செவ்வாய், 11 செப்டம்பர், 2018

மீத்தேன் எடுத்தால் நாகை கடலில் மூழ்கும்!

மீத்தேன் எடுத்தால் நாகை கடலில் மூழ்கும்!minnambakam : புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாகத் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் தெரிவித்துள்ளார்.
பாலம் வாசகர் சந்திப்புக் கூட்டத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சேலத்தில் ‘இயற்கைப் பேரிடர்’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் பேசியதாவது: “கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர், இடுக்கி அணை நீரால் ஏற்பட்ட சேதம், இயற்கைச் சீற்றம் என பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். உண்மையில் அது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். 6 மாநிலங்களில் பரவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழல் பாதுகாப்பு குறித்து அறிவியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு 2011ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அதில், மேற்குத் தொடர்ச்சி மலையை 4 மண்டலங்களாகப் பிரித்து, 3 மண்டலங்களில் குவாரிகளை அனுமதிக்கக்கூடாது, குடியேற்றங்களை அனுமதிக்கக்கூடாது, இயற்கைக்கு எதிரான எந்த செயல்திட்டங்களையும் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியது. ஆனால், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அதை ஏற்க மறுத்தன. இதன் விளைவுதான் சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குக்குக் காரணம். இதேபோன்ற பேரிடர் ஆபத்து கோவா மாநிலத்துக்கும் உள்ளது என மாதவ் காட்கில் எச்சரித்துள்ளார்.
இந்தியாவிலேயே சென்னை நகரில்தான் வெள்ள நீர் விரைவாக வெளியேற வடிகால் வசதி உள்ளது. வடசென்னையில் கொசஸ்தலை, தென் சென்னையில் அடையாறு, மத்திய சென்னையில் கூவம் என ஆறுகளும், 16 பெரிய நீரோடைகளும் உள்ளன. இருந்தும், 2015ல் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் அவற்றை முறையாகப் பராமரிக்காததுதான்.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் யாவும் நீர் தேங்கும் இடங்களாகும்.
அதேபோல, அந்தந்த பகுதிக்கு ஏற்ற மரங்களை நாம் நட்டு வளர்க்க வேண்டும். சென்னையில் வார்தா புயலின்போது, வேரோடு சாய்ந்த மரங்கள் யாவும் வெளிநாட்டு வகை மரங்கள். நம் நாட்டு இனங்களான வேம்பு, அரசு உள்ளிட்ட மரங்கள் ஒன்றுகூட விழவில்லை.
குவாரிக்காகவோ அல்லது நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்காகவோ, பாறையை உடைக்கும்போது அல்லது குடையும்போது அந்த பாறையோடு இணைந்த உறுதியான மண் பிணைப்பு நெகிழ்ந்துவிடும். இது மழைக்காலத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும். நிலத்தடியில் இருந்து மீத்தேனை எடுக்கும்போது, மீத்தேனுடன் நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நிலத்தின் உட்பகுதியில் வெற்றிடம் ஏற்படும்.
புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது. இதில், நாகை மாவட்டத்துக்கு பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால், நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நிலமட்டம் தாழ்ந்து போகும். அதனால், கடல் நீர் எளிதில் உட்புகும். எனவே, இயற்கையின் சமநிலையை நாம் எப்போதும் சீர்குலைக்கக் கூடாது” என்று அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: