புதன், 12 செப்டம்பர், 2012

Supreme Court:T.R.Balu familly சாராய ஆலை அனுமதி ரத்து

தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான, எரிசாராய தொழிற்சாலை துவங்குவதற்காக, இதுவரை பெறப்பட்ட அனைத்து அனுமதிகளும், ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே, வடசேரி எனும் பசுமையான கிராமத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பங்குதாரர்களாக கொண்டு, "கிங்க்ஸ் இந்தியா கெமிக்கல் கார்பரேஷன் லிமிடெட்' என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த ஆலைக்கு, அக்கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, எரிசாராயம் தயாரிப்புக்கு பயன்படுத்திவிட்டு, அதில் இருந்து, சில லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படும். இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும். கழிவு நீரால், விவசாயம், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.இதற்கிடையில், தஞ்சை மாவட்டம், பூதலூர் யூனியன், செல்லம்பட்டியில், எரிசாராய ஆலை துவங்குவதற்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பெறப்பட்ட அனுமதிக்கான ஆவணங்களை திருத்தி, வடசேரி பகுதியில் ஆலை துவங்க முற்பட்டதாக, வடசேரி வாழ் விவசாய சங்கங்கள், வடசேரி போராட்டக் குழுவைச் சேர்ந்த சுவாமிநாதன், வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.
இப்புகார் மற்றும் விவசாய நிலம் பாதிக்கும் என்ற எதிர்ப்புக்கு மத்தியில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஆலைக்குள், 2010 ஏப்., 9ம் தேதி, பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது."பொது இடத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினால் மட்டுமே கலந்து கொள்வோம் என, வடசேரி மக்கள் கூறி, கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், ஆலை வளாகத்தில் கூட்டம் கூடியதால், அப்போதைய, தஞ்சை டி.ஆர்.ஓ., கருணாகரன், எஸ்.பி., செந்தில்வேலன் ஆகியோர் உத்தரவுப்படி, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கொதிப்படைந்த மக்கள் ஒவ்வொரு ஆண்டும், அந்த நாளை கறுப்பு தினமாக கடைபிடிப்பதுடன், மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும், பின் சென்னை உயர் நீதிமன்றத்திலும், இந்த ஆலைக்கு எதிராகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய, மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு எதிராகவும் வழக்கு தொடுத்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூழல் துறையை அணுகும்படி கூறியது. இதனால், மத்திய சுற்றுச்சூழல் துறையை அணுகியதுடன், டில்லி உச்ச நீதிமன்றத்திலும், வடசேரி விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடுத்தனர்.இவ்வழக்கில், கடந்த, 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடசேரி கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பழனிவேல் கூறியதாவது:"கிங்க்ஸ் கெமிக்கல் நிறுவனம் துவங்குவது தொடர்பாக தவறான ஆவணங்களை, திருத்தி வழங்கி உள்ளனர். எனவே, அந்நிறுவனம் ஆலை துவங்குவதற்காக, இதுவரை பெற்ற அனைத்து அனுமதியும், ஆவணங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அவர்கள், வடசேரியில் ஆலை துவங்க முறையாக அனைத்து அனுமதியும் பெற்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து முறையாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, ஆலை துவங்க உத்தரவு பெற வேண்டும் என, நீதிமன்றம் கூறியுள்ளது.இந்த தீர்ப்பு, இப்பகுதி மக்களின் கருத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி. கெமிக்கல் ஆலை நிர்வாகம், இனி எந்த அனுமதி பெற முயன்றாலும், அதற்கு எதிராக நாங்கள் இதேபோன்று ஒற்றுமையுடன் தொடர்ந்து குரல் கொடுப்போம். இங்கு ஆலை செயல்பட அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தீர்ப்பை அறிந்த, அப்பகுதியைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இனிப்பு வழங்கியும், வெடி வெடித்தும் கொண்டாடினர். வடசேரி ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.3

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: