புதன், 26 ஏப்ரல், 2017

1916 முதல் தமிழப்படம் .. தமிழ்சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம்! மே தினத்தில் காமராஜர் அரங்கில் ..

மே தினத்தில் தமிழ்சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம்!
தமிழ் சினிமா இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. 1916ஆம் ஆண்டில், கீசக வதம் என்கிற முழு நீள சலனப்படத்தை இயக்கி, தயாரித்து தென்னிந்தியாவுக்கே சினிமாவை அறிமுகப்படுத்தியவர் ஆர். நடராஜ முதலியார். அவரிலிருந்து தொடங்கும் தமிழ் சினிமா வரலாறு இந்த ஆண்டு நூற்றாண்டை எட்டியுள்ளது. இந்நிலையில் நூற்றாண்டு விழாவையொட்டி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நிறுவனராக இருக்கும் உலகாயுதா அமைப்பு தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்கும் 33 அமைப்புகளைச்சேர்ந்த நூறு மூத்த தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ஒரு சவரன் தங்க பதக்கம் வழங்க உள்ளதாகவும் இதற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஏற்கனவே இந்த அமைப்பு தமிழ் சினிமாவின் 75ஆம் ஆண்டுவிழாவின்போது 75 சினிமா தொழிலாளர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கி பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

விழா குறித்து பேசிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘உழைப்பாளர் தினமான மே முதல்நாள் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இவ்விழா நடைபெறவுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மே தினத்தைக் கொண்டாடிய சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பெயரில் விழா மேடை அமைக்கிறோம். தமிழ் சினிமாவுக்கான முதல் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாஸ் ஆகியோரது உருவப்படங்கள் திறந்து வைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: