திங்கள், 10 செப்டம்பர், 2012

போலீஸாரை வலை வீசி கடலுக்குள் இழுத்தத் தள்ள திட்டமிட்ட போராட்டக்காரர்கள்

கூடங்குளம்: போலீஸார் தங்களைத் தாக்கினால் அவர்களை மீன்பிடி வலைகள் மூலம் வலை வீசிப் பிடித்து கடலுக்குள் இழுத்துத் தள்ள போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், அதை முன்பே கண்டுபிடித்து விட்ட போலீஸார் அதை முறியடித்து விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கலவர பூமியாகியுள்ள கூடங்குளத்தில் இன்று காலை போலீஸார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு காரணமாக பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இதுவரை இல்லாத அளவு இன்று கூடங்குளம் போராட்டத்தில் வன்முறை வெடித்து விட்டது. நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கில் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலோரத்தில் கூடிய மக்களைக் கலைக்காமல் போலீஸார் இன்று காலை வரை அமைதி காத்தனர். இன்று காலைக்கு மேல்தான் போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்த நிலையில் போலீஸாரைக் குறி வைத்து பல திட்டங்களுடன் போராட்டக்காரர்கள் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று இரவே 40க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகளை கடலோரத்தில் நிறுத்தி வைக்க ஆரம்பித்தனர். இது எங்களுக்கு சந்தேகத்தை ற்படுத்தியது. நாட்டு வெடிகுண்டுகளுடன் அவர்கள் தயார் நிலையில் இருக்கலாம் என்று சந்தேகித்தோம்.
இதையடுத்து அந்தப் படகுகளை நாங்கள் சோதனையிட்டபோது அதில் மீன்பிடி வலைகள் நிறைய இருந்தது. இது எங்களைக் குழப்பியது. இதையடுத்து சில மீனவர்களைப் பிடித்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் கூறிய தகவல் எங்களை திடுக்கிட வைத்தது.
போலீஸார் தடியடியோ அல்லது துப்பாக்கிச் சூடோ நடத்தினால் போலீஸாரை கடலோரத்திற்கு வரவழைத்து பின்னர் படகிலிருந்து மீன்பிடி வலைகளை வீசி போலீஸாரை கடலுக்குள் இழுத்துத் தள்ளி விடும் திட்டத்துடன் போராட்டக்காரர்கள் இருந்தது அவர்கள் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மீன்பிடி வலைகளை நாங்கள் கைப்பற்றினோம். இருப்பினும் பல படகுகளை மீனவர்களே கடலுக்குள் கொண்டு போய் விட்டனர் என்றனர்.

கருத்துகள் இல்லை: