ஐ.பி.எம்
தோச பரிகாரம்சில நாட்களுக்கு முன் பெங்களூரு ஐபிஎம் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்ட செய்தியை பற்றி கேள்விப்பட்டவுடன் முதலில் நினைவுக்கு வந்தது என் கல்லூரி கால நண்பன் மகேஷ் தான்.
மகேஷும் நானும் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒன்றாகவே சுமார் 2 வருடம் வேலை தேடினோம். அவன் முதலில் டிசிஎஸ் நிறுவனத்தில் தான் வேலைக்குச் சேர்ந்தான். சில வருடங்களில் தொடர்பில்லாமல் போனது. பின்பு அவனது திருமணத்திற்கு அழைப்பதற்காக என்னைத் தொடர்புக் கொண்ட போது தான், அவன் ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பது தெரிந்தது.
மகேஷை அறிவாளி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராக படிப்பான், ஆனால் அபார கடவுள் நம்பிக்கை உள்ளவன். எப்பொழுதும் ஏதாவது மந்திரம் சொல்லியபடியே தான் இருப்பான். பரீட்சைக்கு முன் கலர் கலராக பல கயிறுகளை கையில் கட்டியிருப்பான். செமஸ்டர் கடைசி பரீட்சை முடிந்தவுடன் ஒரு கயிறையும் பார்க்க முடியாது. அவனுக்கு எல்லாம் அதிர்ஷ்டத்தால் தான் நடக்கிறது என்று நம்பிக்கை.
ஆனால் நான் கவனித்த வரை அவனிடம் சில ஆளுமைகள் இருந்தன. முதலில் அருமையான ஆங்கிலப் புலமை. இரண்டாவது எதையும் சுலபமாகவும், மற்றவருக்கு எளிமையாகவும் புரியும்படி விளக்குவான். தான் செய்யாத ப்ரொஜக்ட்டை பற்றி கூட இரண்டொரு வரிகள் படித்துவிட்டு, அவன் ஈடுபாட்டுடன் செய்ததை போல் அருமையாக விளக்கி விடுவான். இது போதாதா, ஐடி துறையில் பிழைக்க. ஆனால் அவனை கேட்டால் தாயத்து, வேண்டுதல்களால் தான் தனக்கு நன்மைகள் நடக்கிறது என்று கூறுவான்.

அவனிடம் பேசியும் பல மாதங்கள் ஆகிவிட்டது. எப்பொழுதாவது விழாக்களில் சந்திப்பதோடு சரி. போனில் பேசினாலும் அவன் வேண்டுதல்களின் புராணங்கள் குறித்தே அறுப்பான் என்பதால் பெரும்பாலும் பேசுவதை தவிர்த்து விடுவேன்.
இந்த முறை ஐபிஎம் வேலை நீக்கம் செய்தி பார்த்ததால் அவனை போனில் அழைத்தேன்..
அவன் போனை எடுக்கவில்லை. சிறிது நேரம் முயற்சிக்கு பின் என் இன்னொரு கல்லூரி நண்பன் பிரேமை அழைத்தேன். அவனும் பெங்களூரில் விப்ரோ நிறுவனத்தில் தான் பணிபுரிகிறான். அவனும், மகேஷும் மிகவும் இணக்கம்.
பிரேமை அழைத்து மகேஷ் ஏன் போன் எடுக்கவில்லை என்று கேட்டது தான்.
“எடுக்கலையா? அவன் அப்படித் தான் இருக்கான். வேலை போயிடிச்சுல்ல. அதான். அவனுக்கு வேலை போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் குழந்தை வேற பொறந்தது. ஒரு வேளை ஆஸ்பிடல்ல இருப்பான், டிரை பண்ணு. எடுத்தா எனக்கும் கூப்பிட சொல்லு” என்றான்.
வேலை போன பல பேரில் மகேஷும் ஒருவனா? சரி சரி குழந்தை பிறந்திருக்கிறது வாழ்த்துவோம், வேலை போனதை பற்றி ஆறுதலாக பேசுவோம், என்று விடாப்பிடியாக அவனை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். சில அழைப்புகளுக்கு பின் எடுத்தான்.
“சொல்லுடா” என்றான் சற்றே அழுத்தமாக.
நான் சாதாரணமாக பேசினேன்.
குழந்தையை பற்றி விசாரித்தேன். “நார்மலா சிசேரியனா” என்று கேட்டேன்.
“சிசேரியன்” என்றான்.
“ஏதாவது காம்பிளிகேஷனா”
“இல்ல இல்ல, எங்க வீட்ல நார்மலா இருந்தாலும் சரி இல்லையானாலும், சரி நாள் நட்சத்திரம், நேரம் பார்த்து சிசேரியன் தான் செய்வோம். என் தங்கச்சிக்கும் அப்படி தான். இந்த குழந்தைக்கும் அப்படி தான். குழந்த பொறக்குற நேரம் முக்கியம் இல்லையா?” என்றான்
சர்ப்ப தோசம்
சர்ப்ப தோசம்
எனக்கு பல வருடங்களுக்கு முன்னால் பல வண்ண கயிறுகள் நினைவுக்கு வந்தது. சற்றே கோபம் கூட. சிசேரியன் செய்தால் அந்த பெண் பழையபடி எல்லா வேலையிலும் சாதரணமாக ஈடுபட முடியாது, ஏதோ சிக்கல் என்று மருத்துவர் மடிவெடுத்து செய்தால் பரவாயில்லை நேரம், நட்சத்திரதிற்கெல்லாமா இப்படி செய்வார்கள்?
கோபத்தை அடக்கிக் கொண்டு சரி வேலை இழந்தவன், ஆறுதலாக பேசுவோம் என தொடர்ந்தேன்.
“நான் பிரேம் கிட்ட பேசுனேன்.”
அவனுக்கு சட்டேன்று புரிந்திருக்கும் போல. “ஆமான்டா காஸ்ட் கட்டிங்ல வேலை போய்டிச்சு”
அவன் வருத்தப்படுவது தெரிந்தது. நான் தொடர்ந்தேன்
“விடுடா. உனக்கு திறமை இருக்கு, எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. வேற கம்பனியில வேலை கிடைச்சிடும். வெளிய ட்ரை பண்ற இல்ல, நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?”
“இல்ல டா நான் எங்கேயும் ட்ரை பண்ணல. எப்படியும் ட்ரை பண்ணாலும் கிடைக்காது. 6 மாசத்துக்கு எனக்கு ஸர்ப்ப தோஷம் இருக்காம். தோஷம் கழிஞ்சதுக்கப்புறம் தான் வேல தேடப் போறேன்” என்றான்.
“நீ திருந்த மாட்டே. சரி அத விடு, கொழந்த எப்படி இருக்கு?”
“நல்லா இருக்குன்னு அம்மா சொன்னாங்க”
“அம்மா சொன்னாங்களா, நீ போயி பாக்கலையா?”
“இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”
“என்னடா முட்டாள் மாதிரி பேசுர?”
“அப்படி சொல்லாத, நானும் மொதல்ல நம்பல. ஆனா பாரு குழந்தை பொறந்த ரெண்டாவது நாள் டக்குனு வேலை போயிடிச்சு. அதுகப்புறம் தான் நானும் நம்பினேன்.”
எனக்கு எரிச்சல் தலைக்கேறியது.
“ஏன்டா உனக்கு வேல போக க்ளோபலைசேஷன், காஸ்ட் கட்டிங், அவுட்சோர்ஸிங்ன்னு ஆயிரம் காரணம் இருக்கு. பொறந்த குழந்த மேலே ஏண்டா பழி போடுற?”
“நீ எப்பவுமே இப்படி தான். சொன்னா நம்ப மாட்டே”
“நம்புற மாதிரி ஏதாவது எப்பவாது சொல்லி இருக்கியா. சரி எப்ப தான் கொழந்தையா போய் பாக்க போற? “
“தோஷம் கழிஞ்சப்புறம்” என்றான்
“தோஷ்ம் எப்ப கழியும்?”
மொதல்ல ஸர்ப்ப தோஷம் கழிக்க காளஹஸ்திரியில போய் ராகு கேது நிவர்த்தி பண்ணனும். அப்புறம் குழந்த பொறந்த தோஷம் கழிய சில பூஜைகள் பண்ணனும். எப்படியும் ஆறு மாசம் கழிச்சு தான் போவேன்.”
“தோஷம் கழிக்க ஆறு மாசம் ஆகுமா?”
“ஆமா அப்படி தான் ஜோஸியர் சொன்னாரு.”
“டே உன் குழந்தைய பாக்க ஜோசியர் யார்ரா நாட்டாமை..”
கொஞ்ச நேரம் மகேஷ் அமைதியாய் இருந்தான். அப்புறம் சற்று எரிச்சலுடன் பேசினான்.
“நீ  நம்ப மாட்டே, ஆனா நான் நம்புறேன். எனக்கு வேல கிடைக்கும்னு ஜோசியர் சொன்னாரு கிடைச்சுது, சம்பளம் ஏறும்ன்னு சொன்னாரு ஏறுச்சு, இப்ப தோஷம்ன்னு சொன்னாரு, வேலை போயிடுச்சு. இத விட வேற என்ன ப்ரூஃப் வேணும். தோஷம் கழிச்சா எனக்கு நல்லது நடக்கும்ன்னு சொல்றாரு. நம்பறேன்.”
“அவர் ஒன்ணும் சாதாரண ஜோசியர் இல்ல. என் முன் ஜன்மத்தையே கணிச்சு கரக்ட்டா சொல்றாரு. அவருக்கு எப்படி என் முன் ஜென்மம் பத்தியெல்லாம் தெரியுது ?”
எனக்கு கோபம் தலைக்கேறியது. இவனுக்கெல்லாம் ஐடி கம்பெனியில எப்படி வேல கொடுத்தாங்க, இவன் எஞ்சினியரிங் ஏன் படிச்சான் என்று நினைத்து கொண்டேன். சரி, இன்ஜினியரிங், ஐ.டின்னாலே முற்போக்குன்னு அர்த்தமா என்று நீங்கள் கேட்கலாம். அப்படி இல்லைதான். ஆனால் அறிவியல், பொறியியல் எல்லாம் ஷார்ப்பா கற்றுக் கொண்டதாக பெருமையடித்து விட்டு இப்படி சாமியாடினால் யாருக்குத்தான் கோபம் வராது? சரி போகட்டும் என்று சமாதானம் செய்து கொண்டாலும் அவன் சொன்ன முன் ஜென்மம் கதை கொஞ்சம் என்னை அசைத்தது.
“இரு இரு. என்ன முன் ஜென்மமா?” என்று இழுத்தேன்
“ஆமான்டா, முன் ஜென்மத்துல நான் ஒரு பண்ணையாரா இருதேனாம். அப்போ பல வேலையாட்கள கொடுமை படுத்தினேனாம். அவங்க அழுகை என்ன சுத்துதாம். அவங்க ஆன்மாவை சமாதானப் படுத்தினால் என் தோஷம் நீங்கும். அதனால் ஒரு பூஜை பண்ணனும்.”
“பூஜையா என்ன பூஜை”
“அதை பத்தி எனக்கு தெரியாது என் ஜோசிய காரர் 50,000 ரூபாய் கொடுக்க சொன்னார், பூஜையை அவர் பாத்துக்குவார். நான் அந்த நேரம் திருநள்ளாறு கோயில்ல இருக்கனும்.”
“இது என்ன சனி தோஷ நிவர்த்தியா ?”
“எனக்கு தெரியாது ஜோசியர் சொன்னார்.”
“ஏன்டா இதையெல்லாமா நம்புற?”
“நம்பி தான் ஆகணும், வேலை போயிடிச்சுல்ல”
“டேய் திரும்பவும்… வேலை போனதுக்கு க்ளொபல் எகனிமிக் க்ரைசிஸ் அது இதுன்னு ஆயிரம் காரணம் இருக்கு. இந்த முன் ஜென்மம் பண்ணையாரு கதையெல்லாம் டூ மச்.”
“சரி நீ சொல்ற மாதிரி எகனாமிக் க்ரைசிஸ் வச்சுக்க. அது ஏன் நான் உயிரோட இருக்கும் போது வரனும்? என்னை பாதிக்கனும்? தோஷம் அதனால் தான்.
“அடேய் இந்த கிரைசிஸ் 5 வருஷத்துக்கு ஒரு வாட்டி வந்துகிட்டே தான் இருக்கு முன்னத விட பின்னது மோசமா இருக்கு அவ்வளவு தான். க்ளோபல் கிரைஸிசுக்கு உன் ஜோசியர் ஏதாவது பூஜை பண்ணா நல்ல இருக்கும். சரி நானும் ஜோசியத்த நம்புறேன் நீ கொஞ்சம் உன் ஜோசியர்கிட்ட சொல்லி இந்தியா ஏன் இப்படி இருக்குன்னு மொத்த பேருக்கும் தோஷம் நிவர்த்தி பண்ண சொல்லேன்.”
“நான் ஏன் சொல்லனும். அவரே ஒவ்வொரு வருஷமும் இந்தியாவோட ராசிய பாப்பாரு கொஞ்ச வருஷமா இந்தியாவுக்கு நேரம் சரியில்ல, அவர் அத சொன்னா எந்த முட்டா பயலும் நம்ப மாட்டேங்குறான்.”
“அடப்பாவி இந்தியாவுக்கே ஜோசியமா! அப்ப அமெரிக்காவுக்கு என்ன சொல்லுதாம்”
“அத பத்தி நான் கேட்கல.. ஆனா நீ கண்டிப்பா ஒரு வாட்டி அவர பாரு உன் வாழ்கையில கஷ்டம் எல்லாம் நீங்கிடும்.”
“அப்படியா எவ்வளவு காசு கேட்பாரு”
“கன்சல்டிங் 1000 ரூபா. உன் முழு ஜாதகத்தையும் பார்க்க 5000 ரூபா.  சயின்டிபிக், சாப்ட்வேரெல்லாம் வச்சிருக்காரு. சாகுற நாள் வர பிரின்ட் அவுட் எடுத்து பைன்ட் பண்ணி கொடுத்துருவாரு..”
“கம்ப்யூட்டர் ஜோசியமா? சிவகாமி.. சிவகாமி..” என்றேன்
“நீ திருந்த மாட்ட” என்று போனை துண்டித்து விட்டான்..
ஐபிஎம் கம்பெனியில் ஐந்திலக்க சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை போனதும் ஜோசியன், திருநள்ளாறுன்னு சுத்துறதப் பாத்தா என்ன தோணுது? இப்படிப்பட்ட பாமர பக்தர்கள் இருக்கும் போது ஐபிஎம் ஹெச் ஆர் துறையினர் படுத்துக் கொண்டே ஊழியர்களை வேலை நீக்கம் செய்யலாமே? எந்த கபோதி கேக்கப் போறான், சண்டை போடப் போறான்?
(உண்மைச் சம்பவம் – ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது)
-    மணிவண்ணன். vinavu.com