செவ்வாய், 4 அக்டோபர், 2011

கொள்கையில் எதிர்முகாம் அல்ல! மா.கம்யூனிஸ்டுக்கு கலைஞர்

ஏழை எளிய மக்களுக்காக திட்டங்களை நிறைவேற்றிய திமுகவின் கொள்ளை என்றைக்குமே, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகளுக்கு மாறுபாடனது அல்ல என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏற்றிவிட்ட ஏணியை உதைத்து தள்ளி இருப்பதாக அதிமுகவை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திமுகவை தோல்வி அடையச் செய்ய வேண்டியதும் நமது கடமை என்று தேவையில்லாமல் சீறிப்பாய்வதை குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகளை சட்டரீதியாக நிறைவேற்றிய திமுகவைப் பற்றி கம்யூனிஸ்ட் தோழர்கள் நன்கு அறிவார்கள். 1971ஆம் ஆண்டு நாட்டிலே முதல் முறையாக குடியிருப்பு வழங்கல் சட்டத்தைக்கொண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருக்கும் வீட்டுமனைகளை திமுக அரசு சொந்தமாக்கியது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் ரத்தம் சிந்தியும் நடைபெறாத காரியத்தை கருணாநிதி ஒரு துளி மையினால் சாதித்து விட்டார் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான மணலி கந்தசாமி கூறியது தோழர் ராமகிருஷ்ணனுக்கு தெரியாதா.
பேருந்துகளை அரசுடமையாக்கியது. வங்கிகள் நாட்டுடமையாக உதவியது. மேற்கு வங்கத்திலேயே நடைமுறைப்படுத்தாத கைரிக்ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கியது. குடிசை மாற்று வாரியம் கண்டது ஆகியவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு முரண்பாடானவைகளா.
மே தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, பெண்களுக்கு சொத்துரிமை, குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வீடு வழங்கும் திட்டம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடானவை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் தனித்தனி அணியில் இருந்தாலும் கொள்கை அடிப்படையில் எதிரெதிர் முகாமில் இருக்க வேண்டிய கட்சிகள் அல்ல. இனிமேலாவது தோழர் ராமகிருஷ்ணன் இதை மனதிலே கொண்டு கருத்துக்களை தெரிவிப்பது நல்லது என்பதே எனது விருப்பம்
இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்<

கருத்துகள் இல்லை: