புதன், 10 ஆகஸ்ட், 2016

தலித் தாக்குதல்கள் ! அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அடித்த அடியில்தான் மோடி வாயை திறந்தார்

சமர்:   ஒரு மதிப்புக்குரிய பன்னாட்டு ஊடக நிறுவனம், ஒரு ஜனநாயகக் குடியரசின் பிரதமரை நோக்கி மௌனத்தை உடைக்குமாறு கேட்பது அரிதானதொரு நிகழ்வாகும். அதுவும் ‘அவமானகரமான மௌனம்’ என்று அதனைக் குறிப்பிடுவது அரிதினும் அரிது. ஆனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இதைச் செய்துள்ளது. தனது தலையங்கத்தில் பாரத நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படிக் கூறுகிறது: பசுவழிபாடு செய்பவர்களின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தனது கேவலமான‌ மௌனத்தை அவர் உடைத்து, பொருளாதார வாய்ப்புகளும், கண்ணியமும் நீதியுமானதொரு அரசியல் நிலைப்பாட்டை அவர் எடுக்கா விட்டால், மோடியின் அரசு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்கவிருக்கிறது.

அந்நாளிதழ் ஆய்ந்து ஆதாரங்களுடன் பேசுகிறது. நாட்டின் தலித்துகள் மீதும் முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட எண்ணற்ற‌ வன்முறைகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறது. மேலும், அரசிடமிருந்து இவ்வன்முறையாளர்களுக்குக் கிடைக்கும் தெள்ளத் தெளிவான ஆதரவையும் ஊக்கத்தையும் குறிப்பிடுகிறது. பாரதிய ஜனாதா கட்சித் தலைவர் மற்றும் ஆட்சியாளர்கள் பலரின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் மேற்கோள் காட்டி இருக்கிறது.
ஆகவே இதனை நாம் காலனியாதிக்கத்தின் நீட்சி, இந்தியா மீதான நிறவெறி என்று குற்றம் கண்டோ, நாம் எப்போதும் அரைக்கும் மாவான, “எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்” என்றோ ஒதுக்கி விட முடியாது.
சாதிப் பிரச்னைகளைக் கடந்த காலங்களில் இந்தியா தனது உள்நாட்டு விவகாரம் என்றே கூறி வந்துள்ளது. முரண்நகையாக, தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டக் குரல்களையும் எழுப்பியுள்ளது. சுலபமாகக் கேட்கலாம், “சாதிப் பிரச்னைகள் இந்தியாவின் உள்விவகாரம் என்றால், தென்னாப்பிரிக்காவின் நிறவெறி மட்டும் என்னவாம்?”
கண்காணிப்பு வன்முறை சட்டவிரோதமானது; அதனை ஆதரித்தோ, கண்டும் காணாமலோ ஊக்குவிக்கும் எந்தவொரு அரசாங்கமும் சட்டத்துக்குட்பட்ட அரசாகாது, உலகளாவிய சமூகத்தின் கண் விமர்சனத்துக்கப்பாற் பட்டதும் ஆகாது. இந்தியாவின் தற்போதைய அரசாங்கம் 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்தது முதல், அத்தகைய பல்வேறு வன்முறைகளை ஆதரித்து வந்துள்ளது வேதனைக்குரியது. காவல்துறையையும் சட்ட நிறுவனங்களையும் வன்முறைகளுக்கெதிராக வலுப்படுத்துவதற்கு மாறாக, பிற்போக்குத்தனமான அரசியலை நிகழ்த்தி வரும் மாட்டுக் காவலர்களுக்கு ஆதரவாகவே சட்டங்களைத் திருத்தி எழுதியுள்ளது.
சட்டம் கண்ணை மூடிக்கொள்ள, ‘மாடுகளைக் கடத்திக் கொண்டு போகிறார்கள்’ என்ற பழியின் பேரில் மாட்டுக் காவலர்கள் எண்ணற்ற தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதை இந்தியா பார்த்திருக்கிறது. கொடூரமான‌ கொலைகளாகட்டும், அடி உதை, தாக்குதல்களாகட்டும், காவல்துறை கள்ள மௌனம் சாதித்ததையன்றி வன்முறையாளர்கள் மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முர‌ணாக, பாதிக்கப்பட்டவர்களைப் பசுவதைச் சட்டத்தின் கீழ்க் கைது செய்துள்ளனர்.
முரண் நகையாக, இந்தியாவின் இந்நிலைக்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. இந்த இந்தியாவில் தான் பீகார் மாநிலப் பாராளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் என்றழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சனின் “இந்தியாவில் மனித உயிரை விட மாட்டின் உயிருக்கு மதிப்பு அதிகம்” என்ற கூற்று சில சக உறுப்பினர்களின் மனம் புண்பட்டு விட்டதால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட்டிருக்கிறது.
ஆம், உண்மை தான். ‘மனித‌ உயிரை விடப் பசுவின் உயிர் மதிப்பு மிக்கது என்ற கூற்று’ பாராளுமன்ற அவைக் குறிப்பில் இருக்கத் தகுதியற்றதாக நீக்கப்பட்டிருக்கிறது.
நியாயமாக, தலித்துகள் மீதும் முஸ்லிம்கள் மீதும் நாளும் அதிகரித்து வரும் மாட்டுக்கறிக் கண்காணிப்புத் தாக்குதல்கள் அரசாங்கத்தை பரபரப்பாக்கி சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தும் அளவுக்காவது முடுக்கி விட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் மௌனமான ஆதரவு போக்கு நமக்கு வேறு மாதிரியான செய்தியைச் சொல்கிறது. வன்முறை கைகூடும் எந்தவொரு பிரிவும் தனக்கு வேண்டிய எதையும் நிறைவேற்றிக் கொள்ளக் கூடும். குஜராத்தில் பட்டேல்கள் இட ஒதுக்கீடு கோரிய போது மூண்ட கலவரமும், ஜட் சமூகம் இதே போல் போராடிய போது ஹர்யானா எரிந்ததும், ஆந்திராவில் காபுக்கள் தெருவிறன்கிக் கலகம் செய்ததும் இதற்குச் சாட்சிகள்.
ஆனால் இப்போது நிலைமை மோசமாகி விட்டது. இந்த மாட்டுக்கறி வன்முறையாளர்கள் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தினர் தங்களைப் பாதுகாக்கத் தவறிய அரசிடம் மனத்தாங்கல் கொண்டு தெருக்களில் திரண்டு போராடத் துவங்கி விட்டனர். அவர்கள் நியாயம் வேண்டிக் கோஷம் எழுப்புவதற்கே குஜராத் கொதித்துக் கிடக்கிறது. அவர்களும் வன்முறையைக் கையிலெடுத்து விட்டால் அவ்வளவு தான்.
குஜராத்தில் மட்டுமல்ல, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஆகிய பல மாநிலங்களிலும் இந்தத் தாக்குதல்களும் அதற்கெதிராகப் பாதிக்கப்பட்டவர்களின் கோபமும் உச்சநிலையை எட்டியுள்ளது. இது ஏறத்தாழ இந்திய மக்கள்தொகையில் பாதியாகும். குஜராத்தில் நிகழ்வதே இந்த அளவுக்குப் பரபரப்பாகுமானால் நமக்குச் செய்தி தெளிவாகிறது.
இந்திய அரசாங்கமும் அதன் பிரதமரும் நல் அறிவுரையைச் செவிமடுத்து மாட்டுக்கறி கண்காணிப்பு வன்முறையாளர்களை அடக்கி, நீதிக்கும், கண்ணியத்துக்கும் பொருளாதார வாய்ப்புக்கும் இடமளிக்கும் வகையில் இயங்க வேண்டும். வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை ஒரேயடியாகச் செயலிழக்க வைப்பது தான் ஒரே வழி.
கட்டுரையாளர் சமர், ‍ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், உணவுரிமை நிகழ்ச்சி ஆசியச் சட்ட வ‌ள மையம்/ஆசிய மனித உரிமைக் குழு, ஹாங் காங்.
Translated from: http://www.countercurrents.org/…/new-york-times-calls-modi…/
தமிழாக்கம்: தீபா லஷ்மி
பிரதமர் நரேந்திர மோடி, நீண்ட மௌனத்துப் பிறகு உனாவில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த வாரம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.   thetimestamil.com

கருத்துகள் இல்லை: