செவ்வாய், 27 நவம்பர், 2018

ரெஹானா பாத்திமாவை கேரள போலீஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்... சிக்கவைத்த ஃபேஸ்புக் பதிவு!

ரெஹானா பாத்திமா
சிக்கவைத்த ஃபேஸ்புக் புகைப்படம்!விகடன்:  பெண்களை சபரிமலைக்கு அனுமதித்த பின்னர், அக்டோபர் 19-ம் தேதி இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்றனர். இருவரும் சந்நிதானத்துக்கு 500 மீட்டர் வரை சென்று, போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா.
கொச்சி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ரெஹானா குறித்து பல விதமான சர்ச்சைகளும் கருத்துகளும் வெளியாகிவந்தன. பாத்திமா கோயிலுக்குச் சென்ற அடுத்த நொடியே அவரது வீடு தாக்கப்பட்டது. 31 வயதான ரெஹானா, கேரளாவில் பெண்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்திவருபவர். இஸ்லாமிய மதத்தில் பிறந்தாலும், அதிலிருந்து வெளியே வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். சபரிமலைக்குச் சென்ற விவகாரத்தில், தொடர்ந்து இவருக்கு எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், இதுவரை இரண்டு முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். எனினும், எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவது, போராட்டங்களில் கலந்துகொள்வது எனச் செயல் பட்டுக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில், இன்று கேரள போலீஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக, ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டதற்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, ஐயப்ப பக்தர்கள் அணியும் கறுப்பு வேட்டி, சட்டை, மாலை, கையில் ருத்திராட்சம் உள்ளிட்டவற்றுடன் `Thathvamasi' என்ற கேப்ஷனுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் புகைப்படம், ஐயப்ப பக்தர்களின் மனதை நோகடிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறி, சபரிமலை சம்ரக்ஷன சமிதி என்ற அமைப்பு, பத்தனம்திட்டா மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்தது.
அந்தப் புகாரின் பேரில், பிரிவு 295A-ன் (கீழ் மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதித்தல், மத உணர்ச்சிகளையும் சீர்குலைக்கும் நோக்கத்தோடு கருத்து பதிவிடல்) போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் சீக்கிரமாகவே பாத்திமா கைதுசெய்யப்படுவார் எனப் பேசப்பட்டது.

ஆனால், நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று பாத்திமா மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், போலீஸார் நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்தது. இதற்கிடையே,இன்று பத்தனம்திட்டா போலீஸார் ரெஹானா பாத்திமாவை கைது செய்துள்ளனர். கைதை அடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். கைது செய்யப்பட்ட ஒரு மணிநேரத்துக்கு உள்ளாகவே அவரை சஸ்பெண்ட் செய்து பி.எஸ்.என்.எல் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: