புதன், 14 ஜூலை, 2010

KKS சிமெந்து தொழிற்சாலை எவருக்கும் வழங்கப்பட மாட்டாது : கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ன!


காங்கேசன் சிமெந்து தொழிற்சாலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கோ அன்றி தனியார் எவருக்குமோ வழங்கப்பட மாட்டாது. வெகு விரைவில் சிமெந்து தொழிற்சாலையை இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அரச சொத்துடைமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ன தெரிவித்தார்.

அமைச்சர் பி.தயாரட்ன, பிரதி அமைச்சர் சரத் குணரட்ன மற்றும் அமைச்சின் செயலாளர் வினிகமகே, இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சிமெந்து லிமிட்டெட் தலைவர் சிசில பரணகம ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வீட்டில் ஊடகவியலாளர் மாநாடொன்றை பிற்பகல் 2.15 மணியளவில் இவர்கள் நடத்தினர்.
ஊடகவியலாளர்கள் தற்போதைய சிமெந்து தொழிற்சாலையின் நிலைமை பற்றி கேட்ட போதே அமைச்சர் தயாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,”வெகு விரைவில் சிமெந்து தொழிற்சாலையைக் கட்டம் கட்டமாக இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த பல வருடங்களாக இந்த தொழிற்சாலை படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது.
இந்நிலையில் உடனடியாக இதனை இயங்க வைக்க முடியாது” என்றார்.கடந்த காலங்களில் இந்தத் தொழிற்சாலை இந்தியாவுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்பட்டதே எனக் கேட்ட போது,”இது உண்மைக்குப் புறம்பான செய்தி. எந்தச் சந்தர்ப்பத்திலும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை இந்தியாவுக்கு அல்ல வேறெந்தவொரு நாட்டுக்கும் விற்கப் போவதில்லை.
அடுத்துவரும் சந்ததியும் கூட இதனைப் பயன்படுத்த வேண்டும். தற்போது கூட தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும் கூட பெரும் பகுதி இயங்கக் கூடிய நிலையில் காணப்படுகின்றது.வெகு விரைவில் பாதுகாப்பு அமைச்சிடம் தொடர்பு கொண்டு இதனை இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சிமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலும் கூட தற்போதும் படையினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.இவர்களை அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்றிய பின்னர் தொழிற்சாலை கட்டம் கட்டமாக இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: