புதன், 5 மார்ச், 2014

டுபாக்கூர் மோடி ஒரு ஞானசூனியம் அதுவே முதலாளிகளின் தேவை ! மோடி : 24 X 7 தேசிய இம்சை !


நரேந்திர மோடி
பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்றார் மோடி. பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது பீகார் வந்தார்?
யிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியான ஒரு கொலைகாரனை, ஒரு முட்டாளாகவோ கோமாளியாகவோ கருத முடியுமா என்று வாசகர்கள் எண்ணலாம். “கிரேட் டிக்டேடர்” என்ற திரைப்படத்தில் இட்லரையும் முசோலினியையும் பற்றிய சார்லி சாப்ளினின் சித்தரிப்பு, ஒரு பாசிஸ்டின் ஆளுமைக்குள் முட்டாள்தனமும் கோமாளித்தனமும் பிரிக்க முடியாமல் பிணைந்திருப்பதை நமக்குக் காட்டியது.
பின்னர் நாம் ஜார்ஜ் புஷ்ஷைப் பார்த்தோம். ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் போர் தொடுத்துப் பல இலட்சம் மக்களின் பேரழிவுக்குக் காரணமாக இருந்த புஷ் ஒரு அடி முட்டாள் என்பது, அவருடைய மனைவி லாரா புஷ் ஒருவரைத் தவிர, அநேகமாக மற்றெல்லோரும் அறிந்த உண்மையாகத்தான் இருந்தது. அதன்பின் ஒரு பாசிஸ்டு முட்டாளாக இருக்க முடியுமா என்ற கேள்வி மறைந்து, பாசிஸ்டுகளுக்கு முட்டாள்தனம் ஒரு முன்நிபந்தனையோவென்று தோன்றத் தொடங்கியது. புஷ் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராவதற்கு அவரது முட்டாள்தனமே ஒரு தகுதியாக மாறிவிட்டது.

05-modi-14தற்போது மோடியின் “அபரிமிதமான வளர்ச்சி’’யைப் பார்க்கும்போது, ஆளும் வர்க்கம் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பாதி கிரிமினல் புத்தியும் பாதி முட்டாள்தனமும் கலந்து உருவாக்கப்பட்ட நபர்களையே விரும்புகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. முன்னர் 23-ஆம் புலிகேசி போன்ற பென்சன் ராஜாக்களை “யுவர் எக்சலன்சி” என்று அழைத்து ஏற்றி விட்டு, நாட்டை அடிமை கொண்ட பிரிட்டிஷ்காரர்களின் உத்தியை இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் அச்சுப் பிசகாமல் கடைப்பிடிக்கிறதென்பது தெளிவாகிவிட்டது.
தொலைக்காட்சி, இணையம் எங்கும் மோடி விளம்பரம். நாளேடுகள், வாரப் பத்திரிகைகளைப் பிரித்தால் மோடி பற்றிய செய்தி. பிரிக்காவிட்டாலும் அட்டையில் மோடி. ஊடகங்களில் மோடிக்கு எதிரான செய்திகளைப் பிரசுரிக்க வேண்டாமென்று கார்ப்பரேட் முதலாளிகள் நேரடியாகவே அழுத்தம் கொடுப்பதும், மீறி விமர்சிப்போர் களையெடுக்கப்படுவதும் தற்போது சந்தி சிரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்திலோ தினமணி, தினமலர், தினத்தந்தி முதல் ஜூனியர் விகடன், குமுதம் வரையிலான எல்லா பத்திரிகைகளும் பா.ஜ.க.வுக்கு கூட்டணி அமைத்துக் கொடுக்க புரோக்கர் வேலை பார்க்கின்றன. பிரபலமான 11 கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், காசு வாங்கிக் கொண்டு தேர்தல் கருத்துக் கணிப்பு செய்து கொடுக்கத் தயாராக இருப்பதை “நியூ எக்ஸ்பிரஸ்” என்ற தொலைக்காட்சி வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் 41% வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜூ.வி.-யில் திருமாவேலன் வெளியிட்ட கருத்துக் கணிப்பை வாசகர்கள் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
இந்த வரிசையில் “மோடியின் பிரச்சார பீரங்கி” என்ற தலைப்பில் சமீபத்திய இந்தியா டுடே வார இதழ் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் கண்டுள்ளபடி பார்த்தால், மோடியின் பிரச்சாரம் ஒரு பிரம்மாண்டமான மசாலா சினிமாவின் தயாரிப்பை நினைவுபடுத்துவதுடன், தற்போது மேடைகளில் மோடி உச்சரிக்கின்ற ஒவ்வொரு சொல்லும் மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையையும் நமக்கு அறியத் தருகிறது.
05-modi-15மோடியின் ஒவ்வொரு பேச்சுக்கான தரவுகளையும் 250 பேர்களைக் கொண்ட அணி மேற்கு அகமதாபாத்தில் உள்ள ஒரு பாசறையில் உருவாக்குகிறதாம். பிறகு அதை வைத்து 12 பேர் அடங்கிய ஒரு ஆராய்ச்சிக் குழுவினர் பேச்சைத் தயாரிக்கிறார்களாம். பிறகு அதனை மோடியின் நிர்வாக செயலர் கைலாஷ் நாதன் ஐ.ஏ.எஸ். சரி செய்து மோடியிடம் ஒப்படைப்பாராம். அப்புறம் அதில் மோடி கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்ல ஒரு தனிச்செயலர், அந்தந்த மாநிலத்துக்குரிய மக்கள் தொடர்பு ஆலோசகர் … என இந்தப் பட்டாளம் விரிகிறது. போதாக்குறைக்கு மோடியின் வெற்றிக்கு உழைப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பல நிதிமூலதன நிறுவனங்களின் உயரதிகாரிகள் தம் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்திருக்கிறார்களாம்.
“கூட்டங்களின் செய்தி வேண்டுமானால் விவாதத்துக்கு உரியதாக இருக்கலாம். ஆனால், அது ஒரு கலையாக வடிவமைக்கப்பட்டுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறது இந்தியா டுடே. இதைவிடத் தெளிவாக யாரேனும் உண்மையை உரைக்க முடியுமா?
ஆக, மோடியின் பேச்சு என்பது இவ்வளவு “அறிஞர் பெருமக்கள்” சேர்ந்து வைத்த குழம்பு! இதில் மோடியின் பாத்திரம் என்ன என்று கேட்டால், பாத்திரம் என்பதுதான் பதில். அந்த குழம்பைத் தாங்கி நிற்கும் சட்டிதான் மோடி. எம்.ஜி.ஆர். வாயசைத்த காரணத்தினால் பட்டுக்கோட்டையார் பாட்டு எம்.ஜி.ஆர். பாட்டாக மாறியதைப் போல, மண்டபத்தில் எழுதிக் கொடுத்த பேச்சு, மோடியின் பேச்சாகி, அதுவே பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாகவும் மாற்றப்பட்டு வருகிறது.
மோடியின் ஒவ்வொரு மேடைப்பேச்சும் எப்படி அமைக்கப்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறது இந்தியா டுடே. முதலில் கூட்டத்தினரின் மொழியில் பேசி, கேட்க வந்த மக்கள் பெருமைமிக்கவர்கள் என்பதை அவர் உணர்த்துவாராம். பிறகு உள்ளூர் பிரச்சினைகள் சிலவற்றைப் பற்றி பேசிவிட்டு, அப்படியே குஜராத்தில் எப்படி பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று மறைமுகமாகக் கோடி காட்டுவாராம். அப்புறம் காங்கிரசு அரசின் திறமையின்மை பற்றி நக்கலாகப் பேசி, தனக்கு வாய்ப்பு கொடுத்தால் உன்னதமான எதிர்காலம் இருக்கிறது என்று கூறிவிட்டு, இறுதியில் கூட்டத்துக்கு வந்த மக்களின் அருமை பெருமையை இன்னொரு முறை கூறி பேச்சை முடிப்பாராம்.
இதைத்தானே தேர்தல்தோறும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நைந்துபோன இந்த சரக்கைத் தயாரித்து மேடையேற்றுவதற்குத்தான் 250+12 வல்லுநர்கள், பாசறைகள், கணினி, லேப்டாப், தனி விமானம், கருப்புப் பூனை, ஐ.டி பட்டாளமாம்! “இந்திய வரலாறு காணாத அதிரடியான பிரதமர் வேட்பாளர் பிரச்சாரம்” என்று இந்தியா டுடே – வால் வியந்துரைக்கப் படும் மோடியின் பிரச்சார உரைகளுடைய யோக்கியதையைக் கொஞ்சம் உரசிப் பார்ப்போம்.
05-modi-16
வட இந்திய அரசியல்வாதிகள் உள்ளூர் மொழியில் இரண்டு வார்த்தை பேசி தமது பேச்சைத் தொடங்குவதும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்குப் போனால், கோழி இறகு, மயில் இறகு போன்றவற்றைத் தலையில் செருகிக் கொண்டு அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் காலாவதியாகிப்போன ஒரு பழைய உத்தி. இது போதாதென்று கருதியதனாலோ என்னவோ மோடி படைப்பூக்கத்துடன் சிந்தித்து தன் உரையைத் தொடங்குகிறார்.
சமீபத்தில் அருணாசலப் பிரதேசத்துக்கு சென்றிருந்த மோடி, அம்மாநிலத்தில் உள்ள ஆடி என்ற இனக்குழுவில் மோடி என்றொரு வம்சத்தினர் இருப்பதைச் சுட்டிக்காட்டி, “உங்களுக்கும் என் குடும்பத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது; அதை வரலாற்று ஆய்வாளர்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும்” என்றார். அப்புறம், “கிருஷ்ணன் எங்கள் ஊர், ருக்மணி உங்கள் ஊர், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது நமது உறவு” என்று அடித்துவிட்டார். ருக்மணி ஜென்ம பூமி என்று ஏதாவது இடத்தை வளைத்துவிடப் போகிறார்கள் என்று அந்த மக்கள் பீதியடைந்திருக்கக்கூடும். அப்புறம், “சூரியன் உங்கள் ஊரில் உதயமாகி எங்கள் ஊரில்தான் மறைகிறது” என்று ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை அடித்துவிட்டார். லேகிய வியாபாரியின் பேச்சை ஒத்த இந்த நாலாந்தரப் பேச்சுகளெல்லாம் உள்ளூர் மக்களுடன் ஐக்கியமாகும் மோடி வித்தைகளாம்.
அடுத்து ஒரிசாவுக்குச் சென்றார். “எங்கள் ஊரில் சோம்நாத். உங்கள் ஊரில் ஜெகந்நாத். ஜெய் ஜெகந்நாத்” என்று கூவி ஒரே வரியில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டினார். கருமை மூன்றெழுத்து, அருமை மூன்றெழுத்து, எருமை மூன்றெழுத்து என்ற விளங்காத அடுக்குமொழியை எத்தனை காலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதே டெக்னிக்தான்.
05-modi-17
அத்தோடு முடித்துக் கொண்டிருந்தால் பரவாயில்லை. வருங்கால பாரதப் பிரதமர் என்ற முறையில் வரலாற்றையும் அவர் ஒரு கை பார்க்க வேண்டியிருக்கிறதே. பீகாருக்குப் போனார். தன்னைக் கூட்டணியிலிருந்து கழற்றி விட்டுவிட்ட நிதிஷ்குமாரிடமிருந்து பீகார் மக்களைத் தன் பக்கம் கவர்ந்திழுக்க வரலாறைக் கையில் எடுத்தார். ஆர்.எஸ்.எஸ்.காரன் கையில் சிக்கிய வரலாறு கழுதை வாயில் சிக்கிய காகிதம் என்பது தெரிந்த கதைதானே. “பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்றார். “பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு வந்தவழியே திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது கங்கைக்கரையில் நம்மோடு சண்டை போட்டான்?” என்று மக்கள் யோசித்து முடிப்பதற்குள், அடுத்த குண்டை வீசினார். “மாபெரும் கல்வி மையமான தட்சசீலம் உங்கள் ஊரில் இருக்கிறது” என்று கூறி பிகாரிகளை பாகிஸ்தானியர்களாக்கினார். மவுரிய வம்சத்தை சேர்ந்த சந்திரகுப்தனை குப்த வம்ச மன்னன் என்று அடித்துக் கூறினார்.
இதுபோன்ற பிதற்றல்கள் அதிகரிக்கவே மோடி விவரம் புரியாமல் வரலாற்றுடன் விளையாடுவதாக காங்கிரசுக்காரர்கள் கேலி செய்தனர். ஆத்திரமுற்ற மோடி, “யார் வரலாறுடன் விளையாடுகிறார்கள்? 1930-இல் இலண்டனில் இறந்துபோன, விவேகானந்தரின் நெருங்கிய நண்பரான சியாமா பிரசாத் முகர்ஜியின் சாம்பலைக் கொண்டு வர நேரு ஏன் முயற்சிக்கவில்லை? அதை நான் அல்லவா கொண்டு வந்தேன்” என்று குஜராத்தில் முழங்கினார். சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பாரதிய ஜனதாக் கட்சியின் தாய்க்கழகமான ஜனசங்கத்தை 1951-இல் நிறுவியவர். 1901-இல் பிறந்து 1953-இல் காஷ்மீரில் இறந்தவர். விவேகானந்தரோ 1902-இல் இறந்தவர். மோடியின் வாயில் சிக்கிய அவருடைய சொந்தக் கட்சியின் வரலாறும், தலைவரின் வரலாறும் கழுதை வாய்க் காகிதமாகிவிட்டது. ஒரே வரியில் எண்ணிலடங்காத உளறல்கள்! இதைத் தயாரித்துக் கொடுப்பதற்கு பாசறையாம், வல்லுநர்களாம்!
“என் வேட்டி அவுந்ததுகூடத் தெரியாம நீங்க என்னடா பண்ணிக்கிட்டிருந்தீங்க?” என்று தனது கைத்தடிகளைக் கேட்கும் வடிவேலுவைப் போல, வல்லுநர்களை மோடி வறுத்திருக்கக்கூடும். மோடிக்காக போலி என்கவுன்டர்களை நடத்திவிட்டுச் சிறையில் கிடக்கும் வன்சாராவைப் போல, இப்படி உரை தயாரித்துக் கொடுத்து தனது மானத்தை வாங்கிய “கொல்லர்களை”ப் புலிகேசி நாளை சிறையில் அடைக்கவும் கூடும்.
05-modi-18
போகின்ற மாநிலங்களிலெல்லாம் உள்ளூர் பிரச்சினைகளைக் கூறி, அப்படியே நாசூக்காக குஜராத்தின் அருமை பெருமைகளை அடித்து விடவேண்டும் என்று மோடிக்கு ஆசைதான். இருந்தாலும், காங்கிரசு ஆளும் மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் அப்படிப் பேசமுடியாத ஒரு நிலைமை! தனிப்பெரும்பான்மை கிடைக்காதென்பதால், பிரதமராவதற்கு எப்படியும் பலர் காலில் விழ வேண்டியிருக்கும் என்பது மோடிக்குத் தெரியாததல்ல. அதனால்தான் மே.வங்கத்துக்கு சென்ற மோடி மம்தாவைப் பாராட்டி விட்டு, போதாக்குறைக்கு “2004- இல் பிரணாப் முகர்ஜியை காங்கிரசு கட்சி பிரதமராக்காதது ஏன்?” என்று கேட்டு வங்காளி உணர்வையும் தட்டிவிட்டு ஓட்டாக்கப் பார்த்தார். “வங்கத்தில் மம்தா, டில்லியில் நான், தலைமையில் பிரணாப் முகர்ஜி இருந்தால் எப்படி இருக்கும்?” என்று வாயில் எச்சில் ஒழுகப் பேசினார். “மொழிவாரி மாநிலங்களைப் பிரித்ததே காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சிதான்” என்று அவர் திருச்சியில் பேசியது நினைவிருக்கிறதா? அது வேறவாய்; வங்காளத்தில் பேசியது நாறவாய்!
தனது எதிர்காலக் கூட்டாளியாகப் போகின்ற ஜெயலலிதாவை அனுசரித்துப் போகவேண்டும் என்பதில் மோடி எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், பிரதமர் பதவியில் மட்டுமின்றி, வேறு பல விசயங்களிலும் இருவருக்குமிடையே பலத்த போட்டியும் இருக்கத்தான் செய்கிறது.
05-modi-19
“நான் ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் தூங்குகிறேன்” என்று எல்லா கூட்டங்களிலும்சொல்வார் மோடி. “உங்கள் அன்புச் சகோதரி நாளொன்றுக்கு 22 மணி நேரம் உங்களுக்காக உழைக்கிறாள்” என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தன்னுடைய தூக்கம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. “குஜராத்தின் லோக் ஆயுக்தா நீதிமன்றத்துக்கு நான் சொல்கின்ற ஆளைத்தான் நீதிபதியாகப் போட வேண்டும். அந்த நீதிபதிக்கும் என்னை (முதல்வரை) விசாரிக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது” என்று கூறி, 2002 முதல் வழக்கு நடத்தி இழுத்தடித்து வருகிறார் மோடி. அம்மாவோ 1997- இலிருந்து சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் வரலாறு படைத்தவர். “நான் சொல்கின்ற அரசு வக்கீல்தான் எனக்கு எதிராக வழக்கு நடத்த வேண்டும். நான் சொல்கின்ற நீதிபதிதான் என்னை விசாரிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி கண்டவர்.
“குஜராத்தான் நம்பர் ஒன்” என்று மோடி ஒருபுறம் சோல்லிக் கொண்டிருக்க, “முதலீடுகளை ஈர்ப்பதில் கடந்த 4 ஆண்டுகளில் குஜராத்தை விடத் தமிழகம் முன்னணியில் இருக்கிறது” என்று நைசாகக் குத்தியிருக்கிறார் ஜெயலலிதா. இது கிரேட் டிக்டேட்டர் படத்தில் வரும் இட்லர், முசோலினி சந்திப்பு காட்சியில் இரண்டு அற்பர்களும் போட்டி போட்டுத் தத்தம் நாற்காலிகளின் உயரத்தை அதிகரித்துக் கொண்டு, “உன்னை விட நான் பெரியவன்” என்று காட்டிக்கொள்ளும் காட்சியை நமக்கு நினைவூட்டுகிறது.
மம்தா, ஜெயாவை மட்டுமல்ல; யார் தயவு தேவைப்படும் என்று அனுமானிக்க முடியாதாகையால், எந்த மாநிலக் கட்சியையும் மோடியால் தாக்கிப் பேச முடியாது. காங்கிரசுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த கொள்கை வேறுபாடும் இல்லாத காரணத்தால், காங்கிரசின் கொள்கைகளையும் தாக்க முடியாது. ஆகவே, “க-வுக்கு க, ப-வுக்கு ப” என்ற டி.ராஜேந்தர் பாணியில் பஞ்ச் டயலாக்குகளை இறக்குகிறார் மோடி.
“ஹார்வர்டா, ஹார்டு ஒர்க்கா பார்த்து விடுவோம்” என்று சிதம்பரத்துக்குச் சவால் விடுகிறார். “60 ஆண்டுகள் காங்கிரசிடம் ஆட்சியைக் கொடுத்தீர்கள், 60 மாதங்கள் என்னிடம் கொடுங்கள்” என்று கெஞ்சுகிறார். மோடியின் வாயில் விழுந்த எல்லா புள்ளிவிவரங்களும் லாரியில் சிக்கிய நாயின் கதிக்கு ஆளாகின்றன. “வாஜ்பாயி 6 ஆண்டு ஆட்சியில் 6 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்” என்று கான்பூரில் பேசினார் மோடி. இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது. “ஆறுக்குஆறு” – அவ்வளவுதான். (இதே 6 ஆண்டுகளில் வாஜ்பாயி 1.16 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினார் என்று சென்னையில் மோடி கூட்டத்தில் பேசியிருக்கிறார், எச்.ராசா)
காங்கிரசு அரசு சி.பி.ஐ. மூலம் தனது அரசியல் எதிரிகளை வேவு பார்க்கிறது என்றும், சி.பி.ஐ. என்பது, ‘காங்கிரசு பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்’ என்றும் போகுமிடம் எல்லாம் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் மோடி. மான்சி சோனி என்ற பெங்களூரு பெண்ணுடன் மோடி கள்ளத் தொடர்பு வைத்திருந்ததும், அந்தப் பெண்ணைத் துரத்தி, அவள் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு, வேறு ஆணுடன் பழகுகிறாளா என்று மோப்பம் பிடித்துத் தனக்குத் தகவல் சொல்லுகின்ற (மாமா) வேலைக்கு, குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு அதிரடிப்படை, குற்றப்பிரிவு, உளவுத்துறை ஆகியவற்றின் ஏட்டு முதல் எஸ்.பி. வரையிலான அதிகாரிகளையும் மோடி பயன்படுத்தினார் என்பதை நிறுவும் தொலைபேசி ஒலிப்பதிவுகளும் வெளிவந்து சந்தி சிரித்துவிட்டன. அத்தோடு முடிந்தது சி.பி.ஐ. பேச்சு.
“சும்மா ஊழல், ஊழல் என்று பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை. நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சியைச் சமாளிக்க உதார் விட்டார். “அம்பானியின் சுவிஸ் வங்கி கணக்கு எண் இதோ இருக்கிறது. என்ன சொல்கிறாய்?” என்று மோடிக்கு கேள்வி எழுப்பினார் கேஜ்ரிவால். அத்தோடு கருப்புப் பணம் பற்றிய பேச்சையும் தலைமுழுகிவிட்டார் மோடி.
டில்லி வெற்றியைத் தொடர்ந்து ஆம் ஆத்மியின் செல்வாக்கு பரவத்தொடங்கவே, தானும் ஒரு ஆம் ஆத்மிதான் என்று நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு மோடி தள்ளப்பட்டுவிட்டார். “மோடிக்கு அரசியலும் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது; டீ விற்கத்தான் தெரியும்” என்று மணி சங்கர் ஐயர் பேசியதை கப்பென்று பிடித்துக் கொண்டார் மோடி. “பாசி மணி ஊசியெல்லாம் விப்போமுங்க, காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்” என்ற பாட்டைப் போல, “நான் டீ விற்பேனே தவிர, நாட்டை விற்க மாட்டேன்” என்று பஞ்ச் டயலாக்கை எடுத்து விட்டார். “நாட்டின் எரிவாயுவை அடிமாட்டு விலைக்கு அம்பானிக்கு விற்றதைப் பற்றி மோடி என்ன சொல்கிறார்?” என்று கேட்டது ஆம் ஆத்மி. அத்தோடு பஞ்ச் டயலாக்குக்கும் இறங்கியது ஆப்பு.
அம்பானி, டாடாக்களுடன் டிசைனர் உடை, டிசைனர் தாடியில் தோன்றிக் கொண்டிருந்த மோடியின் பிம்பத்தை மாற்றி அவரும் “ஆம் ஆத்மிதான்” (எளிய மனிதன்தான்) என்று நம்பவைக்க வேண்டுமானால் “மோடி டீ குடிப்பதை உலகமே பார்க்கச் செய்வதுதான் ஒரே வழி” என்று முடிவு செய்த அவருடைய வல்லுநர் குழு, “சாய் பே சர்ச்சா” (டீக்கடை பெஞ்சு) என்ற “லைவ் டெலிகாஸ்டை” அரங்கேற்றியது. அன்று மோடி குடித்த ஒரு டீக்கான செலவு 250 கோடி ரூபாய்.
05-modi-20
உடனே இந்த “கான்செப்டை” காக்கி அரை டவுசர்கள் பிடித்துக் கொண்டார்கள். கார்கில் விநாயகர், கசாப் விநாயகர் என்று விநாயகரை டெவலப் செய்தது போல, ஆங்காங்கே மோடி டீக்கடை திறந்தார்கள். அடுத்து மோடி மீன்கடை. “மோடி பிரதமரானால், சிங்களப் படையின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காப்போம்” என்று கையில் வஞ்சிர மீனுடன் மூக்கைப் பிடித்துக் கொண்டு முழங்குகிறார் இல. கணேசன். வாக்காளர்களில் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அடுத்து “மோடி சாராயக்கடை”யையோ, குறைந்தபட்சம் சாக்கனாக் கடையையோ விரைவில் எதிர்பார்க்கலாம்.
ஏழைப்பங்காளன் அவதாரம் ஒரு புறம், இன்னொருபுறம் சூத்திர அவதாரம். 1980-களின் துவக்கத்தில் குஜராத்தில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்தையும், தலித்துகளுக்கு எதிரான வன்முறையையும் தலைமை தாங்கிய நடத்திய மோடி, “அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பறிக்க சதி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோரின் குரல் ஓங்கி ஒலிக்கும்” என்று கொச்சியில் புலையர் சங்க மாநாட்டில் தேனொழுகப் பேசியிருக்கிறார். உ.பி.யில் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் ஓட்டுப் பொறுக்குவதற்காக, மோடி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர் என்ற பிரச்சாரம் நடக்கிறது. அது மட்டுமல்ல, கன்சிராமுக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்ற கோரிக்கையையும் உ.பி. மாநில பாரதிய ஜனதாக் கட்சி முன்வைத்துள்ளது.
தான் முஸ்லிம்களின் எதிரி அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக, வாடகைக்குப் பிடித்த ஆட்களுக்கு குல்லா போட்டு விட்டு முன்வரிசையில் உட்கார வைத்தார். ஹோல்சேலில் குல்லா கொள்முதல் செய்த பில் வெளிவந்து குட்டு உடைந்து விட்டது. “கோயிலைவிட கக்கூசுதான் முக்கியம்” என்று அதிரடியாகப் பேசி, தான் மாறி விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார். “அப்புறம் 2500 கோடி ரூபாய்க்கு படேலுக்கு எதற்கு சிலை வைக்கிறா? அந்தக் காசுக்கு கக்கூசு கட்ட வேண்டியதுதானே” என்று அடித்த பந்து மோடிக்கே திரும்பி வந்தது. “இனி வெக்கமானம் பார்த்தால் வேலைக்கு ஆகாது” என்று முடிவு செய்த ராஜ்நாத் சிங், “கடந்த காலத்தில் செய்த எல்லா தவறுகளுக்கும் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதாக” இப்போது அறிவித்திருக்கிறார்.
மோடியின் வல்லுநர் படை அவருக்கு மட்டும் வேசம் போடவில்லை. அசந்தால் ஒபாமாவுக்கே பவுடர் போடுகிறது. எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் உரையைத் தொலைக்காட்சியில் ஒபாமா பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை உல்டா செய்து, மோடியின் உரையை ஒபாமா பார்க்கிறார் என்று பரப்பியது. குட்டும் உடைந்தது. எம்.ஜி.ஆர். – சிவாஜி போன்ற எல்லா நட்சத்திரங்களுக்கும் ரேகை பார்க்கும் படத்தை மாட்டி வைத்திருக்கும் ஜோசியக்காரனைப் போல, அமிதாப்பும் ரஜினியும் மோடியை ஆதரிப்பது போல வீடியோ, புகைப்பட உல்டாக்களை இறக்கவே, அவர்களே அதனை மறுத்தார்கள். இதற்காகவெல்லாம் காக்கி அரைடவுசர்கள் வெட்கப்படவில்லை. அடுத்தது டென்டுல்கரின் மகள் பெயரில் டிவிட்டர் தளத்தை உருவாக்கி, மோடியை அவர் ஆதரிப்பதாக அதில் எழுதினார்கள். “என் மகளுக்கு டுவிட்டர் கணக்கே இல்லை” என்று டென்டுல்கரே அறிவிக்க வேண்டியதாயிற்று.
“வளர்ச்சி நாயகன், டீக்கடைக்காரர், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதி என்று எந்த தரப்பினருக்கு எது பொருத்தமாக இருக்குமோ, அதற்கேற்ப மோடி பல முகங்களைப் பிரித்துக் கொண்டுள்ளார்” என்று மோடியின் இத்தகைய அருவெறுப்பான கழைக்கூத்துகளுக்கு சென்ட் அடித்து, ஜிகினா சொற்களில் விவரிக்கிறது, இந்தியா டுடே.
05-modi-21
தனது ஆண்மையைப் பறைசாற்றிக் கொண்டார் மோடி. “எல்லோராலும் குஜராத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கு 56 அங்குலம் கொண்ட மார்பு தேவைப்படுகிறது” என்று உ.பி.யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பீற்றிக் கொண்டார் மோடி. எத்தனை கிராம் எடையுள்ள மூளை தேவை என்பது பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை. ஏனென்றால், பயில்வானின் உடல் மீது தன் தலையை ஒட்ட வைத்து வரலாற்றில் இடம்பெற முயற்சிக்கும் 23-ஆம் புலிகேசியின் நடவடிக்கைக்கும் மோடியின் பிரச்சார உத்திகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
“சரி, நீங்கள் பிரதமரானால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு ஐந்து டி” (technology, talent, tourism, trade, tradition š தொழில்நுட்பம், திறமை, சுற்றுலா, வர்த்தகம், பாரம்பரியம்) என்று கையை விரித்துக் காட்டுகிறார் மோடி. அதில், தொழில்நுட்பம், திறமை, சுற்றுலா, வர்த்தகம் என்ற முதல் நான்கு விரல்களும் தரகு முதலாளிகளின் நலனுக்கானவை. ஐந்தாவதாகக் கூறப்படும் பாரம்பரியம் என்பது கட்டைவிரல் – அது பார்ப்பனியத்துக்கானது. மோடி ஆட்சிக்கு வந்தால் இந்த ஐந்து விரல்களும் உழைக்கும் மக்களுக்கு எதிராக மடக்கப்படும். அதுதான் பார்ப்பன பாசிசம்.
- தொரட்டி vinavu.com

கருத்துகள் இல்லை: