வெள்ளி, 14 செப்டம்பர், 2018

சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !

vinavu.com :சென்னை பாரீஸ் கார்னர்.. சென்னையின் பழமையான அடையாளங்களில் முக்கியமான ஒன்று…. பாரீஸ் என்றாலே விதவிதமான சந்தைகளைக் கொண்ட பஜார் தான். எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் ஒவ்வொரு பஜாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழில்… பாரிமுனையிலிருந்து வால்டாக்ஸ் சாலை வரை பரந்து விரிந்த சாம்ராஜ்யம்.
1788-ல் சென்னை வந்த இங்கிலாந்தின் தாமஸ் பாரி, வணிகராக உரிமம் பெற்று தொழிலை ஆரம்பித்தார். 1795ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’வாக உருவானது. 1819-ல் ஜான் வில்லியம் டேர் என்பவருடன் இணைய ‘பாரி அண்ட் டேர்’ நிறுவனமாக மாறியது.
1824ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாரி மரணமடைகிறார். இவருடைய வணிக பங்குதாரர் டேர் தலைமையில் பாரி நிறுவனம் வளர ஆரம்பித்த பிறகு, ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரி (EID) அண்ட் சுகர் ஃபேக்டரி’ உருவானது. 1939ல் டேர் ஹவுஸ், ‘ஆர்ட் டிகோ’ என்ற கட்டட பாணியில் உருவாக்கப்பட்டது. அன்று தாமஸ் நிறுவிய வணிகக் கட்டடம் இன்று, ‘ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிட்’ என அழைக்கப்படுகிறது.
அந்தக் கட்டடம் இருக்கும் வரிசையில், நூற்றுக்கணக்கான கடைகள், பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்கள், வீடற்ற – முகவரியற்ற மக்களுக்கு நிரந்தர முகவரியாக  இருக்கும் அந்த இடம் தான் பாரீஸ் கார்னர்.

சிக்னலில் போக்குவரத்து காவலர் இல்லததால் குறுக்கும் நெடுக்குமாக இரு சக்கர,  நான்கு சக்கர வாகனங்கள் நெருக்கடியில் புகையை கக்கியவாறே ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆவின் கேட்  அருகே வழக்கறிஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள்.  ஆர்ப்பாட்டம் செய்தவர்களை மறைத்துக் கொண்டு பாதி சாலையில் சுற்றி நின்றிருந்தது போலிசு.
அந்த சாலையின் எதிர்திசையில் அமைந்துள்ள கடைவீதியின் கூட்ட நெரிசலில் தங்கள் உடல் பலத்தையும் மீறி மீன்பாடி வண்டிகளில் சரக்கு மூட்டைகளை வானுயர ஏற்றிக் கொண்டு நெரிசில் சிக்கி திணறிக் கொண்டிருந்தனர் தொழிலாளர்கள்…
சாலையோர நடைபாதையில் வயதான பாட்டி ஒருவர் பூக்களை கட்டிக்கொண்டிருந்தார். ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் வெறுமனே ஐந்து வாட்ச்களை மட்டும் விற்பனைக்கு வைத்து யாரேனும் வருவார்களா என்று காத்துக்கிடந்தார்.  சற்று தொலைவில் கும்பலாக அமர்ந்து பெண்கள் பூவை கட்டிக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அருகிலும், படிகட்டுகளிலும் அமர்ந்து ஓட்டலில் இருந்து வாங்கி வந்திருந்த உணவை சமமாக பங்கிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தர். இவற்றை எல்லாம் பார்த்தும் பார்க்கததுமாக அவசர அவசரமாக கடக்க முயன்ற நாகரீக மனிதர்கள்..
அதே நடைபாதை ஓரம் ஒரு ஹாலில் கருத்தரங்கம் நடக்கவிருப்பதற்கான செய்தியை தெரிவிக்கும் வகையில் ஒரு பேனரை இரண்டு இளைஞர்கள் கட்டிக் கொண்டிருந்தர். அங்கிருந்த டீ மற்றும் பழரசக் கடைகளில் வழக்கறிஞர்களின் ஆக்கிரமித்திருந்தனர்.


ஆண்டர்சன் தெரு
ஆண்டர்சன் தெரு வந்தது… ஒருமணி நேர மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக அந்த வீதி இருந்ததை தேங்கி நின்ற மழை நீர் காட்டிக்கொடுத்தது. அழுக்கு கலந்த நீரில் மிகவும் பாதுக்காப்பாக மக்கள் நடந்து சென்றனர்…. அந்தத் தெருவில் பெரும்பலும் ஸ்டேசனரி மற்றும் திருமண, சுப நிகழ்ச்சி கார்ட் கடைகள் தான் இருந்தன.
தெருவின் ஓரமாக நிருத்தப்பட்டிருந்த மீன்பாடி வண்டியின் மீது அமர்ந்திருந்தனர் தொழிளாலர்கள். மெல்ல சென்று அவர்களிடம் பேச்சு கொடுத்ததும், முதலில் நம்மிடம் பேச தயங்கினர். ஒரு சிலர் கூட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு பகடை விளையாட போகிறோம் என்று நழுவி கொண்டனர்.
அந்த அமைதிய கலைக்க முன்வந்தார் சரவணன்…………”நான் ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். கார்பேசன் ஸ்கூலு… எனக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் தான் கீது…  எங்களுக்கு வீடு எதுவும் கெடையாது……நாங்க எல்லோருமே இங்க தான் தங்கினு கீறோம்..
“இங்க தான்னா?”
இதான் பாக்குரியே இந்த ரோடு தான் எங்க வீடு… பொறந்தது வளந்தது எல்லாமே இங்க தான்.. இந்த மீன் பாடி வண்டி தான் சொந்தம்…  லோடு வச்சிக்கினு மாடு மாதிரி மெரிக்கனும். அன்னன்னிக்கு ஒழச்சா தான் சோறு… மூனு வேளயும் ஒட்டல்ல தான் துன்னனும். வூடு இருந்தாதானே வூட்ல ஆக்க முடியும்… அதான் ஓட்டல்லு…
“ஞாயித்து கெழம மட்டும் தான்…. இங்கயே சோறு ஆக்குவோம்.. எப்படின்னு கேக்குறியா?


சரவணன்
தோ… இந்த இடத்துல கடையெல்லாம் மூடிட்ட பிறகு.. மூனு கல்ல மூட்டி தான் சோறு ஆக்குவோம். அப்ப மட்டும் கறி, மீனு….தான். இங்கயே துன்னுட்டு இந்த மீன்பாடி வண்டியில தான் புருசன், பொண்டாட்டி, கொழந்த எல்லோரும் படுத்துக்குவோம். இப்படி தான் நாங்க வாழறோம்…..
கல்யாணம் காச்சி எதுக்குமே துட்டு இருக்காது…. எங்கள நம்பி எவனும் கடனும் கொடுக்க மாட்டான்… மிஞ்சி போனா தண்டல் எடுப்போம். அதுவும் பத்தாயிரம் தான் எங்கள நம்பி கொடுப்பான்.. ஒரு நாளைக்கு எங்களால நூறு ரூபாதான் கட்ட முடியும்னு…அதுக்கு ஏத்த மாதிரி கொடுப்பானுங்க.
பசங்க எல்லாம் கவெர்மெண்ட் ஸ்கூல்ல் படிக்குதுங்க… எல்லாம் எட்டாவது, பத்தாவது அவ்ளோ தான் படிக்கும்.. இங்க எல்லோருக்கும்  அதிக பட்ச படிப்பே அதுதான்.
கொழந்த குட்டிக்கு பிரச்சனன்னா,,, கே.எம்.சி. இல்லனா ஸ்டான்லி ஆஸ்பித்திரிக்கு கூட்டினு போவோம்… கல்யாணம், காதுகுத்தின்னா சமுதாயக் கூடம்… ஒரு சிலருங்க மண்டபத்துல வைப்பாங்க… அவங்க வேலை செய்யுர ஓனருங்க கிட்ட பணம் வாங்கிப்பாங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் வேலை அவரை வலுக்கட்டாயமாக இழுத்ததால் அவசர அவசரமாக வண்டியில் இருந்து இறங்கி ஓடினார்.
அருகில்……ஆர்வமாக பகடை விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து சத்தம் அதிகரித்தது….அதனை பொருட்படுத்தாமல் ஸ்ரீதர் பேச ஆரம்பித்தார்.
”இதையெல்லாம் கெட்டு இன்னா பன்ன போறீங்க…?


ஸ்ரீதர்
எங்க கஸ்டத்தை சொன்னா இன்னும் கஷ்டம்தான்… அதனாலதான் யார்கிட்டயும்  சொல்லுறது இல்ல. சொன்னா…. எல்லாரும் அழ வேண்டியது தான்…. நாங்க யாரு… நாங்க எப்படி இங்க வந்தோம்…  எங்க பூர்வீகம் என்னன்னு எதுவுமே தெரியாது.. ஆனா காலம் காலமா இங்கயே தான் கெடக்குறோம்…
இங்க இருக்க யாருக்கும் வீடு கெடையாது… ஆனா ரேசன் கார்டுல இருந்து, ஆதார் கார்டு வரைக்கும் வச்சிருகோம்……ஒரு சிலருக்கு மட்டும் தீவுத்திடல்ல குடிசை இருக்கு… எங்களுக்கும்  அங்க இருக்கு.. அதுகூட எங்க ஆயா அந்த எடத்த புடிச்சி குடிசை போட்டுச்சி….. இல்லனா அதுகூட இருந்திருக்காது.
மழக்காலம் வந்தா பெரும்பாடு பாடு தான். சொல்லி மாளாது… புருசன் பொண்டாட்டி, குழந்தைங்க.. எல்லோரும்.. மூடிய கதவாண்ட (கடைகளின் ஷெட்டர்) போயிட்டு ஒண்டிக்குவோம்.. சாரல் அடிக்கும்.. அதையெல்லாம் அட்ஜெஸ் பன்னி படுத்துப்போம்.. காலையில எழுந்து திரும்ப வேலைக்கு போகனும்,…..!
எங்களுக்கு விளையாடனும்னு ஆசை இருக்கு. ஆனா, விளையாட எடமில்ல…. படம் பார்க்கனும்ன்னா, இங்க பக்கத்துல பாட்சா தியேடர் இருக்கு… இப்ப தான் இதுக்கு பேரு பாட்ஷா தியேட்டரு..  இதுக்கு முன்னாடி மினர்வான்னு இருந்துச்சி. டிக்கெட் ஏழு ரூபாவுல இருந்து இருபத்தி அஞ்சி ரூபா வரைக்கும் இருக்கு.. மாசத்துக்கு ஒரு நாள் குடும்பத்தோட போயிட்டு பார்ப்போம்.. ரொம்ப பழைய படம் தான் போடுவான்.. அதைத்தான் பாக்கனும்.. புதுப்படம் எதுவும் பாக்கற நெலம இல்ல… .
எங்களுக்கு எல்லா நாளும் வேலை கெடைக்காது….. வீட்டுல இருக்க பொம்பளங்க  பூ கட்டி விப்பாங்க. அதுல கெடக்கிற  காச வச்சி அன்னிய பொழுதை கழிப்போம்… அந்த நேரம் ஒரு நாளைக்கு குறைந்தது இருபது டீ குடிப்பொம். அதான் எங்க சாப்பாடே…..!
இதான் எங்க வாழ்க்கை…. அரசாங்கம் எத்தைனையோ முறை வந்து எங்க கிட்ட கணக்கெடுத்து போயிருக்கு வீடு கொடுக்கிறேன்னு.. ஒன்னும் நடந்தது இல்ல.. எங்களுக்கும் சொந்தமா வீடு கட்டி பொண்டாட்டி குழந்தைன்னு வாழனும்னு…   ஆசை தான்..
ஒரு நிமிசம் பொண்டாண்டியோட தனியா இருக்கனும்னு ஆசை தான்.. இந்த உணர்வுகளை எப்படி சொல்லுறதுன்னு தெரியல.. எவன் வருவான்… போவானு தான் தான் சிந்தனை இருக்கும்….. வேற என்ன சொல்லுறது சொல்லுங்க…?
எங்க பொழப்பு இப்படி இருக்குதேன்னு எவனும் எங்கள மதிக்க மாட்டனுங்க.. முக்கியமா போலிசை சொல்லனும்… ரோட்டுல கடை போட்டாலே அடிச்சி புடுங்கி வாரீக்கினு போயிடுவான்…
நாங்க… ரோட்டுல போறதா பார்த்தாலே அவனுக்கு கடுப்பாகியிம்.. கொஞ்சம் டிராபிக் ஆனாலும்..டேய்…ங்…த்தா… சீக்கிரம் எடுடான்னு” சொல்லுவான்..
இதுவே கார் காரன்னா கிட்ட போயிட்டு….. சார்..கொஞ்சம் வண்டிய எடுங்கன்னு சொல்லுவான்….. அதுவே கார் ஓட்டுறது எங்கள மாதிரி ஆளா இருந்தா எங்க கிட்ட சொல்லமாட்டங்க… ஓனர் கிட்ட போயிட்டு சொல்லுவாங்க… நாங்க….. கூலிங்க தானே.. அதான் இவனுங்கள சாருன்னு கூப்பிடனுமான்னு……கவுரவம் பார்ப்பானுங்க….” அவனுங்க கிட்ட நாம எதுவும் பேச முடியாது…..” என்று சொல்லிவிட்டு  அமைதியானார்.
-வினவு புகைப்படச் செய்தியாளர்

கருத்துகள் இல்லை: