வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வைகுண்டராஜனின் VV மினரல்சிடம் இருந்து 30 டன் கனிம மணல் அரசு பறிமுதல்... பேரம் படியல்ல?

தூத்துக்குடி: வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு எதிராக தமிழக அரசு அதிரடியைக் காட்டத் தொடங்கிவிட்டது. நெல்லை அருகே கொடைவிளையில் 30 டன் கனிம மணல் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் கனிம மணலை வெட்டி எடுக்கும் தொழிலில் ஏக போகமாக கோலோச்சி வருபவர் வைகுண்டராஜன். ஜெயலலலிதா தரப்பின் பல நிறுவனங்களில் பங்குதாரராகவும் இருந்தார் இதனால் அவரைப் பயன்படுத்தி அதிமுகவில் ஏற்றம் பெற்றவர்கள் பலரும் உண்டு... இன்றைய சசிகலா புஷ்பா உட்பட. பின்னர் ஜெயலலிதா தரப்புடன் வைகுண்டராஜனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நியூஸ்7 என்ற தனி சேனலை தொடங்கினார் வைகுண்டராஜன். அது முழுவதும் அதிமுகவுக்கு எதிரானதாக செயல்பட்டது. இதனால் சட்டசபை தேர்தலின் போது கனிம மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தார் ஜெயலலிதா.

பின்னர் ஆட்சியை மீண்டும் அமைத்த போதும் கனிம மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் எப்போது முதல் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா தம்மை அடித்தார் என ராஜ்யசபாவில் கதறி அழுத சசிகலா புஷ்பாவை தூண்டிவிட்டதே வைகுண்டராஜன் தரப்புதான் என்றும் தகவல்கள் பரவின.

எம்பி பதவியை ராஜினாமா செய்யாமல் ஜெயலலிதாவுக்கு சவால்விட்டுக் கொண்டிருக்கும் துணிச்சலை சசிகலா புஷ்பாவுக்கு தருவதே வைகுண்டராஜன்தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்று நெல்லை அருகே கொடைவிளையில் வைகுண்டராஜனின் விவிமினரல்ஸுக்கு கனிம மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் அதிரடியாக மடக்கினர். அந்த லாரிகளில் இருந்த 30 டன் கனிம மணல் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக அரசு சாட்டையை கையில் எடுக்க தொடங்கியிருப்பதால் வைகுண்டராஜன் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.tamiloneindia.com

கருத்துகள் இல்லை: