புதன், 28 நவம்பர், 2018

சர்க்கார் விவகாரம் .. அரசின் நல திட்டங்களை விமர்சிக்க கூடாது ... ஜாமீனுக்கு மன்னிப்பு கேட்க அரசு வழக்கறிஞர்

/tamil.thehindu.com அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ்
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இனி அரசை விமர்சிக்க மாட்டேன் என பிரமாணபத்திரம் எழுதித்தர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்  சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கிய சர்கார், கதைத்திருட்டு வழக்கிலும் சிக்கி மீண்டது.
 படம் வெளிவந்தப்பின் மேலும் எதிர்ப்பைச் சந்தித்தது. சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கும் வரை படத்தை திரையிடக்கூடாது என தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த வழக்கில், தன்னை காவல்துறை எந்நேரமும் கைது செய்யலாம் என்பதால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் முன் ஜாமீன் கோரி நவம்பர் 9-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நவம்பர் 27-ம் தேதி வரை ஏ.ஆர்.முருகாதாஸை கைது செய்ய கூடாது என இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, முருகதாஸுக்கு முன் ஜாமின் வழங்க கூடாதென புகார்தாரரான தேவராஜன் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தார். எப்போது புகார் அளித்தீர்கள் என்ற கேள்விக்கு தேவராஜன் முறையான பதிலளிக்கததால், புகார் தேதி கூட தெரியாமல் முன் ஜாமீன் வழங்க கூடாது என்று வழக்கு தொடர்கிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது முருகதாஸ் தரப்பில்,  ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டும், சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டும் புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கில் தனது வாதத்தை வைத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: