வியாழன், 13 செப்டம்பர், 2012

அன்புமணி ராமதாஸ் கோர்ட் படி ஏறினார்!

Viruvirupu
எப்படித்தான் தலைகீழாக நின்று முயற்சித்தும் விசாரணையில் இருந்து தப்பிக்க முடியவில்லை. பா.ம.க. சின்ன ஐயா அன்புமணி ராமதாஸ் மீதான சி.பி.ஐ. வழக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் 9 பேருக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அக்டோபர் 30-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என டில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த முறைகேடு வழக்கின் ப்ரீலிமினரி ஹியரிங், நேற்று நீதிபதி தல்வந்த்சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
எப்படி சமாளிக்கலாம்?
சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கின் தொடக்க விசாரணைக்காக, அன்புமணி ராமதாஸ், முன்னாள் சுகாதாரத் துறைத் துணைச் செயலர் கே.வி.எஸ். ராவ், அமைச்சத்தின் செக்ஷன் அதிகாரி சுதர்சன் குமார், டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ். தூபியா, டி.கே. குப்தா, இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரித் தலைவர் சுரேஷ் பதோரியா, முன்னாள் டீன் எஸ்.கே. டோங்கியா, இயக்குநர் கே.வி. சக்சேனா, நிர்வாகிகள் நிதின் கோத்வால், பவன் பம்பானி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
பா.ம.க. வட்டாரங்களில், அன்புமணி கோர்ட்டில் ஆஜராவது நடக்கவே நடக்காது என்று அடித்துச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்ட சி.பி.ஐ., அன்புமணியை இந்த வழக்கில் முதல் தடவையாக நேற்று கோர்ட்டுக்கு வர வைத்து விட்டது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை நகல்கள் கிடைத்ததை அவர்களின் வக்கீல்கள் மூலம் நீதிபதி உறுதிப்படுத்திக் கொண்டார். இந்த வழக்கின் வாதங்களைத் தனித்தனியாகத் தொடர தேதி ஒதுக்கும்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிபதியை கேட்டுக் கொண்டனர். (காலம் கடத்தும் மார்க்கம்)
ஆனால் நீதிபதி தல்வந்த் சிங், அந்த கோரிக்கையை நிராகரித்தார். “வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் அனைத்து நீதிமன்ற வேலை நாள்களிலும் இந்த வழக்கு விசாரணை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்” என்றார்.
நம்ம கா.வெ.குரு அண்ணன் பற்றி நீதிபதிக்கு சரியாக தெரியவில்லை போலும்!

கருத்துகள் இல்லை: