புதன், 5 மார்ச், 2014

திமுக பக்கம் சாய்கிறது மார்க்சிஸ்ட்? ADMK கூட்டணியில் முன்னேற்றம் இல்லை ! ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப் படும் முன்னரே மிகுந்த எதிர்பார்ப்பில் முதல் கூட்டணி அதிமுகவில்தான் அமைந்தது. அதிமுக தலைமையுடன் உயர் மட்டத் தலைவர்கள் சந்தித்து முதல் முதலில் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் கூட்டணியை உறுதி செய்தன.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடத்தில் இருந்து தங்கள் வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவர் என்று அவர் தெரிவித்து, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு நிம்மதியை அளித்தார். தோழர்களே வினாஸ காலே விபரீத புத்தி என்றால் என்னவென்று விளங்கிடுச்சா? அப்ப தாபா ? 

இந்நிலையில், இரு கட்சிகளும் சேர்த்து குறைந்த பட்சம் 5 தொகுதிகள் கேட்டதாகவும், இல்லையெனில் தலா 2 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஆனால், அதிமுக தரப்பிலோ இரு கட்சிகளுக்கும் சேர்த்து 2 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்றும், தலா ஒரு தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடலாம் என்றும், அதற்காக கோயமுத்தூர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை ஒதுக்குவதாகவும் கூறியதாக கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், இதனை ஏற்க கம்யூனிஸ்ட்கள் மறுத்தனர். இருப்பினும், அதிமுக தரப்பில், ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு அதிமுக உதவியதாகவும், அந்த ஒரு தொகுதி போக மக்களவைக்கு ஒரு இடம்தான் ஒதுக்குவோம் என்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூறியதாகத் தெரிகிறது.
இதை அடுத்து கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலர் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, இரு கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார். மேலும் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் சுவர் விளம்பரம் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பிரசாரப் பணிகளிலும் மும்முரமாக இறங்கிவிட்டனர்.
இதனிடையே இன்று தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளன. இவர்களில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறுகையில், நாளை காலை, அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளதா என்பதை தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே முரசொலியில் திமுக தரப்பு கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டணி வலை விரித்துள்ளது. திமுக தரப்பு உயர் மட்டத் தலைவர்களும் கம்யூனிஸ்ட்களுடன் உரையாடி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கம்யூனிஸ்ட்கள் திமுக பக்கம் சாய்வரா அல்லது, பிரதமர் பதவிக்கு ஆசை காட்டப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பரா என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது..dinamani.com

கருத்துகள் இல்லை: