புதன், 10 ஆகஸ்ட், 2016

புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக துப்பரவு தொழிலாளர்கள் போராட்டம்


புதுச்சேரியில் அமைச்சரவை கூடி முடிவெடுத்து அமல்படுத்தவேண்டியவற்றில், ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுகிறார். சுயவிளம்பரங்கள் பெற்றுத் தரக்கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார் என்று புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.
அதேபோல், ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அதிகாரப் போட்டி நடைபெறுகிறது என்று புதுவை அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றம்சாட்டியிருந்ததார். இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஞாயிற்றுக்கிழமைகளிலும் துப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்தி வருகிறார் என்று துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிப்புத் தெரிவித்து, உழவகரை நகராட்சி துப்புரவுப் பிரிவு ஊழியர்கள் சங்கம், உழவகரை நகராட்சி ஊழியர்கள் நலம்காக்கும் சமத்துவ நலச் சங்கம் மற்றும் உழவகரை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அண்ணா தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து நேற்று தாரைதப்பட்டையுடன் பேரணி நடத்தினர்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையை நோக்கி கோஷமிட்டபடியே வந்த பேரணியை, காவல்துறையினர் தலைமை தபால் நிலையம் முன்பு தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமாக, விடுமுறை நாட்களில் கட்டாய வேலை வாங்குவது, ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வராத ஊழியர்களிடம் கட்டாய விடுப்புக் கடிதம் வாங்குவதை கைவிட வேண்டும். இல்லையென்றால், ஒட்டுமொத்தமாக வேலையைப் புறக்கணிப்போம் என்று போராட்டக் குழுத் தலைவர் சகாயராஜ் தெரிவித்தார்.  மின்னம்பலம்.கம

கருத்துகள் இல்லை: