வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியிருக்க கூடிய குற்றாலீஸ்வரன் அமெரிக்காவில் பணிபுரிகிறார்... இங்கு போதிய ஆதரவு இல்லையே!

An FB post about Kutraleeswaranசென்னை: இது பேஸ்புக்கில் நமது கண்ணில் பட்ட ஒரு பதிவு. Muthuramalingam Subramanian என்பவர் Sridar Elumalai என்பவருடன் இணைந்து போஸ்ட் செய்துள்ள பதிவு.
இப்போது ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். அது தொடர்பானது இது. படியுங்கள்:

தங்க மீன்கள்: இந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ். ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள். குற்றாலீஸ்வரன் என்று சொன்னால் மட்டுமே பலருக்கு இவர் யாரென்று தெரியும்.
இவர் ஒரு தங்க மீன்.
13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி கடந்தவர். அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி மிர் சென்னின் உலக சாதனையை முறியடித்தார். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி நீந்தி உலக கடலையே கலக்கினார்.
கின்னஸ் முதல் குப்புசாமி வரை இந்த ஈரோடு மாணவனை திரும்பி பார்த்தது.
அப்போ வருடம் 1994. நடுத்தர குடும்பம். இதுதான் டேக் லைன். உடனே தமிழ்நாட்டில் எல்லோரும் தன் பையன் போட்டு இருந்த ஸ்கூல் யூனிபோர்மை எல்லாம் கழட்டி விட்டு, குட்டி ஜட்டி மட்டும் மாட்டிவிட்டு, தன் மகன்தான் இனி அடுத்த குற்றாலீஸ்வரன் என்ற நம்பிக்கையில் குடும்பத்தோடு மஞ்சள் கட்டை பையில் ஜட்டி பனியனுடனும் தோளில் துண்டோடும் ஓடி “தும் தும்” என்று மகன்களை கிணற்றிலும் ஆற்றிலும் பிடித்து தள்ளிய தமிழகத்தின் பொற்காலம் அது.
An FB post about Kutraleeswaran
 ஒரு உலக சாதனை, கோடி இளம் சாதனையாளர்கள் தட்டி எழுப்பும் வல்லமை கொண்டது. குற்றாலீஸ்வரன் தட்டி எழுப்பியது மொத்த இந்தியாவை.
இந்த சலசலப்பு, அடுத்த 3 வருடத்தில் முடியும் போது குற்றாலீஸ்வரனுக்கு அர்ஜுனா விருது தன் 17 வயதில் கிடைத்தது.
அதற்கு பின் அவர் என்ன ஆனார்? அவரை நம்பி கிணறில் குத்திய பல இந்திய சிறுவர்கள் என்ன ஆனார்கள் ?
காத்து இருந்து இருந்து பின் எல்லோரும் மறந்து போனார்கள் என்பது மட்டுமே உண்மை. நாமும் மறந்து போனோம்.
நடந்தது இதுதான். இவரின் திறமையை பார்த்த இத்தாலிய நேஷனல் கோச் நீ இத்தாலிக்கு வந்துவிடு. உன்னை இந்த நாடு தத்து எடுத்து உன் வாழ்க்கையில் என்ன என்ன தேவையோ அனைத்தும் இந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். இத்தாலிய பிரதமரிடம் பேசி அனுமதி கூட வாங்கி ஆகிவிட்டது. ஓரே கண்டிஷன்…நீ இனிமேல் இத்தாலி நாட்டுக்கு மட்டுமே நீந்த வேண்டும். மற்றவற்றை என் நாடு பார்த்துக் கொள்ளும் என்றார். என்ன சொல்கிறாய் என்றார்?
13 வருட வயதில் யாரிடமும் கேட்காமல் எனக்கு இந்தியாதான் உயிர். உயிர் இல்லாமல் இந்த மீனுக்கு நீந்த வராது, மன்னிக்கவும் என்று சொல்லி தங்க மீனானார் குற்றாலீஸ்வரன். அதையே அவர் பெற்றோரும் ஆமோதித்தனர்.
ஆனால் அடுத்த சில மாதங்களில் …. சாதனை நடத்தியவுடன் பேசியவர்கள், ஊக்கமளித்தவர்கள், இந்திய அரசாங்கம், அரசு, அரசியவாதிகள், சோ called இந்தியன் சிஸ்டம் எல்லாம் அவரை மெதுவாக கை கழுவி விட ஆரம்பித்தன.
ஒரு long distance ஸ்விம்மிங் போட்டியில் உலக அளவில் கலந்து கொள்ள பணம் தேவை. முதலில் அரசாங்கத்தை நாடினார். இங்கே அங்கே என்று அழைக்கழித்தார்கள். அடுத்து பிரைவேட் நிறுவனங்களை நாடினார். கடலில் நீந்தும் போது கூட்டம் வராது என்று கிரிக்கட் பக்கம் திரும்பி கொண்டார்கள்.
அவர் அப்பாவே தன் சேமிப்பில் இருந்து செலவு செய்து போட்டிக்கு அனுப்பினார். ஜெயித்தால் கைதட்டுவார்கள். ஆனால் அவரின் அடுத்த போட்டிக்கு partial sponsorship கூட கிடைக்காமல் அவதிபட்டார்.
தனக்காக தான் தந்தை ஒவ்வொரு இடமாக sponsorship தேடி அலைவது பொறுக்காமல் தன் ஸ்கூல் பென்சிலில் swimming என்று எழுதி பின்னால் Full-stop ஒன்றை கண்ணீரில் வைத்தார். புள்ளி வைத்தது அவர் என்றாலும் வைக்க வைத்தது நாம்தான்.
An FB post about Kutraleeswaran
  காரணம் அப்போது நாம் எல்லோரும் மிகவும் பிசி. I mean பயங்கர பிசி.
ஒரு பக்கம் 10 மணிக்கு ராமானந் சாகரின் இராமாயணம் சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது.
அருண் கோவிலும், தீபிகாவும் காட்டில் அலையும் போது தாரா சிங் ஹனுமானாக பறந்து கொண்டு இருந்தார். பறப்பது முக்கியமா இல்லை நீந்துவது முக்கியமா?
குற்றாலீஸ்வரன் பார்த்து குளத்தில் குதித்த ஸ்கூல் மாணவர்கள் ஈர ஜட்டியுடன் இழுத்து வந்து டிவி பெட்டி முன் அமர வைத்தார்கள் பெற்றோர்கள். ஜட்டி காய்ந்தது. அறிவு தேய்ந்தது.
Idiot box முன்னால் குடும்பமாக இடியாப்பம் உண்டார்கள். இதிகாசத்தை நம்பாதவர்களுக்கு வேறு கடவுள்கள் இருந்தார்கள்.
ஜெயயலலிதா எனும் கடவுளை கைது செய்ததற்கு பஸ்ஸில் மாணவர்களை உயிரோடு வைத்து எரித்தார்கள்.
கருணாநிதி, வைக்கோ சண்டையில் சில தொண்டர்கள் தீக் குளித்து செத்தார்கள். ராமதாஸ் மரம் வெட்டினார்.
அன்புமணி மருத்துவ கல்லூரியில் மேங்கோ மரம் நாட்டார்.
அத்வானி ரதம் ஓடினார். சல்மான்கான் மான் சுட்டார். முத்துராமன் ஊட்டியில் மாடியில் இருந்து விழுந்து இறந்தார். ஸ்டாலினுக்கு பேர பிள்ளை பிறந்தான். பிரியங்கா காந்திக்கு வளைகாப்பு நடந்தது. ராகுல் காந்தி ரொட்டி தின்றார். ராஜீவ் காந்தி ஒரு முறை இறந்தார். காந்தி வருடா வருடம் அக்டோபர் மாதம் பிறந்தார்.
சேகுவாரா முதல் செங்கிஸ்ஸான் வரை நேஷனல் ஹீரோ ஆனார்கள். விமான நிலைய கண்ணாடி உடைந்தாலே அது breaking news.
Talent Shows நாடு எங்கும் நடக்க ஆரம்பித்தது. டிவியில் ஆப்பிளை வாயால் எடுத்து கடித்து காட்டினார்கள். ஜோக் சொல்லி சிரிக்காதவனுக்கு பரிசு கொடுத்தார்கள். Multiple Choice Questions கேட்டு கோடி வரை வென்றார்கள்.
செல்ல குரலுக்கு செல் போனில் ஓட்டு போட்டார்கள். நீயா நானாவில் கணவனும் மனைவியும் எதிர் எதிரே சண்டை போட்டுவிட்டு ஒன்றாக மீட்டர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று ஒரே கட்டிலில் படுத்து தூங்கினார்கள்.
அறிவு ஜீவி குழந்தைகள் அடுத்த நாளே பிறந்தது. இப்படி இந்தியா முழுவதுமே பிசியோ பிசி. ..நிற்க..
குற்றாலீஸ்வரன் யோசித்து பார்த்தார். இத்தனை பிஸியான சமூகத்தில் பூவா உண்ண நான் கடலில் நீந்திக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து இத்தாலிகாரனுக்கு கொடுத்த பதில் போல் இல்லாமல் அமெரிக்க விசா ஆபீசரிடம் உண்மையை சொல்லி
இன்று IBM ல் சாப்ட்வேர் என்ஜினீயராக கலிபோர்னியாவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
யோசித்து பாருங்கள்.
இன்று அமெரிக்காவில் அவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியை பார்க்கும் போது எப்படி அவரின் மனது என்னவெல்லாம் நினைத்து பார்க்கும் ? எப்படி வலிக்கும்?
இந்தியாவை விட்டு வெளியே வந்தவர்களில் பல குற்றாலீஸ்வரன்கள் இருக்கிறார்கள்.சாதனை படைத்த, படைக்க இருந்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இப்படி பல குற்றாலீஸ்வரன்களை இந்தியா உருவாக்கியது தான் இந்த நூற்றாண்டின் இந்தியாவின் மிகப் பெரிய இழப்பு.
எல்லோரும் கொத்தி எடுத்த Restaurant பிளேட்டில் வாடும் கடைசி சிக்கன் பீஸ் போல இன்று இந்தியாவில் மிச்சம் இருக்கும் திறமையை ஒவ்வொரு துறையிலும் கைவிட்டு எண்ணலாம்.
இதை Brain and Talent Drain என்பார்கள். இது ஒழுகி ஒழுகிதான் இன்று ரியோடி ஜெனிரோரோவில் நாறிக்கொண்டு இருக்கிறது. ஒலிம்பிக் என்பதால் இந்த துறையில் இது வெளியே தெரிகிறது.
தெரியாத பல துறைகளில் இருக்கும் நாற்றத்தை மக்கள் சுவாசிக்க பழகி கொண்டார்கள்.
உண்மையில், இந்தியாவில் தினம் தினம் பல தங்க மீன்கள் இறந்து இந்துமகா சமுத்திரம் வற்றிக்கொண்டு இருகிறது. தப்பி பிழைக்க பல மீன்கள் பசிபிக் கடல் நாடி வந்து பல வருடங்கள் ஆகிறது.
அதில் தப்பி பிழைத்த குற்றால் ரமேஷின் எனும் தங்க மீனின் கதைதான் இது.   tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: