வெள்ளி, 14 செப்டம்பர், 2018

கேரளாவில் திடீர் வறட்சி? - கிணறுகள், குளங்களில் நீர்மட்டம் மளமளவென சரிவு.. பெருவெள்ளம் எங்கே போனது?

tamilthehindu :கேரளாவில ஒரு மாத காலமாக பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு வரலாறு காணாத அளவு வெயில் காணப்படுகிறது. இதுமட்டுமின்றி கிணறுகள், ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பெருமழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். கடந்த சில வாரங்களாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

 மழை ஓய்ந்துள்ள நிலையில் அங்கு கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலத்தில் இருப்பது போன்று கடுமையான வெயில் வெளுத்தி வாங்கி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுமட்டுமின்றி கேரளாவின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிணறுகளில் மேல்மட்டம் அளவுக்கு தண்ணீர் இருந்த நிலையில் தற்போது வேகமாக வற்றி வருகிறது. இதுமட்டுமின்றி ஆறுகள், குளங்களிலும் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.
வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து போனது. கேரளாவின் முக்கிய ஆறுகளான பெரியாறு, பாரதப்புழா, பம்பை ஆகிய நதிகள் ஆர்ப்பரித்து பெருகி ஓடியது. இன்று இந்த நதிகளில் வெள்ளம் மிகவும் குறைவாக ஓடுகிறது. இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் பெருமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு இயல்பு நிலை மாறியுள்ளது.
பெரு மழைக்கு பின்னர் ஏன் இப்படி வெயில் அடிக்கிறது ? நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதும் கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த நீரியியல் நிபுணர்களை கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வறட்சிக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மாநில அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனவும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அங்கு காணப்படும் வெப்பமும், இதனால் ஏற்பட்ட வறட்சியும் இப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கருத்துகள் இல்லை: