரையில் அறவழிப் போராட்டம் நடைபெறும் என்று வேல்முருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு நேற்று மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க, நேற்று இரவே இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அதை ரத்து செய்து உத்தரவிட்டது

இதனால், மெரினா கடற்கரையில் நடத்த இருந்த போராட்டத்தை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடத்துமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று 25 அமைப்புகளும் தங்கள் போராட்டத்தை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாற்றினர். அதன்படி வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர், இன்று பிற்பகல் சேப்பாக்கத்தில் குவியத் தொடங்கினர். ஏராளமான கூட்டம் சேப்பாக்கத்தில் கூடியதால் அவர்கள் எந்நேரத்திலும் திடீரென மெரினாவுக்குள் நுழையலாம் என்று உளவுப் பிரிவு எச்சரிக்கை தெரிவித்திருந்தது. அதனால், இன்று பிற்பகலிலிருந்தே மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டனர். மெரினா கடற்கரை சாலையில் இணையும் சாலைகளிலெல்லாம் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டது. மேலும் மெரினாவின் உள் சாலை முழுதுமாகப் பூட்டப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொள்ளும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மாலை தனது பேஸ்புக்கில், “மெரினா உழைப்பாளர் சிலை நோக்கி நகர சேப்பாக்கம் மைதான வாயிலில் (விருந்தினர் மாளிகை) திரண்டிருக்கிறோம். வாய்ப்புள்ள தோழர்கள் இணைந்துகொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கூட்டத்தினர் மாலை ஆறு மணி வாக்கில் மெரினாவில் இருக்கும் உழைப்பாளர் சிலையை நோக்கி நகரத் தொடங்கினர். இதனால் பதற்றமான போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவை மீறி மெரினாவுக்குள் செல்ல போராட்டக்காரர்கள் செல்லத் துணிவதால் அங்கே பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: