திங்கள், 30 ஏப்ரல், 2018

"நித்தியானந்த சேனா" அடுத்த ஆன்மீக அரசியல்வாதி .. நித்தியின் புதிய கட்சி

அரசியலில் இறங்கும் நித்யானந்தாமின்னம்பலம் : ஆன்மிக அரசியல் என்று அறிவித்து ரஜினி ஒரு பக்கம் அரசியல் ஏற்பாடுகளில் இறங்கியிருக்க, அதே ஆன்மிக அரசியல் என்னும் முழக்கத்தோடு நித்யானந்த சேனை என்ற அமைப்பைத் துவக்கி உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாகியிருக்கிறார்கள் சர்ச்சைகளை சந்தித்த சாமியார் நித்யானந்தாவின் சீடர்கள்.
தேசியமும் தெய்வீகமும் எங்களின் இரு கண்கள் என்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாசகங்களோடு திருவண்ணாமலை முழுதும் ஒட்டப்பட்டிருக்கும், ‘நித்யானந்த சேனை’ போஸ்டர்கள் இப்போது மாவட்டத்தில் பேசுபொருளாக ஆகியிருக்கின்றன.
நித்யானந்தா சேனை அமைப்பின் மாநிலத் தலைவரான சிவா தமிழன், நித்யானந்தா திருவண்ணாமலையில் விடிஎஸ் ஜெயின் பள்ளியில் படித்தபோது அவரோடு ஆறாவது முதல் பத்தாவது வரை ஒன்றாகப் படித்தவர்.
தான் நேரடியாக களத்தில் இறங்காமல் தன் வகுப்புத் தோழர் மூலம் அமைப்பை ஏற்படுத்த ஆசி கொடுத்திருக்கிறார் நித்யானந்தா. இதுபற்றி சிவா தமிழனிடமே விவரம் கேட்டோம்.

“உலக அளவில் இந்து தர்மத்தையும் தமிழ் சைவ நெறியையும் பல்வேறு நாடுகளில் போதித்து வருகிறார் சுவாமிஜி. நாங்கள் அவரது போதனைகளை தமிழகத்தில் வெகு மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக இந்த நித்யானந்த சேனை அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம். இந்து அமைப்புகள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்து தர்ம சைவ நெறியை பரப்புவோம். நித்யானந்தா சுவாமியின் ஆசியோடுதான் இதைத் தொடங்கியிருக்கிறோம்’’என்றவரிடம் ,
“உறுப்பினர் சேர்க்கையெல்லாம் நடத்துகிறீர்களே...?’’ என்று கேட்டோம்.
“ஆமாம்...திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரம் பேரை நித்யானந்தா சேனையில் சேர்த்திருக்கிறோம். தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமித்திருக்கிறோம். ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் பலர் எங்கள் அமைப்பில் சேர்ந்திருக்கிறார்கள். விரைவில் நித்யானந்த சேனை தமிழகம் முழுதும் கட்டமைக்கப்படும்’’ என்றார் சிவா தமிழன்.
நித்யானந்த சேனை யாருடன் கூட்டணி வைக்கப் போகிறதோ?

கருத்துகள் இல்லை: