சனி, 15 செப்டம்பர், 2018

மதிமுக மாநாட்டில் வடமாநில தலைவர்கள் வருவதால்.. ஸ்டாலின் வர மறுத்தாரா?

`ம.தி.மு.க. மாநாட்டுக்குப் போக வேண்டாம்!’ - ஸ்டாலினைத் தடுத்த தலைவர்கள்vikatan.com -rames:
வைகோதந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மற்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் பொதுவாழ்வு பொன் விழா என மூன்றும் சேர்த்து, முப்பெரும் விழா மாநில மாநாடு வருகிற செப்டம்பர் 15-ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது. ஈரோடு – பெருந்துறை சாலையில் மூலக்கரை என்னுமிடத்தில் இதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றன. பி.ஜே.பி. எதிர்ப்பு மனநிலையில் உள்ள தலைவர்களை, ஒரே மேடையில் ஏற்றி மாஸ் காட்டும் நோக்கில் வைகோ இந்த மாநாட்டினை டிசைன் செய்துள்ளார்.

அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தனக்கு நெருக்கமான நட்பில் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி ஆகியோரை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென வைகோ கேட்டிருந்தார். மேலும், தமிழகத்தில் தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். வைகோவின் இந்த அழைப்பினை ஏற்று அனைவரும் ம.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்வதாக உறுதியளித்தனர்.
வைகோ
இதில் செம ஹேப்பியான வைகோ, மாநாட்டினைத் தூள் கிளப்பிவிட வேண்டும் எனப் பலமான ஏற்பாடுகளைச் செய்தார். ஈரோடு முழுக்க மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்று பேனர்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டன. மாநாட்டு ஏற்பாடுகளை வைகோ நேரடியாக வந்து பார்வையிட்டும், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கிவிட்டுச் சென்றார்.

இந்த நிலையில், மாநாட்டில் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற இருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், கடைசி நேரத்தில் தன்னால் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என வைகோவிடம் கூறியிருக்கிறார். அதே தினத்தில் விழுப்புரத்தில் தி.மு.க சார்பில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில், தான் நிச்சயமாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன வைகோ, “மாநாட்டுக்கு வர்றேனு உறுதியா சொன்னீங்களே… இப்ப என்னாச்சு” எனக் கேட்டிருக்கிறார். “`தலைவர் மறைந்தபிறகு நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி. தொண்டர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள்” என ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். “சரி உங்க விருப்பம்” என ஸ்டாலினிடம் சொன்ன வைகோ, “இது யார் வேலைனு எனக்குத் தெரியும்” எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கடுகடுத்திருக்கிறார்.
இதுகுறித்து ம.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ம.தி.மு.க மாநாடு நடைபெற இருக்கிற செப்டம்பர் 15-ம் தேதியன்று (நாளை), விழுப்புரத்தில் தி.மு.க சார்பில் மிகப் பிரமாண்டமாக அண்ணா – பெரியார் பிறந்தநாள் விழா நடைபெறவிருக்கிறது. ஸ்டாலின் தி.மு.க தலைவரானதும் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால்,  ஸ்டாலினால் ம.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை” என்றனர்.

தி.மு.க-வினரோ, “கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஈரோட்டில் தி.மு.க மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அதில் தி.மு.க-வினர் மட்டும்தான் கலந்துகொண்டனர். ஆனால், ம.தி.மு.க மாநாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. `பி.ஜே.பி-க்கு எதிரான தலைவர்களை மேடையேற்றி ஸ்டாலினால் செய்ய முடியாததை, வைகோ செய்கிறார் என்கிற மாய பிம்பத்தை உருவாக்குகிறார்கள்’ எனத் தி.மு.க-வினுடைய மேல்மட்ட தலைவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும், `திராவிடத்துக்கு அரண் அமைக்கும் ஒரே கட்சி ம.தி.மு.க என்பவர்களின் மாநாட்டில் நாம் கலந்துகொள்வதா’ என்றும் கூறியிருக்கின்றனர். அதனால்தான் ம.தி.மு.க மாநாடு நடக்கும் அதே நாளில், தி.மு.க சார்பில் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்றனர்.
ஈரோடு தி.மு.க மாநில சுயாட்சி மாநாட்டில் பேசிய துரைமுருகன், “தி.மு.க-வினரைத் தவிர, வேறு யாரையும் மாநாட்டுக்கு அழைக்கக் கூடாது என நாங்கள் ஸ்டாலினிடம் கூறியிருந்தோம். மற்றவர்களை அழைத்திருந்தால் எங்களுக்கு மாநாட்டில் பேச வாய்ப்புக் கிடைத்திருக்காது” என மறைமுகமாக வைகோவைச் சாடிப் பேசினார். அதே துரைமுருகன்தான் ஸ்டாலினுக்குப் பதிலாக ம.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்.
 vikatan.com

கருத்துகள் இல்லை: