புதன், 3 ஏப்ரல், 2013

சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ? ஆமா இல்லை ஆமா இல்லை

முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என, வருமான
வரித்துறையினரிடம் கூறி விட்டு, தற்போது இல்லை என்று கூறுவது ஏன்? என்று அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துமணியிடம் சிறப்பு கோர்ட் அரசு வக்கீல் பவானி சிங் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அரசு வக்கீல் பவானிசிங் முன்னாள், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., முத்து மணியிடம் நேற்று குறுக்கு விசாரணை நடத்தினார்.பவானி சிங்: ஜெயலலிதாவுக்கும், சுதாகரனுக்கும் என்ன உறவு? முத்துமணி: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் அல்ல.
அரசு வக்கீல்: (ஒரு பேப்பரை காண்பித்து) 2002 ல் வருமான வரி துறை துணை கமிஷனரிடம் அளித்த அறிக்கையில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என கூறியுள்ளீர்கள். ஏன் இந்த முரண்பாடு.
முத்துமணி: அப்படி கொடுத்திருந்தால் அது தவறு.
அரசு வக்கீல்: அ.தி.மு.க., வினரிடம் 60 லட்சம் ரூபாய் வசூலித்து ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்ததாக கூறுவது தவறு. சுதாகரன், தன் வளர்ப்பு மகன் என்பதால் திருமண செலவுகள் அனைத்தையும் ஜெயலலிதா செய்தார். அவர் மீது வழக்கு பதிவானவுடன் அவரை காப்பாற்ற பொய் சொல்கிறீர்கள்.
முத்துமணி: நான் சொல்வது உண்மை.
இதையடுத்து திருப்பூர் ஈஸ்வரன், பொள்ளாட்சி ஜேம்ஸ் ராஜா, கோயம்புத்தூர் ராஜ கோபால். கடூர் நெடுஞ்செழியன், நாகப்பட்டினம் வாசு ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
ராஜகோபாலிடம் விசாரணை நடத்திய போது, "தினமலர், தினத்தந்தி, நமது எம்.ஜி ஆர் ஆகிய பத்திரிகைகளில், அ.தி.மு. க. நாளிதழ் எது? அதன் உரிமையாளர், பதிப்பாளர் யார்?' என, கேள்வி எழுப்பியதோடு, நீங்கள் பணம் செலுத்தியதாக கூறப்படுவது தவறு என்றும் பவானி சிங் தெரிவித்தார்.
சாட்சிகள்: நாங்கள் சொல்வது உண்மை.
இந்த வழக்கு விசாரணையை, நீதிபதி பாலகிருஷ்ணா இன்று ஒத்தி வைத்தார். இன்று ஆறு பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை: