வெள்ளி, 30 நவம்பர், 2018

மறைந்த ஐராவதம் மகாதேவன் எம்ஜியாரை எதிர்த்து பதவியை ....

Savithri Kannan : ஏதேச்சதிகார எம் ஜி ஆரை எதிர்த்து ஐ
ஏ எஸ் பதவியை தூக்கி
எறிந்தவர் ஐராவதம் மகாதேவன். அவரை நினைக்கும் போது எனக்கு அவரது தமிழ் புலமை,கல்வெட்டுத் துறை அறிஞர் என்பதையெல்லாம் கடந்து அவரது தன்மான உணர்ச்சி தான் நினைவுக்கு வருகிறது...!
எம் ஜி ஆருக்கு அதிகாரிகள்,பைல்கள்..என்றாலே ஒரு வெறுப்பு இருந்தது.எதிலும்சந்தேகம்,குழப்பம்..மனதில் ஒன்று, நடைமுறையில் ஒன்று என்பதே எம் ஜி ஆர் வாடிக்கையாக இருந்தது.பைல்கள் அவர் மேஜையில் முடிவு காணாமல் குவிந்து கிடக்கும்.யாருமே அவரை சந்திப்பது அரிது!
தமிழகத்தை பொறுத்தவரை அதற்கு முன்னால் முதலமைச்சராக இருந்த காமராஜராகட்டும்,கருணா நிதியாகட்டும் பார்வையாளர்கள் சந்திப்பு நேரத்தில் குருவிக்காரன் தொடங்கி குபேரன் வரை யார் வேண்டுமானாலும் சந்திக்கக் கூடிய நிலைமை இருந்தது.ஆனால், எம் ஜி ஆரை நிர்வாகத்தின் நாடி நரம்புகளாகச் செயல்பட்டு வந்த ஐ ஏ எஸ் அதிகாரிகளே சந்திக்க முடியாது என்பது மட்டுமல்ல,அவர்களை கீழ்த்தரமாகவும் நடத்தினார்.
அவருக்கு மறு பேச்சில்லாமல் கீழ்படியக் கூடியவர்கள் என்றால்,அவர்களுக்கு சீனியாரிட்டியைப் புறந்தள்ளி ஒரு புது பதவியை உருவாக்கித் தந்துவிடுவார்!
அந்த வகையில் திரவியம் அவர்களை தலைமைச் செயலாளராக ஆக்கினார்.ஆனால் அவரையும் சுதந்திரமாகச் செயல்படவிடாமல்,அவரது பதவிக்கு இணையாக 5 பதவிக்ளை உருவாக்கினார்.அதே போல போலீஸ் டைரக்டர் ஜெனரலுக்கு இணையாகவும் 5 பதவிகளை உருவாக்கினார்.திறமையும், நேர்மையும் இணைந்த பொன் பரமகுரு அவர்களை சுற்றுலாத் துறைக்கு தூக்கி அடித்தார்.ஆர். நாகராஜன்,வெங்கட சுப்பிரமணியன்,கார்திகேயன்,எஸ் ரங்கமணி என்று அவரால் முடக்கப்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகளின் பட்டியல் பெரிது...!
இந்தச் சூழலில் விருப்ப ஒய்வு எடுத்து வெளியில் வந்தவர் தான் நம் ஐராவதம் மகாதேவன் அவர்கள்! அவரைத் தொடர்ந்து மேலும் 5 ஐ ஏ எ ஸ் அதிகாரிகளும் விருப்ப ஒய்வு பெற்று வெளியேறினார்கள் எனபது குறிப்பிடத்தக்கது! அதன் பிறகு சில ஆண்டுகள் இடைவெளி விட்டு,ஐராவதம் அவர்கள் நான்கைந்து ஆண்டுகள் தினமணி ஆசிரியராகத் திறம்படச் செயலாற்றினார்!

கருத்துகள் இல்லை: