புதன், 14 ஜூலை, 2010

அசின,10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு

வேண்டுமென்றே என்மீது சர்ச்சையை கிளப்புகிறார்கள்:``இலங்கை தமிழர்களுக்கு உதவுவது தவறா?''
நடிகை அசின் பேட்டி
"என்மீது சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறார்கள், இலங்கை தமிழர்களுக்கு நான் உதவுவது தவறா?'' என்று நடிகை அசின் கேள்வி எழுப்பியுள்ளார்.நடிகை அசின் `ரெடி' என்ற இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றிருக்கிறார். அவர் இலங்கை சென்றது தமிழ்த்திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு, நடிகர், நடிகைகள் யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது.

அந்த தடையை மீறி நடிகை அசின் சென்றிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு வற்புறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று நடிகர் ராதாரவி பேட்டி அளித்திருந்தார்.அதற்கு பதில் அளித்து அசின் `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

நான் இலங்கை சென்றது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக நான் இலங்கை சென்றேன். அது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம். அந்த படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தியது என் கையில் இல்லை. தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம்.

இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியும், விடுதலைப்புலிகள் அதிகம் இருந்த இடமுமான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்.
ஜாப்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன். அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன்.

இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 டாக்டர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன். ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா?

என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே. அங்குள்ள தமிழர்கள், ``அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்?'' என்று கண்கலங்கி கேட்கிறார்கள்.
``விஜய் அண்ணாவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா'' என்று கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத்தான் நான் செய்திருக்கிறேன். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.

இவ்வாறு நடிகை அசின் கூறினார்.

கருத்துகள் இல்லை: