ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

தங்க பதக்கங்கள் வென்ற பூஜா தற்கொலை! மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு.....

மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக்குக்கும், இறகுப் பந்து போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு பாராட்டுகளும் பரிசு மழைகளும் பொழியும் நிலையில் தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை பூஜா, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வறுமை காரணமாக தற்கொலை செய்திருப்பது துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய வறுமைச் சூழலையும் துயரங்களையும் பட்டியலிட்டுள்ள அவர், தன் வாழ்வை முடித்துள்ளது அவரது அவல வாழ்வை வெளிப்படுத்தி உள்ளது.
பஞ்சாபின் பாடியாலா கால்சா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை பூஜாவுக்கு வயது 20. இளம் வயதிலேயே கைப்பந்து போட்டியில் ஆர்வமுள்ள பூஜா, தன்னை சுயமாக வளர்த்துக் கொண்டார். தட்டுத்தடுமாறி வளர்ந்து கல்லூரி வரை வந்துவிட்ட பூஜாவுக்குக் கல்லூரியில் தங்கும் கட்டணம், போக்குவரத்துச் செலவுக்கான பணம் என எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனையடைந்த அவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் “சமுதாயத்தில் என்னைப் போன்று வறுமையான சூழலில் பிறந்து வாழவும் கல்வி கற்கவும் வழியற்றுப் போன பெண்களுக்குக் கல்வி உள்ளிட்ட வசதிகளை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

(பூஜா வென்ற பதக்கங்களோடு தந்தை)

பூஜாவின் தந்தை காய்கறி விற்பனை செய்பவர். அவருக்கு வரும் சொற்ப வருமானத்தில் மகளை படிக்க வைக்க முடியவில்லை. பூஜாவின் பெற்றோர் கடந்த ஆண்டு அவரை கல்லூரியில் சேர்க்கும்போது இலவச தங்கும் விடுதியும், உணவும் வழங்குவோம் என்று உத்தரவாதம் கொடுத்ததால்தான் பூஜாவின் பெற்றோர் அவரை அந்த கல்லூரியில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், அந்த கல்லூரி இந்த ஆண்டு தங்கும் விடுதிக்கும், உணவுக்கும் பணம் கேட்டுள்ளதோடு முடியாவிட்டால் தங்கும் இடத்தை காலி செய்யுமாறும் கோரியுள்ளது. பல நேரங்களில் உணவு கிடைக்காத பூஜா பணமின்றி பட்டினி கிடந்துள்ளார். பின்னர் முடியாமல் விடுதியில் இருந்து வெளியேறிய பூஜா, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். ஆனால், ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று வரும் செலவு ரூபாய் 120 அதை அந்த ஏழைப் பெற்றோரால் கொடுக்க முடியாத நிலையில் மனமுடைந்த பூஜா தற்கொலை செய்துள்ளார். இது பற்றி கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “பூஜாவுக்கு இலவசக் கல்வி பயில அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அவருடைய செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இலவச சேவைகளை நிறுத்தினோம்” என்கிறது கல்லூரி நிர்வாகம்.
பூஜா எழுதியுள்ள நான்கு பக்க தற்கொலை கடிதம் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் தன் பயிற்சியாளரும் தன் தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், “எனக்கு தங்கும் விடுதி மறுக்கப்பட, அவரும் ஒரு முக்கியமான காரணகர்த்தா. என்னுடைய வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்ல மாதம் ரூபாய் 3,720 செலவாகும் நிலையில் அதை எப்படி என் பெற்றோரால் கொடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பிவிட்டு, தன் உயிரை மாய்த்துள்ளார்.

(பிணமாக பூஜா)
வென்றவர்களின் கதைகளை மட்டுமே கேட்டுக்கேட்டு பழகிப் போன நாம், பூஜா போன்றவர்களின் கதைகளையும் கேட்க வேண்டும். சிந்து வென்றதும் அவரை மனதார பாராட்டுவதை விட்டுவிட்டு அவர் என்ன சாதி என்பதை தெரிந்துகொள்ள கூகுளில் தேடிய 30 லட்சம் பேரில் சரி பாதி பேராவது பூஜாக்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் இந்த அவல நிலை மறைந்து நாம் ஒலிம்பிக்கில் நாம் ஜொலிக்க முடியும்!   மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: