வியாழன், 6 அக்டோபர், 2011

இந்துக் கல்லூரி மாணவன் மரணம். அதிபர் விளக்கம்

நல்லைநாதன் தனுசனின் மரணம் தொடர்பில் கல்லூரியின் அதிபர் வி.கணேசராஜா விளக்கமளித்து அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  எமது கல்லூரி வட மாகாணத்தில் உள்ள  மூன்று  பிரசித்திபெற்ற   திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், நயினை ஸ்ரீ நாகபூஷணி ஆகிய ஆலயங்களின்  விழாக்களில்  வருடந்தோறும்  பங்கு பற்றி வருகிறது.
அந்த வகையில், நவராத்திவிழா வின் இரண்டாவது நாள் பூசையின் கலந்துகொள்வதற்காக அதிபர் உட்பட 10 ஆசிரியர்களும் 85 மாணவரும் 29.09.2011 அன்று நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயத்திற் குச் செல்ல இருந்தோம்.
எதிர்பாராத விதமாக எமது வலயக் கல்வி அலுலக மேற்பார்வைக் குழு எமது பாடசாலைக்கு திடீரென மேற்கொண்ட விஜயத்தின் காரணமாக அதிபரும்    ஏனைய   5 ஆசிரியர்களும்    அந்தப் பயணத்தில் கலந்து கொள்ள  முடியாது போனது.    ஆதலால்   இந்து   மாமன்றப்   பொறுப்பாசிரியர் உட்பட 5 ஆசிரியர்களும்   85 மாணவரும்      60 இருக்கைகளைக் கொண்ட பெரிய பேருந்து ஒன்றின் மூலம் நயினை சென்றனர்.
இதற்கான கட்டணமாக   இலங்கைப் போக்குவரத்துச் சபையால் அறவிடப்படும்    சாதாரண   கட்டணமே அறவிடப்பட்டது.  அத்துடன் மாணவன் பெற்றோரின் அனுமதிக்கடிதங்கள் பெறப்பட்டே மாண வர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
எமது கல்லூரி பஸ் மெய்வல்லுநர் போட்டிக்கான மாணவர்களை ஏற்றிக் கொண்டு தேசிய மட்டப் போட்டிக்குச் சென்ற காரணத்தால் அதை இப் பயணத்திற்குப் பயன்படுத்த முடியாதிருந்தது.
அம்பாள் ஆலயத்தில் பூசைகள் முடிந்து மாணவர்கள் தங்கள் மதிய உணவையும் முடித்த பின் பி.ப 2.30 மணியளவில் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டனர். எமது மாணவர் சென்ற பேருந்து தனியாரது பேருந்தாக இருந்தபடியால் அது குறிகாட்டுவான் ஆலயத்துக்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்தது. சென்ற ஆசிரியர்களில் ஒருவர் பேருந்து நிறுத்தப்பட்ட இடத்திற்கு நடந்து சென்று அதை மாணவர் மற்றும் ஆசிரியர்கள் நின்ற இடத் திற்கு கொண்டுவந்தார்.
பேருந்து வேகமாக வந்து திரும்பிய போது வண்டியின் பின்புறமாக நின்ற இச் சிறுவன் தட்டுப்பட்டுக் கீழே விழுந்துள்ளார். வண்டி அவர் மீது ஏறிச் சென்றதால் சிறுவனான மா ணவன் அதில் நசிந்து இறக்க நேர்ந்தது. இவ் வேளை மாணவர் எல்லோரும் வண்டிக்கு வெளியே தான் நின்றிருந்தனர்.
பி.ப. 2.35 மணியளவில் இம் மரணச் செய்தி எனக்குத் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனே இத்தகவல் கோட்டக்கல்வி அதிகாரிக்கும் ஊர்காவற்றுறை நீதிபதிக்கும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் நானும் கோட்டக்கல்வி அதிகாரியும் 6 ஆசிரியர்களும் தனியார் வேன் மூலம் பி.ப 3.30 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென் றோம்.
அங்கு நாம் சென்ற போது கடற்படை அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நீதிபதியும் பிரசன்னமாகியிருந்தனர். பொலிஸார் 5 ஆசிரியர்களையும் நேரில் சம்பவத்தைப் பார்த்த 4 மாணவர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். பின்னர் பேரூந்தையும் அதன் சாரதியையும் பொலிஸார் அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.
நீதிபதியின் விசாரணைகள் முடிந்ததும் இறந்த மாணவன் உடல் கடற்படை வாகனத்தில் ஏற்றப்பட்டு ஒரு ஆசிரியர் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோருடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட் டது.
ஏனைய மாணவர்கள், ஆசிரியர் ஆகியோர் இரு சிறிய பேருந்துகள் மூலம் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர். போதனா வைத்தியசாலை விசாரணைகள் முடிந்ததும்  சுமார் இரவு 8.30 மணியளவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

கருத்துகள் இல்லை: