சனி, 8 அக்டோபர், 2011

காணி விபரங்களை வழங்காது பகிஷ்கரிக்கும் பிரச்சாரத்தை ஆனந்தசங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சித்து விளையாட்டுக்ளை போட்டுடைகின்றார் வீ. ஆனந்தசங்கரி

திரு. இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கட்கு காணிகள் பதிவு சம்பந்தமாக அன்புடையீர் காணி பதிவு சம்பந்தமாக அதி மேதகு ஐனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தக் காணி பிரச்சனை இன்று மிகப்பெரிய பிரச்சனையாக வளர்ந்துள்ளது. வடபகுதி மக்கள் இது பற்றி மிகவும் கவலையுற்றுள்ளனர். இடம்பெறர்ந்த வடபகுதி மக்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. என்னால் ஐனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை. ஒரு உறுதியான நடவடிக்கையே இன்றைய தேவையாகும். காணி சம்பந்தமான விபரங்களை வழங்காது பகிஷ்கரிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஆரம்பிப்பதாக பரிசீலித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இதற்கு எதாவது மாற்றுத்திட்டம் இருக்கக் கூடும் என அஞ்சி எனது ஆலோசனையை நிறுத்தி வைத்துள்ளேன். நீங்கள் இவ்விடயம் சம்பந்தமாக அரசுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே எடுத்திருக்க கூடுமென கருதி உங்களுடைய நிலைப்பாட்டை அறியாது எதுவித நடவடிக்கையையும் எடுக்க நான் தயங்குகின்றேன். இதைப் பகிஷ்கரிக்கின்ற எண்ணம் அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதாக இருப்பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் புளொட் அமைப்பும் எமது முழு ஆதரவையும் தரத் தயாராக உள்ளோம்.

அத்தகைய திட்டம் எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையெனில் இது சம்பந்தமாக எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் ஆதரவை எமக்களிக்குமாறு வேண்டுகின்றேன். எமக்கு ஏற்பட்டிருக்கும் இப் பயத்திற்கு காரணம் கடந்த 2011-09-25 அன்று நடைபெற்ற எமது கட்சியின் மகாநாட்டில் தமிழரசுக் கட்சி மட்டும் கலந்து கொள்ளாமையே ஆகும்.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்த்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் புளொட் அமைப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு பூரணமான ஆதரவைத் கொடுத்திருந்தது. இவ்வமைப்புக்களின் வேட்பாளர்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ளடங்கியிருந்தனர். ஆனால் துரதிருஷ்ட வசமாக இதுவரை தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய அமைப்புக்களின் ஆதரவாளர்கள் தாமாக முன்வந்து கொடுத்த ஆதரவை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகவோ, அல்லது அச்செயலை மெச்சியதாகவே இன்று வரை தெரிவிக்கவில்லை.

எத்தனையே விடயங்களில் நானாக நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால் நீங்கள் அரசுடன் எந்தெந்த விடயங்கள் பற்றி பேசுகின்றீர்கள் என்பதனை அறியாமல் தமிழ் பேசும் மக்களுடன் சம்பந்தப்பட்ட எது விடயங்களிலும் எவரும் எதையும் செய்ய முடியாமல் உள்ளது. நீங்கள் அரசாங்கத்துடன் பேசுகின்ற விடங்களை உங்களுடைய குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மறைக்க வேண்டுமா என மிக ஆர்வத்துடன் கேட்க விரும்புகின்றேன். என்னை சேர்த்துக் கொள்ளவில்லையென்று நான் முறைப்பட வரவில்லை. ஆனால் நான் அறிய விரும்புவது அரசுடனான உங்களுடைய பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தாது எந்த எந்த விடயங்களில் என்னைப் போன்றவர்கள் தலையிடலாம் என அறிய விரும்புகின்றேன்.

அன்புடன்

வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

கருத்துகள் இல்லை: