வியாழன், 6 அக்டோபர், 2011

சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ராசா விருப்ப மனு

Raja2ஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ராசா விருப்பம்- மனு செய்தார்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம ஊழல் வழக்கை கண்காணித்து வரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கருத்து தெரிவிக்க விரும்புவதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விருப்பம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
2ஜி வழக்கில் ராசா உள்ளிட்டோர் மீது நம்பிக்கைத் துரோக வழக்கை புதிதாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இதனால் ராசா தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் விசாரணையைப் புறக்கணிக்க ராசா தரப்பு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், ராசா மீதான விசாரணையை சிபிஐ முடித்து விட்டதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை நான் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன், வாதிட மாட்டேன். ராசாவும் தனது வாதத்தை வைக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தான் நேரில் ஆஜராக விரும்புவதாக ராசா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்சநீதிமன்றமும் விசாரித்து வருகிறது. டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் என்னை ஆஜர்படுத்துவது போல, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அங்கும் என்னை ஆஜர்படுத்த வேண்டும் என்று தனது மனுவில் ராசா கூறியுள்ளார்.

இதற்கிடையே, ராசா உள்ளிட்ட 17 பேர் மீதான புதிய குற்றச்சாட்டு குறித்து 17 பேரும் அக்டோபர் 7ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: