செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பொன்னம்பலம்: ரெட் லைட் ஏரியாவை அனுமதிக்கணும்! ரேப் சீனுன்னா நடுங்கிடுவேன்

தமிழ் சினிமாவில் அதிக ரேப்களை நிகழ்த்தியவர் என்ற 'கெட்டப் பெயரை’ சம்பாதித்தவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். அ.தி.மு.க-விலும் சேர்ந்து மேடைப் பேச்சுகளில் கலக்கி வருகிறவரிடம் வகை தொகையாகக் கேட்ட கேள்விகளில் இருந்து...
''ரேப் சீன்ல நடிக்கிறப்போ பாத்திரமாவே மாறிடுறீங்களே, வீட்டுல திட்ட மாட்டாங் களா?''

''அதை ஏன் கேட்குறீங்க. வீட்டுல ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. என்னாலதான் ஒழுங்கா நடிக்க முடியாது. அதுதான் பெரிய கொடுமையே. கஷ்டமான சண்டைக் காட்சியிலேயும் ரிஸ்க் எடுத்து சாவு வரை தொட்டுப்பார்த்து திரும்பி இருக்கேன். ஆனா, ரேப் சீனுன்னா நடுங்கிடுவேன். 'ஸாரிம்மா ஸாரிம்மா’னு சொல்லுவேன். பக்கத்துல போக கூச்சமா இருக்கும். பாவம் அந்த நடிகைங்களே, 'சார், என்னா சார்... இவ்ளோ குழந்தையாட்டம் இருக்கீங்க’னு சொல்லுற அளவுக்குக் கூச்சப்படுவேன். மனசுக்குள்ள ராகவேந்திரரை நினைச்சுட்டுதான் அந்த மாதிரி சீன்ல நடிப்பேன். கடவுள் சத்தியமா ஒரு கெட்ட எண்ணமும் எனக்கு வராது. நல்ல வேளை இப்போவெல்லாம் ரேப் சீன்ஸ் கொடுக்கிறது இல்லை.''
''என்ன சார், நான் என்னமோ நினைச்சுக் கேள்வி கேட்டா, இப்படிப் பொசுக்குனு சொல்லிட்டீங்க. யாரு சார் நீங்க? இம்புட்டு வெள்ளந்தியா இருக்கீங்க?''
''பூந்தமல்லிதான் பொறந்தது. நாங்க அண்ணன் தம்பிங்க 11 பேரு. அப்பா வாஹினி ஸ்டூடியோவில இன்சார்ஜா இருந்தார். எல்லோரும் சினிமாவுல சொல்லிவெச்ச மாதிரி எடிட்டிங்ல இருந்தோம். நான் மட்டும் யோகா, களரினு ஒரு மார்க்கமாத் திரிவேன். தாஸ் மாஸ்டர் மூலமா இந்தியில அமிதாப், தர்மேந்திரா, ஜிதேந்திராவுக்கு டூப் போட்டுக்கிட்டு இருந்தேன்.
என்னைக் கூட்டி வந்ததே விக்ரம் தர்மா சார்தான். அவரோட புண்ணியத்தால முதன்முதலா தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தேன். வாசு சார் அவரோட படங்கள்ல எனக்கு ஒரு ஃபைட் வெச்சிடுவாரு. விஜயகாந்த், பொன்னம்பலத்தைக் கூப்பிடுங்கனு மறக்காமச் சொல்லிடுவார். 'வால்டர் வெற்றிவேல்’ல கபாலியா நடிச்சேன். அதுக்குப் பிறகு இன்னும்கூட என்னை ஊருநாட்டுல யார் பார்த்தாலும் கபாலினுதான் சொல்லுவாங்க. ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல எல்லா மொழிகள்லேயும் அடி வாங்கிட்டுப் பொழப்பு நல்லா ஓடுது.''
''நிறைய ரேப் சீன்ஸ்ல நடிச்சவருங்கிற முறையில உண்மையிலேயே பாலியல் பலாத்காரங்கள் நிஜத்துல குறையணும்னா என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?''
'' ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம தொடுறது உலகமகா பாவம். என்னைப் பொறுத்தவரை மும்பை மாதிரி ரெட்லைட் ஏரியாவை அரசே முக்கியமான நகரங்கள்ல அங்கீகரிக்கணும். அந்தக் காலம் மாதிரி இப்போ சின்ன வயசுல யாரும் கல்யாணம் பண்ணிக்கிறதில்லை. குடும்பம், வறுமை, கடமைனு அலைக்கழிக்கப்படுற இளைஞன் கட்டுப்பாட்டை இழந்துடு றான். எப்பவுமே கட்டுப்பாடுகள் இருக்குற இடத்துலதான் விதிகளை மீறணும்கிற எண்ணம் தலை தூக்கும். செக்ஸ்ங்கிற விஷயம் அவனுக்கு ரெட்லைட் ஏரியா மூலமா கிடைச்சா, காமத்துக்கு வடிகால் கிடைச்சுடும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.''  
- ஆர்.சரண், படம்: பொன்.காசிராஜன்
vikatan.com

கருத்துகள் இல்லை: