வெள்ளி, 28 ஏப்ரல், 2017

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் .. 7 முக்கிய தீர்மானங்கள் ... தற்கொலை செய்த 400 விவசாயிகளின்

 கருணாநிதிக்கு பாராட்டு விழா: திமுக தீர்மானம்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை(இன்று) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.மேலும்,பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் : 1
சட்டப்பேரவைச் சரித்திரத்தில் வைரவிழா காணும்
தலைவர் கலைஞர்!
தமிழ்நாடு, தமிழ், தமிழர் நலன் என மொழி - இனப் பெருமை காக்கும் திராவிடப் பேரியக்கமாம் கழகத்தின் சீரிய வரலாற்றில் ஒவ்வொரு நாளுமே சிறப்புமிக்கதுதான்.
நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் இலட்சியப் பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக அயராது உழைத்து - இன்றும் நம்மை வழிநடத்துகிற ஆற்றலும் ஆளுமையும் மிக்க தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த 60ஆம் ஆண்டு நிறைவு பெறுகிற அருமையான தருணம் இது.
சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13 முறை போட்டியிட்டவர். 13 முறையும் வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாதவர். அத்தனை தேர்தல்களிலும் அண்ணா கண்ட ஒரே இயக்கம், அண்ணா தந்த ஒரே சின்னம் என தி.மு.கழகத்தையும் உதயசூரியனையும் வரலாற்று அடையாளங்களாகக் கொண்டு களம் கண்டு வெற்றிமேல் வெற்றிகளைக்குவித்தவர். இந்த வரலாறும் வளர்புகழும் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெந்த அரசியல் தலைவருக்கும் வாய்த்திராத மாணிக்க மகுடம்!
1957ஆம் ஆண்டு தி.மு.கழகம் முதன்முதலாகப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டதிலிருந்து 2016 வரை நடைபெற்ற அனைத்து சட்ட மன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தலைவர் கலைஞர் அவர்கள். குளித்தலையில் போட்டியிட்ட முதல்தேர்தலிலேயே வெற்றி கண்ட தலைவர் கலைஞர் அவர்கள் 1957 ஏப்ரல் 1ஆம் நாள் சட்டமன்றத்தில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று இன்று வைர விழா காணும் மாபெரும் தலைவர். 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 29ந் தேதி சட்டமன்றம் கூடியதை முன்னிட்டு, அந்த ஆண்டு இதே ஏப்ரல் 28ந் தேதி தி.மு.கழகத்தின் 15 சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தலைவர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது. கழகத்தை நிறுவிய அறிஞர் அண்ணா உள்ளிட்ட 15 சட்டமன்ற உறுப்பினர்களின் முதல் ஆலோசனை கூட்டத்தை இதே நாளில் முன்னின்று நடத்திய பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களையே சாரும்.
முதன்முதலில் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியைச் சேர்ந்த நங்கவரம் உழவர்களின் உரிமைப்போராட்டத்தில் அவர்களுடன் நேரடியாகக் களத்தில் பங்கேற்றதுடன், அந்த விவசாயிகள் பிரச்சனையை “கையேறு வாரம், மாட்டேறு வாரம்” என்று தன் கன்னிப் பேச்சாக சட்ட மன்றத்தில் தனது உரைக் காவியத்தைத் தொடங்கியவர். கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையிலும் ஆளுங்கட்சி வரிசையிலும் மாறி மாறி அமர்ந்து அலங்கரித்த போதும் தன் சிந்தனையால் சொல்லால் செயல்திறத்தால் சட்டமன்ற வரலாற்றில் தனித்துவமான முறையில் பிரச்சினைகளை முன்வைப்பதும், ஆளுங்கட்சியாக இருந்தால் மக்களின் கோரிக்கைக்கு முன்பாகவே அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களைத்தனது மதியூகத்தால் செயல்படுத்துவதும் தலைவர் கலைஞர் அவர்களின் சான்றாண்மை. அறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை - போக்குவரத்துத் துறைக்கு அமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தபோதுதான், இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பொதுவுடைமைச் சித்தாந்தம் பூக்கத் தொடங்கியது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் அவரது தோளில் சுமத்தப்பட்ட நிலையில் குடிசைமாற்று வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கை ரிக்ஷா ஒழிப்பு, கண்ணொளித் திட்டம், தொழுநோய் மறுவாழ்வு இல்லம் எனப் பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆட்சி செய்யும் வாய்ப்பு
அவருக்கு வாய்த்த காலங்களில் பெண்களுக்கான சம சொத்துரிமை, அனைத்து சாதியினரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எனச் சாற்றிடும் தந்தை பெரியார் சமத்துவபுரம், தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம், மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 சதவீத ஒதுக்கீடு, சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணமில்லாத் தொழிற்கல்வி, கட்டாயத் தமிழ்க் கல்வி, நுழைவுத்தேர்வு ரத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை, திருநங்கைகளுக்குத் தனி வாரியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளின் கடன் முழுவதும் தள்ளுபடி என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் நிலைநாட்டும் திட்டங்களைச் செயல்படுத்தி, உரிய சலுகைகளை வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள சிப்காட் தொழில் வளாகங்கள், டைடல் பார்க், புதிய புதிய தொழிற்சாலைகள், போர்டு, ஹூண்டாய் போன்ற மோட்டார் தொழிற்சாலைகள், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டம் போன்ற பல முக்கிய தொலை நோக்குத் திட்டங்களை வடிவமைத்து நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
எத்தனையோ அனல் பறக்கும் வாதங்களை சட்டமன்றத்தில் எடுத்து வைத்திருக்கிறார். இயக்கத்தின்மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு ஆணித்தரமாக பதில் அளித்திருக்கிறார். அவர்மீது கோபத்துடன் வீசப்பட்ட கணைகளுக்கு புன்சிரிப்புடன் நகைச்சுவையாகப் பதில் தந்திருக்கிறார். சட்டப் பேரவையில் அவருடைய உரைகளில் தென்றல் தவழ்ந்திருக்கிறது; சூறாவளி வீசியிருக்கிறது.
சட்டப்பேரவையில் மட்டுமின்றி, சட்ட மேலவையிலும் உறுப்பினராக இருந்த சிறப்பு தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. எந்த அவையில் இருந்தாலும் அவருடைய சட்டமன்றப் பணிகள் மக்கள் நலன் சார்ந்தும், ஜனநாயகத்தின் மாண்புகளை மதித்துப் போற்றிடும் வகையிலும் இருக்கும். கழகம் ஆளுங்கட்சியாக இருந்தபோது எதிர்க்கட்சிகள் எவ்வளவோ அமளி துமளிகளை உண்டாக்கிய போதும், அவையின் கண்ணியத்தைக் காப்பதற்காக பேரவைத் தலைவர் நடவடிக்கைகளை எடுத்த போதும், அவற்றையெல்லாம் கடந்து, எதிர்க்கட்சியினர் இல்லாமல் அவை நடைபெறக்கூடாது என்ற அசைக்க முடியாத எண்ணத்தோடு அவர்களையும் பங்கேற்க வழிஅமைத்துக் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதற்குச் சட்டமன்ற ஏடுகளே சான்று.
60 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் அவர் செயல்பட்ட விதமும் ஜனநாயகப் பண்பும் வியப்பளிக்கும் விவேகமும் பேரவை உறுப்பினர்களுக்கு இன்றைக்கும் வழிகாட்டும் நெறிமுறைகள்.
மாநில சுயாட்சி குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15அன்று ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையையும் பெற்றுத் தந்த சுயமரியாதைப் போராளியாக விளங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். தொழிலாளர் தினமான மே தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை தமிழகத்தில் அளித்ததுடன், இந்தியப் பிரதமராக சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் இருந்தபோது, அவரிடம் வலியுறுத்தி இந்திய அளவிலும் மே தினத்துக்கு விடுமுறை கிடைக்கச்செய்து, தொழிலாளர்களின் உரிமை காத்த தூயவர்! அதுபோலவே, மண்டல் குழுவின் பரிந்துரைகளை ஏற்கச் செய்து, நாடு முழுமைக்கும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கு வகை செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களால் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் தனது ஆட்சிக்காலத்தில் செயல்வடிவம் கொடுத்த தலைவர் கலைஞர் அவர்கள், அந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் 1989ல் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்தையும் நிறைவேற்றினார்.
மத்திய அரசினை வலியுறுத்தியதன் காரணமாக காவிரி நடுவர் மன்றம், தமிழுக்கு செம்மொழித் தகுதி, சேலம் இரும்பாலை, சேது சமுத்திரத் திட்டம், தூத்துக்குடியில் ஆழ்கடல் துறைமுகம் ஆகியவை அமையக் காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டவர் தலைவர் கலைஞர். இந்தியாவின் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்வு செய்ததில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பும் அகில இந்திய அளவில் தென்னிந்தியாவின் மூத்த தலைவராக அவருக்கு உள்ள மரியாதையும் வரலாற்றின் பொன்னேடுகளில் பதிவானவை.
பெருமைமிக்க தமிழக சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள் என்றென்றும் வைரம்போல மிளிரும் -ஒளிரும்! நமக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரது உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றுள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வைர விழா நடக்கும் இந்தநேரத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 2
அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களுக்கு வரவேற்பு;
முழு அடைப்பு வெற்றிக்குக் காரணமானவர்களுக்கு நன்றி!
தமிழக விவசாயிகளை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழகத்தின் எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்களையும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் முழு மனதுடன் வரவேற்கிறது. 25.4.2017 அன்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினர், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடமை உணர்வுடனும் ஈடுபாட்டுடனும் பங்கேற்று ஆதரவுக் கரம் நீட்டி அமைதியாகவும், அறவழியிலும் மாபெரும் வெற்றிப் போராட்டமாக நடத்திக் கொடுத்தமைக்கு, திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதத்தில்மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த முழு அடைப்பை, துளி கூட வன்முறைக்கு இடம் தராமல், கட்டுப்பாட்டோடு நடத்திக் காட்டிய கழகச் செயல் தலைவர் தளபதி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் மரியாதைக்குரிய தலைவர்கள் அனைவருக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 3
இந்தி எதிர்ப்புத் தீ பரவிட எங்கெங்கும் கருத்தரங்குகள்!
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் எதிராக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் எதிர்மறை முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதற்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்ற தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவர்கள் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் கனல் அவ்வளவு எளிதாக அணைந்து விடுவது அல்ல என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உணர வேண்டும். 1937-38 மற்றும் 1965-களில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் திராவிட இயக்கமும், அதன் வழி வந்த திராவிட முன்னேற்றக் கழகமும் தீரமுடன் எதிர் நின்று மாணவர்களுடன் கைகோர்த்துப் போராடி தமிழ் மொழியைக் காப்பாற்றியிருக்கிறது. இந்தித் திணிப்பை எதிர்த்துத் தன் இன்னுயிரை நீத்த பலருடைய தியாகங்கள் இன்றைக்கும் இளைஞர்களின் நெஞ்சில் கனன்று தீப்பந்தமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழிக்காக தம் தேக்குமரத் தேகத்திற்குத் தீ வைத்துக் கொண்டு மாண்ட தியாகிகளின் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி25-ஆம் தேதியை மொழிப் போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நினைவு நாள் பொதுக்கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்பதை இந்தக் கூட்டம் நினைவுகூர்கிறது.
“இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாகத் தொடரும்” என்று பண்டித நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது, தமிழகத்தின் கோரிக்கைக்குச் செவி மடுத்து, இந்திய நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறும் வகையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் அடுக்கடுக்காகத் தொடர்ந்து இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமஸ்கிருத மொழி வாரம், ஆசிரியர் தினத்தை “குரு உத்சவ்” என்று மாற்றியது, அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்தியை முதன்மைப் பாடமாக வைக்க வேண்டும் என்று அறிவித்தது, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சில ஆயிரம் பேரிடம் மட்டுமே புழக்கத்திலுள்ள சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ் மொழியைப் பின்னுக்குத் தள்ளி இந்திக்கு முதல் மரியாதை, இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகளை இந்தியில் மட்டுமே வெளியிடுவது, பொங்கல் பண்டிகை விடுமுறையை மத்திய அரசு அலுவலகங்களில் ரத்து செய்தது - என்று இன்னும் பல்வேறு இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை வேகவேகமாக “ஆட்சி மொழியை வளர்க்கிறோம்” என்ற போர்வையில் பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் “நீட்” தேர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற குடியரசுத் தலைவரை அவசரமாக அணுகாத மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, “பாராளுமன்றத்தில் பிரதமரும், அமைச்சர்களும் இந்தியிலேயே பதில் அளிக்க வேண்டும். விமான டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், வங்கிப் படிவங்கள், விண்ணப்பங்களில் இந்தியில் அச்சடிக்கலாம், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடம், அதேபோல் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியில் தேர்வு எழுதலாம், நேர்காணல் நடத்தலாம், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் இந்தி மொழியில் எழுதலாம்” என்று அவசர அவசரமாக குடியரசுத் தலைவரிடம் ஆணை பெற்று அமலுக்குக் கொண்டு வருகிறது. இந்தி பேசாத மாநில மக்களையோ, மாணவர்களையோ பற்றி கவலையேபடாமல் இப்படியொரு இந்தித் திணிப்பு எனும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கே ஊனம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு செயல்படுவதற்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தித் திணிப்பு நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், “ஆட்சிமொழிக்கான பாராளுமன்ற குழு கொடுத்த 9-ஆவது அறிக்கையின் படியே குடியரசுத் தலைவரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இந்தியைப் பயன்படுத்த அது ஒரு வேண்டுகோள்தானே தவிர, கட்டாயமான உத்தரவு அல்ல” என்று தற்போது உள்துறை அமைச்சகத்தின் சார்பில் திசை திருப்பும் நோக்கோடு மழுப்பலாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், மத்திய பா.ஜ.க. அரசின் “இந்தித் திணிப்பு அவசரம்” உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மட்டுமல்ல - இந்தி பேசாத அனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும் மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியம் செய்து உதாசீனப் படுத்துவதாகவே மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது.
“உத்தரவு அல்ல. வேண்டுகோள்தான்” என்றெல்லாம் திரை மறைவில் சொல்லிவிட்டு நேரடியாக இந்தித் திணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது, மத்திய பா.ஜ.க. அரசு கூறி வரும் “கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு”க் கொஞ்சம்கூடப் பொருத்தமான நடவடிக்கையாக இல்லை. குறிப்பாக தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பையும், இந்திமொழியை தமிழகத்தில் எப்படியாவது புகுத்திவிட வேண்டும் என்பதில் இருக்கும் குறுகிய நோக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே பா.ஜ.க. தலைமை யிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்க தயக்கம் காட்டுவதும், சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட தமிழை வழக்காடு மொழியாக ஏற்க மறுப்பதும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளாக இருக்கின்றன. இதை தமிழகமும், தமிழக மக்களும், மாணவர் சமுதாயமும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது என்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் ஆணித்தரமாகவும் அறுதியிட்டும் தெரிவித்துக் கொள்கிறது.
ஆகவே இந்தித் திணிப்பு எனும் மொழிவெறி நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதே நேரத்தில், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் இந்த தீவிர “இந்தி திணிப்பு நடவடிக்கையையும்” “திட்டமிட்ட தமிழ் மொழிப் புறக்கணிப்பையும்” தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், மக்களுக்கும் எடுத்துச் சென்று எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது. எனவே, “தமிழ் மொழியை இரண்டாம் தரத்திற்குத் தள்ளிவிட்டு இந்தியை வலிந்து திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் நஞ்சையொத்த நயவஞ்சகத் திட்டங்களை” எதிர்த்து மாவட்டந்தோறும் பல்வேறு கட்டங்களாக கருத்தரங்குகள் நடத்துவது என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் : 4
நீட் தேர்வு வேண்டாம்; விலக்களிக்கும் மசோதாவுக்கு
உடனடி ஒப்புதல் வேண்டும்!
மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கும், மருத்துவ மேற்படிப்புகளில் சேரவும் “நீட்” என்ற நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அவர்கள் பேட்டியளித்துள்ளார். நுழைவுத் தேர்வை ரத்து செய்து பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் ஏழை எளிய நடுத்தர மற்றும் கிராமப்புற மாணவர்களும் இடஒதுக்கீட்டின்படி பொறியாளர்களாக, மருத்துவர்களாக பட்டம் பெறுவதற்கு வித்திட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பெருமையுடன் பதிவு செய்கிறது.
கிராமப்புற மாணவர்கள், நகர்புறத்தில் உள்ள ஏழை மாணவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் “நீட்” நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படுவதால், இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக கழகச் செயல் தலைவர் தளபதி அவர்கள் பிரதமர் அவர்களுக்கு 11.02.2017 அன்று கடிதம் எழுதி, அதை நேரடியாக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் சேர்த்திருக்கிறார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் இரு மசோதாக்களை தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு கொண்டு வந்தபோது அதை எதிர்க் கட்சி என்ற முறையில் மனமுவந்து ஆதரித்து நிறைவேற்றிக் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனாலும் அதிமுக அரசு “நீட்” மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இதுவரை பெற முயற்சிக்கவில்லை. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் தமிழக சட்டமன்றத்தின் ஒரு மித்த உணர்வை மதித்து இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தரும் வகையில் காரியமாற்றவில்லை. இதனால் மாணவர்கள் - குறிப்பாக கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற ஏழை மாணவர்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகும் நிலை உருவாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் கிடைக்கும் 50 சதவீத இடஒதுக்கீடும் பாதிக்கப்படுவதால், கிராமப்புற மருத்துவமனைகளில் அரசு டாக்டர்களின் எண்ணிக்கை குறைந்து கிராம மக்களுக்குக் கிடைக்க வேண்டிய தரமான சிகிச்சை, சுகாதார வசதிகள் கிடைக்காமல் போவதற்கான பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள இரு மசோதாக்களுக்கும் மத்திய அரசு உடனடியாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுக் கொடுத்து, தமிழகத்திற்கு “நீட்” தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தமிழக மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 5
குடிநீர்ப் பஞ்சம் தணிக்கப் போர்க்கால நடவடிக்கை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைக் கொண்டு வராதது, அறிவித்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டது, அண்டை மாநிலங்களுடன் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு உரிய நீரைப் பெறாதது போன்ற அதிமுக அரசின் படுதோல்வி நடவடிக்கைகளால் தமிழகம் கடும் தண்ணீர்ப் பற்றாக் குறையைச் சந்தித்துள்ளது. ஏரி, குளங்கள் தூர் வாராதது - மழை வெள்ளம் வந்தபோது, அந்த நீரைச் சேமித்து வைக்கத் தவறியது - பருவ மழை பொய்த்துப் போனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கென முன்கூட்டியே தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றாமல் அதிமுக அரசு கடந்த ஆறு வருடங்களாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கோட்டை விட்டுவிட்டது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எப்படி எடுப்பது என்றே தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு. கூட்டுக் குடிநீர் திட்டங்களை முறையாகப் பராமரித்து, பஞ்சாயத்து, ஒன்றியம், நகரம் அளவிலான குடிநீர்த் தேவைகளுக்கு உரிய உள்ளூர் குடிநீர் திட்டங்களை உருப்படியாக அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் முயற்சியிலும் அணுவளவேனும் அக்கறை செலுத்தவில்லை என்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகவே இனியும் காலதாமதம் செய்யாமல் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து தாய்மார்கள் படும் அவதியைப் போக்கிட போர்க்கால நடவடிக்கையில் அதிமுக அரசு ஈடுபட வேண்டும் என்றும், தண்ணீர் கிடைக்காத இடங்களில் லாரிகள் மூலம் விநியோகம் செய்து பொதுமக்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 6
உடனடித் தேவை முழு மதுவிலக்கு!
தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் இருந்து அதிமுக அரசு பின் வாங்கி விட்டது கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்ததும் பெயரளவுக்கு வருமானம் இல்லாத சில மதுக்கடைகளை மட்டும் மூடிவிட்டு இப்போது உச்சநீதிமன்றம் தீரப்பளித்தும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடாமல் சாலைகளை வகை மாற்றம் செய்து மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்திட முயற்சித்தது. அதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்து அதற்கு இடைக்காலத் தடையும் வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் தாய்மார்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு போராடுவதும், சில கடைகளை அடித்து உடைப்பதும் மக்கள் மதுக்கடைகளைத் திறக்கும் அதிமுக அரசு மீது எந்த அளவுக்கு ஆத்திரத்திலும் கடுமையான கோபத்திலும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த தேர்தலின் போதே, முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பெருமையுடன் பதிவு செய்கிறது. எனவே சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலுவிழக்க வைக்கும் அராஜக அணுகுமுறையைக் கடைபிடிக்காமல் முழு மதுவிலக்கை அமல்படுத்த இதயசுத்தியுடன் அதிமுக அரசு செயல்பட முன்வர வேண்டும். வருவாய் என்ற ஒரு கோணத்தில் மட்டும் மதுக்கடைகளை மூடுவதைப் பார்க்காமல், மதுக் கடைகளை ஒரு சமூகக் கொடுமையாக எண்ணி அதிமுக அரசு செயல்பட வேண்டும். தாய்மார்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மூடப்படும் மதுக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தாமதமின்றி மாற்று வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டு கொள்கிறது.
தீர்மானம் : 7
விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுக!
தமிழக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில்
பெற்ற கடன்களை மே 25 ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற டெல்லியில் போராடிய விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் திரு.அய்யாக்கண்ணு அவர்களின் கோரிக்கையை மத்திய - மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசின் சார்பில், கடந்த காலங்களில் இருந்த பிரதமர் திரு வி.பி.சிங் அவர்கள் 10ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனையும், டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் 70 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ள முன்னுதாரணம் இருப்பதால், ஆக்கபூர்வமான அந்த முன்னுதாரணங்களின் அடிப்படையில் மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கையைப் பரிசீலித்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தற்கொலை செய்து கொண்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண நிதியை இன்னும் வழங்காமல் தாமதிக்கும் அதிமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன், விவசாயிகளின் துயர்துடைக்க பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண நிதியை வழங்கிட வேண்டுமென்று இந்தக் கூட்டம் அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
காவிரி இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும், அந்த இறுதித் தீர்ப்பின் பயனை தமிழக விவசாயிகள் இன்னும் அனுபவிக்க முடியவில்லை என்பதை மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. அரசியல் நோக்கத்தோடு மத்திய அரசும் தலையிட்டு தமிழக உரிமைகளை நிலை நாட்ட மறுப்பது கவலையளிக்கிறது. 2013ஆம் ஆண்டே இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் நான்கு வருடங்களுக்கு மேலாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்காமல் இருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிவற்றை அமைத்து தமிழக விவசாயிகளின் காவிரி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: