ஞாயிறு, 8 ஜனவரி, 2017

தமிழக மக்களின் நாடித்துடிப்பு... கருத்து கணிப்புகள் கூறும் திருப்பு முனைகள்.. நக்கீரன் களத்தில்

 ஜெ.வின் மறைவு தமிழக அரசியலில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கூறுகிறார்கள். அது என்ன வெற்றிடம். அதன் நீளம், அகலம், ஆழம், உயரம் என்ன? வெற்றிடத்தின் மொத்த பரப்பளவு என்ன? அந்த வெற்றிடம் என்னவாகும் என்பதை வெளிப்படுத்த யாரும் தயாராக இல்லை. ஜெ.வுக்கு பதில் வி.கே.சசிகலாவை அ.தி.மு.க.வின் ஆறாவது பொதுச்செயலாளராக அறிவித்தவுடன், அது ஜெ.வின் மறைவால் உருவான வெற்றிடத்தை நிரப்பும் என்றார்கள் அ.தி.மு.க. தலைவர்கள். தமிழக அரசிய  லில் ஜெ.வின் மரணம் உருவாக்கிய வெற்றிடத்தை சசிகலாவால் நிரப்ப முடியுமா? என்கிற கேள்வியை முன்வைத்து ஜனநாயகத்தின் எஜமானர்களான பொதுமக்களின் மனநிலையை அறியும் வகையில் தமிழகம் தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை 2016 டிச.30, 31, 2017 ஜன.1 ஆகிய தேதிகளில் நக்கீரன் மேற்கொண்டது.;தமிழகத்தின் அரசியல் தன்மையையும், வாக்காளர்களின் அரசியல் உணர்வையும் கவனத்தில் கொண்டு களம் இறங்கி மக்களை சந்தித்து களமாடிய நக்கீரன் சர்வே படை, ஜெ.வின் மரணம் உருவாக்கிய அரசியல் வெற்றிடத்தைப் பற்றி பொதுமக்களின் பார்வை என்ன என்பதைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.




பத்து ரூபாய் உறுப்பினர் கட்டணம் கட்டி அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்த ஒருவர், அ.தி. மு.க.வின் சர்வ அதிகாரம் படைத்த பொதுச் செய லாளர் பதவிக்கு போட்டியிடுபவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யலாம் என கட்சியின் நிறு வனரான எம்.ஜி.ஆர். அதன் அமைப்பு விதிகளை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், 1 கோடிக்கும் அதிகமான அ.தி.மு.க. உறுப்பினர்களில் 65% பேர், "ஜெ. இடத்தில் சசிகலா பொதுச்செய லாளர் ஆனதை எதிர்க்கிறோம்' என தெரிவித்து இருக்கிறார்கள். பொதுக்குழு வில் கட்சி நிர்வாகிகள், சசிகலாவை பொதுச் செயலாள ராக ஏற்றுக் கொண்டதை பெரும்பான்மையான அ.தி.மு.க. உறுப்பினர்கள் நிராகரிக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவல், ஜெ. ஏற்படுத்தியுள்ள வெற்றிடத் தைத் துல்லியமாகக் காட்டியது.
>சசிகலாவை அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணமாக சொல்வது, ""ஜெ.வுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வில்லை. இன்னும் பத்து ஆண்டுகள் ஜெ. வாழ்ந் திருந்தால் இந்திய பிரதமராகவோ ஜனாதிபதி யாகவோ வந்திருப்பார். அப்போது ஜெ.வின் விருப்பப்படி, சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவோ, முதல்வராகவோ முறைப்படி வந்தால் தப்பில்லை. ஆனால் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் என்ன நடந்துச்சு, எப்படி அவங்க இறந்தாங்கன்னு சொல்லாமல், எதிர்பாராத ஜெ.வின் மரணத்தைப் பயன்படுத்தி பொதுச் செயலாளரானதும், முதல்வராவதும் தப்பு. நாங்க ஏற்க மாட்டோம்.


கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, வெறும் இரண்டு வரியில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பத்தி பேசுனாங்க. எழுபத்தைந்து நாள் நீண்டு நின்ற சிகிச்சை பத்தி எவ்வளவோ பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. அதைப் பத்தி வெறும் இரண்டு வரிகளில் சசிகலா பேசிட்டு போனா எப்படி? அம்மாவோட கார்ல வரலாம். அம்மா மாதிரி ஜாக்கெட், பொட்டு, கொண்டையெல்லாம் போட்டுக்கலாம்... அம்மா முகத்தை ஒட்டிக்க முடியாது.அது யாருக்கும் ஒட்டாது. எங்களுக்கு சசிகலா வேண்டாம்'' என்கிறார்கள் கோவை யைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்களான விஜயாவும் விநாயகமும் கோபம் அடங்காமல்.
;அ.தி.மு.க. உறுப்பினர்களின் இந்த உணர்வின் அடிப்படையில் சசிகலாவை எதிர்ப்பவர்களிடம்,

 "ஏன் எதிர்க்கிறீôர்கள்' என்கிற நமது கேள்விக்கு "ஜெ.வின் மரணத்திற்கு காரணமானவர்' என 26 சதவிகித அ.தி.மு.க. உறுப்பினர்கள் சசிகலாவை சுட்டிக் காட்டுகிறார்கள்.

சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததை வரவேற்கும் 27 சதவிகித அ.தி.மு.க. தொண்டர்களில் "சசிகலாவை விட்டால் வேறு தலைவர் இல்லை' என அ.தி.மு.க.வின் நிர்வாக இயலாமையையே அதிகமாக சுட்டிக் காட்டுகிறார்கள்.

""எங்க செங்கோட்டையன் அடங்கிப் போயிட்டாருங்க. அவர் சசிகலாவை எதிர்த்து கொங்கு மண்டலத்துல ஒரு ரவுண்டு வந்திருந்தாருன்னா சசிகலாவால பொதுச் செயலாளர் ஆகியிருக்க முடியாதுங்க'' என சவால் விடுக்கிறார் கொங்கு மண்டல அ.தி.மு.க. தொண்டர் ஒருவர். "

இப்போதுள்ள சூழ்நிலையில் கட்சி நடத்துவதற்கும் தலைமை ஏற்று திறம்பட நடத்துவதற்கும் எங்கள் கட்சியில் தகுதியான தலைவர்கள் இல்லை. கட்சி நடத்த பணமும் கொஞ்சம் அறிமுகமும் தேவை. இன்றைய சூழலில் அ.தி.மு.க.வை வழிநடத்தி செல்ல வேறு யாராலும் முடியாது'' என்கிறார் தியாக துருகம் ரங்கநாதன்.

நாங்க தாங்க ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்டோம். இனிமே கேட்க மாட்டோம். நாங்களே ஓட்டு போட மாட்டோம்'' என வெளிப்படையாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேசும் காட்சிகளை தமிழகம் முழுவதும் கேட்க முடிந்தது.

ஜெ.வுக்கு சசி சமமானவரல்ல'' எனச் சொல்லும் அ.தி.மு.க. உறுப்பினர்களில் ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல் அராஜகங்களுக்கு சசிதான் காரணம்'' என அவரை எதிர்ப்பவரில் பத்து சதவிகிதம் பேர் குற்றம் சாட்டுகிறார்கள்.

சசிகலா மூலம் அவரது சமூக பிரமுகர்கள் மற்றும் மன்னார்குடி மாஃபியா வெளியே வரும்'' என இன்னொரு பத்து சதவிகித அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூறுகிறார்கள். ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அ.தி.மு.க.வின் தலைவியாக வர வேண்டும் என்கிற குரலையும் அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.

இந்த மனநிலையில் இருக்கும் அ.தி.மு.க. உறுப்பினர்களில் 52 சதவிகிதம் பேர். ""நாங்கள் இரட்டை இலைக்கு ஓட்டளிக்க மாட்டோம்'' என உறுதி யாக தெரிவிக்கிறார்கள்.

;அ.தி.மு.க. உறுப் பினர்களைக் காட்டிலும் உறுப்பினரல்லாத அ.தி.மு.க. வாக்காளர்களில் 70 சதவிகிதம் பேர் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை ஏற்கவில்லை. அ.தி.மு.க. உறுப்பினர்களை விட மிகத் தெளிவாக பேசு கிறார்கள் அ.தி.மு.க. வாக் காளர்கள்.

கூட இருந்து குழிபறிக்கிறதுன்னா எப்படின்னு எனக்கு தெரியாம இருந்துச்சு. அது இப்படித்தான்னு எனக்கு மட்டுமில்ல, ஊருக்கே சசிகலா சொல்லிக் கொடுத்துருக்காங்க. ஜெ. செத்தப்ப, அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்ட நாங்களே எங்கள் வீட்டில் ஒருவர் தவறியது போல் உண் ணாமலும் உறங்காமலும் நல்லது கெட்டதுலயும் கலந்துக்காம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம். ஆனால் இந்த சசிகலா வோ, ஜெ. இறந்த மறுநாளே சோ இறப்புக்கு போனார். இப்ப பொதுச் செயலாளரா வந்து, முதலமைச்சராகவும் வரப் போகிறாராம். இதுல இருந்தே தெரியுதே... சசிகலாவிற்கு பதவி ஆசை வந்துட்டதே தவிர ஜெ. இறப்பை பற்றி யெல்லாம் கவ லைப் படவில்லை'' என்கிறார்கள்,

சசிகலா சட்ட மன்றத் தேர்தலில் நிற்க குறி வைக்கும் தேனி மாவட்ட அ.தி.மு.க. வாக்காளர்கள். ""நாங்க ஜெயலலிதா முதலமைச்சரா வரணும்னுதாங்க அந்தம்மா வுக்கு ஓட்டுப் போட்டோம். அந்தம்மா மரண மான பொறவு சட்டசபையை கலைச்சிருக் கணும். சசிகலா முதலமைச்சரா வரணும்னு நாங்க ஒட்டுப் போடலையே'' என லாஜிக்காக பேசுகிறார் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. வாக்காளர்  ஒருவர்.

;ஜெ. மரணமும் சசிகலா குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வந்தால் அதிகரிக்கப் போகும் சாதி ஆதிக்கத்தையும் எதிர்த்து, அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட நாங்க சசிகலா உருவ பொம்மையை எரிச்சுட்டோம்'' என்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மறமடக்கி என்கிற ஊரைச் சேர்ந்த ராசாத்தி.அ.தி.மு.க. வாக்காளர்களில் சசிகலாவின் தலைமையை ஏற்காத 70 சதவிகிதம் பேரில் 67 சதவிகிதம் பேர் ""நாங்கள் மறுபடியும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டோம்'' என உறுதியாக தெரிவிக்கிறார்கள்."ஜெ.வுக்கு எந்த விதத்திலும் சசிகலா இணையானவர் அல்ல' என சசிகலாவை எதிர்க்கும் அ.தி.மு.க. வாக்காளர்கள் 29 சதவிகிதம் பேர் உறுதியாக சொல் கிறார்கள். அத்துடன் ஜெ.வின் மரணத்திற்கு காரணமானவர் என 24 சதவிகிதம் அ.தி.மு.க. வாக்காளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

;அ.தி.மு.க. வாக்காளர்களை போலவே எந்த கட்சியையும் சாராத பொதுமக்களில் 70 சதவிகிதம் பேர் "ஜெ. இடத்தில் சசிகலா' என்பதை எதிர்க்கிறார்கள். "ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல் அராஜகங்களுக்கு சசிகலா தான் காரணம்' என்றும் "சசிகலா முதல்வரானால் அவரது சமூக பிரிவினரின் ஆதிக்கம் அதிகமாகும்' என்றும் குற் றம் சாட்டு கிறார்கள். அ.தி.மு.க. உறுப்பினர் கள், வாக் காளர்கள், பிற கட்சியினர் ஆகிய மூன்று பிரிவை சேர்ந்தவர்களை விட எந்த கட்சியையும் சேராத பொதுமக்களிடம்தான் ஜெ.வின் சிகிச்சையில் உள்ள மர்மங்கள் பற்றிய சந்தேகம் மிக மிக அதிகமாக எதிரொலிக்கிறது.

"ஜெ.வின் மரணத்திற்கு காரணமானவர் என சசிகலா மீது ஓங்கி குற்றம் சாட்டுகிறார்கள் எந்த கட்சியையும் சேராத பொதுமக்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் "ஜெ.வின் மரணம் சந்தேக மரணம்' என உரக்க கத்துகிறார்கள். ""75 நாள் ஜெ.வின் நிலை என்ன என்பதை அ.தி.மு.க. தலைவர்கள் கிட்டயே காட்டலை. அவங்கள ஆஸ்பத்திரி என்கிற சிறையில் வச்சு சடலமா கொண்டு வந்து காட்டுறாங்க. அதிலும் இப்ப கால் இல்லை, பல் இல்லைன்னு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.  இதுக்கெல்லாம் பதில் சொல் லாம சசிகலா முதல்வர் பதவியில் உட்காருவதை ஏத்துக்க முடியாதுங்க'' என்கிறார் காஞ்சிபுரம் கீதா.>பொதுமக்களில் 24 சதவிகிதம் பேர் ஜெ.வின் மரணத்திற்கு காரணமானவர் என குற்றம் சாட்டுகிறார் கள். அவர்களை விட அதிகமாக 29 சத விகிதம் பேர்

ஜெ.வுக்கு சசி இணையான வரல்ல'' என்கிறார்கள். சசிகலாவை ஏற்காத பொதுமக்களில் 67 சதவிகிதம் பேர் ""நாங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க மாட்டோம்'' என்கிறார்கள்.

;அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாள ராக பதவியேற்றுள்ள சசிகலா, ஜெ.வை போல வெற்றிகரமான கட்சியாக மாற்ற வேண்டுமென் றால் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஜெ.வின் மரணம் சசிகலா தலைமை யிலான அ.தி. மு.க.வை 1987-89 காலகட்டத் தில் இருந்த ஜானகி அணியைப் போல மாற்றிவிட்டது. நிர்வாகிகள் ஆதரவுடன் ஜானகியும்  பொறுப்பு பொதுச் செயலாள ரானார். முதல்வருமானார். ஆனால் மக்கள் ஆதரவை பெறவில்லை. அந்த நிலையில்தான் சசிகலா இருக்கிறார் என்பதை நக்கீரனின் கருத்துக் கணிப்பு தெளிவாகச் சொல்கிறது. பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதுடன், இரட்டை இலை எனும் பலமான வாக்கு வங்கிக்கு ஏற்பட்டுள்ள சேதாரத்தையும் சரி செய்வது என்பது கடுமையான வேலைதான்.

-நக்கீரன் சர்வே படை
தொகுப்பு: தாமோதரன் பிரகாஷ்
உதவி: சி.சுரேஷ்குமார்சர்வே படை:
தென்மாவட்டம்: பரமசிவன், ராமகிருஷ்ணன், சக்திவேல், முகில், 
மணிகண்டன், ஷாகுல்
மேற்கு மாவட்டம்: சிவசுப்ரமணியன், ஜீவாதங்கவேல், ராஜா,
அருள்குமார், வடிவேல்
மத்திய மாவட்டம்: ஜெ.டி.ஆர்., பகத்சிங், செல்வகுமார்
வடமாவட்டம்: எஸ்.பி.சேகர், சுந்தரபாண்டியன், காளிதாஸ்
சென்னை: மனோ, அரவிந்த், ஜீவாபாரதி, அருண்பாண்டியன்
படங்கள் : ஸ்டாலின், ராம்குமார், அண்ணல்



வேறு யாரும் இல்லையே!-ஆதரிப்போர் மனநிலை!
;பெரும்பான்மை அ.தி.மு.க. உறுப் பினர்கள், வாக்காளர்கள், பொதுமக்கள் எதிர்த்தாலும் இவர்களில் 25 சதவிகித ஆதரவை சராசரியாக சசிகலா பெறுகிறார். ஒ.பி.எஸ்., தீபா போன்ற சசிகலாவுக்கு மாற்றாக வருபவர்கள் குறைந்த ஆதரவே பெறுகிறார்கள். ஜெ.வுடனேயே இருந்தவர் என்பதும், சசிகலா தவிர வேறு தலைவர்கள் இல்லை என்பதும், சசிகலாவை இவர்கள் ஆதரிப்பதற்கு காரணமாக உள்ளது. இந்த அரசு ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். அதற்காக சசிகலாவை ஆதரிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனாலும் அ.தி.மு.க.வின் வாக்கு சதவிகிதமான 30 சதவிகிதத்துக்கும் மிகக் குறைவான அளவிலேயே இந்த ஆதரவு உள்ளது.

கருத்துகள் இல்லை: