ஞாயிறு, 2 அக்டோபர், 2011

வடிவேலு குறித்து அவதூறாகப் பேச வங்கி அதிகாரிக்கு தடை

சென்னை : நில அபகரிப்பு தொடர்பாக நடிகர் வடிவேலு குறித்து அவதூறாகப் பேசவோ, மீடியாக்களுக்குப் பேட்டி அளிக்கவோ கூடாது என்று சென்னை வங்கி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை அருகே தாம்பரம், முடிச்சூர் சாலையில், நடிகர் சிங்கமுத்து மூ்லமாக வடிவேலு 34 சென்ட் நிலத்தை வாங்கினார். ஆனால் இந்த நிலத்தை போலியாக வடிவேலு மற்றும் சிங்கமுத்துவுக்கு விற்றது தெரிய வந்தது. இந்த நிலம் உண்மையில் வங்கி அதிகாரி பழனியப்பனின் மகன் சொக்கலிங்கத்திற்குச் சொந்தமானதாகும்.

போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நிலத்தை வடிவேலு திருப்பிக் கொடுத்து விட்டார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் பழனியப்பன் பேட்டி அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது வடிவேலு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பெரிய கருப்பையா விசாரித்தார். விசாரணையின் இறுதியில், பழனியப்பனும், அவரது மகன் சொக்கலிங்கம் ஆகிய இருவரும், நடிகர் வடிவேலுவின் பெயரையும், புகழையும் களங்கப்படுத்தும் விதமாக எந்த விதமான பொய்யான தகவலோ, அவதூறான செய்திகளையோ, பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ, வேறு எந்த விதமான எலக்ட்ரானிக் மீடியாக்களுக்கோ கொடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்

கருத்துகள் இல்லை: