வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

வானொலி தமிழ் செய்திகளுக்கு மூடுவிழா! அனைத்து மாநில மொழிகளையும் நசுக்கும் RSS அஜெண்டா ஆரம்பம்


பாரம்பரியமும் பெருமையும் மிகுந்த டில்லி மற்றும் திருச்சி வானொலி நிலைய தமிழ் செய்திகளுக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது, அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு செய்வது என அரசு அதிரடி காரியங்களில் இறங்கிவிட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதன் 25ஆம் ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் வேளை இது. இந்நிலையில், செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யப் போகிறது மத்திய அரசு. இந்த அமைச்சகத்தின்கீழ் இயங்கும் துறைகளின் பல கிளை அலுவலகங்களை மூட மத்திய அரசு ஆணையிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவுகள்தான். உதாரணமாக, டில்லி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் காலை 7.15 மணி, பிற்பகல் 12.40 மணி, இரவு 7.15 மணி என மூன்று முறை 10 நிமிட தமிழ் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், திருச்சி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் பிற்பகல் 1.45 மணிக்கு 10 நிமிட தமிழ் செய்தி அறிக்கையும், பகலில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை செய்திச் சுருக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்த செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் ஆணையிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேற்கண்ட வானொலி நிலையங்களின் செய்திப் பிரிவுகளில் பணியாற்றிவந்த செய்தித்துறை அதிகாரிகள், இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், டெல்லி வானொலி நிலைய தலைமை அலுவலகத்திலிருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த பிற மொழிச் செய்தி அறிக்கைகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படவுள்ளன. டெல்லியிலிருந்து தமிழ், மலையாளம், ஒடிசா, காஷ்மீரி உட்பட 14 பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலம், இந்தியிலும் செய்திகள் ஒலிபரப்பப்பட்டுவந்த நிலையில், ஆங்கிலம், இந்தி, காஷ்மீரி ஆகிய 3 மொழிகள் தவிர, மீதமுள்ள 13 மண்டல மொழிகளில் ஒலிபரப்பப்பட்டுவந்த செய்திகள் நிறுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம் மத்திய அரசு எதை சாதிக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இந்தியாவில் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக செய்தி தொலைக்காட்சிகள் பெருகிவிட்டபோதிலும் வானொலி நிலையங்கள் வழங்கும் செய்திகளுக்கு இன்னும் தனி மரியாதை உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதுமட்டுமல்ல, வானொலி செய்திகளுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் நம்பகத்தன்மை உள்ளது.
குக்கிராமங்களில் மின்சார வசதி இல்லாத எத்தனையோ குடிசைகளுக்கு செய்திகளைக் கொண்டு சேர்ப்பது இந்த வானொலிதான். பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் ‘மனம் திறந்து’ பேசும் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சிகளிலும், தூர்தர்ஷனிலும் நடத்தாமல் வானொலியில் நடத்துவதில் இருந்தே வானொலியின் சிறப்பை உணரலாம். அதிலும் குறிப்பாக, டில்லி தமிழ் வானொலி செய்திக்கு தனிச் சிறப்பு உண்டு. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா விடுதலை அடைந்த செய்தியை இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் நேயர்களுக்கு முதலில் தெரிவித்தது டில்லி வானொலிதான். இவ்வளவு சிறப்புமிக்க தமிழ் செய்திப்பிரிவை மூடும் முடிவு கண்டிக்கத்தக்கது; இதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
வானொலி செய்திகள் மூடப்படுவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக பிரச்சார் பாரதி அமைப்பு தெரிவித்துள்ளது. வானொலி நிலையங்களை நடத்துவது மட்டுமே பிரச்சார் பாரதியின் பொறுப்பு ஆகும். செய்திப் பிரிவுகள் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருகின்றன. செய்திப் பிரிவுகள் மூடப்பட்டதாக மத்திய அரசே அறிவித்துள்ளநிலையில், அதை பிரச்சார் பாரதியால் எவ்வாறு மாற்றமுடியும் என்பது தெரியவில்லை என்று வானொலி அதிகாரிகள் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன. பிரச்சார் பாரதி அமைப்பு அளித்துள்ள விளக்கத்தால் குழப்பம் விலகுவதற்குப் பதிலாக அது அதிகரித்திருக்கிறது.
மற்றொருபுறம், டில்லி மற்றும் திருச்சியிலிருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் செய்தி அறிக்கைகளை சென்னையில் உள்ள மண்டல செய்திப் பிரிவிலிருந்து ஒலிபரப்பும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், சென்னை மண்டல செய்திப் பிரிவிலிருந்து இணை இயக்குநர் பணியிடம் நீக்கப்பட்டுவிட்டநிலையில் இது சாத்தியமா? எனத் தெரியவில்லை. ஒருவேளை, அந்தச் செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பப்பட்டாலும் அதன் நோக்கம் நிறைவேறாது. ஏனெனில், டில்லியிலிருந்து ஒலிபரப்படும் தமிழ் செய்திகளில் தேசிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேபோல், திருச்சியில் இருந்து ஒலிபரப்பப்படும் செய்திகளில் விவசாயம், மீன்வளம் குறித்த செய்திகளுக்கும், காவிரி பாசன மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தச் செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும்போது தேசிய, உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆட்குறைப்பு என்ற பெயரில் மிகவும் அநியாயமான முடிவை மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்திருக்கிறது. டில்லி, திருச்சி வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் செய்திகளை நிறுத்தும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும். அவை இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் . அரசின் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவுகள்தான். மேலும், பத்திரிகை தகவல் அலுவலக மதுரைக் கிளை, செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தின் சென்னைக் கிளை ஆகியவற்றை மூடும் முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று இமயம் முதல் குமரி வரை அனைத்து தேசிய இனங்களும் குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில், அகில இந்திய வானொலியில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் செய்திகள் ஒலிபரப்புவது இல்லை என்று முடிவு எடுத்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. மாநில மொழிகளை நசுக்கும் செயல்களைவிட்டு, அகில இந்திய வானொலியில் அனைத்து தேசிய இனங்களின் தாய்மொழிகளிலும் செய்தி ஒலிபரப்பு சேவையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
பிராந்திய மொழி வானொலி செய்திகளை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசின் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்பதுதான் பலரது கோரிக்கையாக இருக்கிறது.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: