வியாழன், 12 ஜனவரி, 2017

200 வகை காளைகள் இருந்த தமிழ் நாட்டில் 30 வகை காளைகள்தான் உள்ளன! – சூர்யா

ஜல்லிக்கட்டு நம் கலாச்சார சின்னம்… அதைத் தடை செய்யக் கூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்கள்தான் உள்ளன. பொங்கலின் உச்சமான, தமிழரின் வீரம் செறிந்த விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இன்னமும் மத்திய அரசு ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கத்துக்கான எந்த முயற்சியும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும், பல்வேறு அமைப்புகளும், கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்றும் சிலர் முடிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இந்த ஆண்டு கட்டாயம் ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “200 வகையான காளைகள் இருந்த நம் நாட்டில், இப்போது 30 வகைகள்கூட இல்லை என்கிறார்கள். அவை அப்படியே அழிந்து கொண்டிருக்கின்றன; அவற்றை எப்படி நாம் பராமரிக்கப் போகிறோம் என்பதுதான் எனது முதல் கேள்வியாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு என்பது நமது நாட்டு இன மாடுகளைப் பாதுகாக்கும் ஒரு விஷயம். அதுமட்டுமல்ல, நமது கலாசாரத்தோடு, அடையாளத்தோடு கலந்த ஒரு விஷயம் ஜல்லிக்கட்டு. அதைத் தடை செய்யக்கூடாது.. நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
/tamil.filmibeat.co

கருத்துகள் இல்லை: