செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பெண் சப் plus 4 போலீஸாரைI தரதரவென இழுத்துச் சென்ற மீனவர்கள்.

தூத்துக்குடியில், கூடங்குளம் போலீஸ் தடியடிக்குக் கண்டனம் தெரிவித்து மீனவர்கள் நடத்திய போராட்டத்தின்போது பெண் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு பேரை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தரதரவென இழுத்துச் சென்று சிறை வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஐஜி மற்றும் எஸ்.பி. தலைமையில் விரைந்து வந்த போலீஸார் நான்கு போலீஸாரையும் மீட்டு வந்தனர்.
கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று கடற்கரையில் நடந்த பெரும் வன்முறை, கலவரம், தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சைத் தொடர்ந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது. கூடங்குளத்தில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மீனவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டத்தின்போதுதான் மீனவர் அந்தோணிச்சாமி என்பவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மணப்பாடு கிராமத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்தது. நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்திற்கு முன்பாக இன்னொரு பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாகவே போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியதாக கூறப்படுகிறது.
அதாவது நேற்று மாலையில் திடீரென 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு வந்தனற். மணப்பாடு போலீஸ் சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட அவர்கள் அதை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை நொறுக்கி தீவைத்தனர்.
அப்போது அங்கு உவரி காவல் நிலைய பெண் சப் இன்ஸ்பெக்டர் அன்பரசி, சிறப்பு எஸ்.ஐ. கணேசன், போலீஸ்காரர்கள் சுந்தர்சிங் மற்றும் ஐயபப்பன் ஆகியோர் பணியில் இருந்தனர். அவர்கள் நான்கு பேரையும் மீனவர்கள் தலை, கை, கால்களைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர்.
அவர்களை அங்குள்ள லூர்து மாதா கோவில் அருகே ஒரு அறையில் போட்டுப் பூட்டினர். இந்தத் தகவல் திருச்செந்தூர் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன், திருப்பூர் எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கூடுதல் போலீஸாருடன் விரைந்து வந்தனர்.
ஆலயம் முன்பு கூடியிருந்த மீனவர்களை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் விரட்டினர். இதில்தான் மீனவர் அந்தோணிச்சாமி பரிதாபமாக பலியானார்.
அதன் பின்னர் சிறை வைக்கப்பட்ட போலீஸாரை மீட்டனர். போலீஸாரை மீனவர்கள் சிறை வைத்து விட்டதால் கோபமடைந்தே போலீஸார் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: