வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பழங்குடி தலைவர் K.A.குணசேகரன் அஞ்சலி

சந்திர மோகன்thetimestamil.com  சந்திர மோகன்: தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளீ) பேரவையின் நிறுவனத் தலைவரும், தென்னிந்திய பழங்குடியினர் யூனியன் தலைவருமான மதிப்பிற்குரிய K.A.குணசேகரன் அவர்கள், 71 வயதில் நோயின் காரணமாக இறந்தார். மாலை 4 மணியளவில், பள்ளிப்பாளையம் மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
கொல்லிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாளீ பழங்குடியைச் சார்ந்தவர். தொலைத் தொடர்புத் துறையில் அரசுப் பணியில் ஊழியராக வாழ்க்கையைத் துவங்கிய அவர், 45 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார்.
நான் பயின்ற பல்கலைக்கழகங்கள் !
நான் எனது உலக அறிவை வெறும் கம்யூனிசப் புத்தகங்களிலிருந்து மட்டுமே பெறவில்லை. நான் பயின்ற பல்கலைக்கழகங்களில் புரட்சிகரமான கிராமப்புற வேலையும், பழங்குடியினர் வேலையும் முக்கியமானவை ஆகும்.

நீண்ட காலமாக பழங்குடியினர் பிரச்சினை, அவர்கள் மத்தியிலான வேலை என்பதை (அனைத்து இடதுசாரி செயல்வீரர்களையும் போல) நானும் பின்வருமாறு தான் புரிந்து கொண்டிருந்தேன்.
1) பழங்குடியினர் மலைகளில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் அரசாங்கத்தால் புறக்கணிக்கப் படுகிறவர்கள், சாகிறவர்கள்.
2) வனத்துறை மற்றும் காவல்துறையின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் (உதாரணமாக வாச்சாத்தி சம்பவம்).
3) வன உரிமைச் சட்டம் 2006 போன்ற நல்லதொரு வாய்ப்பு அமலாக்கப் படாததால் உரிமைகள் அற்று இருப்பவர்கள்.
இவற்றிற்காகப் போராட வேண்டும்.
இந்நிலையில்….
தமிழகப் பழங்குடியினர் பிரச்சினை பற்றிய விரிந்த உலகத்தை வழங்கியவர் தோழர். K.A.குணசேகரன்.
செம்மரக்கட்டை வெட்டச் சென்று திருப்பதிக் காடுகளில் சிக்கிச் சீரழிவது உட்பட, பழங்குடியினரின் பல்வேறு பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு காரணம் பழங்குடியினர் நிலம், அரசியல்வாதிகள், பணக்காரர்களால் அபகரிக்கப்படுவதும், தமிழ் நாட்டில் பழங்குடியினர் நிலத்தை பாதுகாக்க தனியாக சட்டம் இல்லாதிருத்தல்,
தமிழகத்தின் முக்கிய மலைப்பகுதிகள் செட்யூல்ட் ஏரியாவாக வகைப்படுத்தப்பட்டு, பழங்குடியினர் நிலம், வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5-வது அட்டவணையின் கீழ் தமிழகத்தைக் கொண்டு வருவது,
போலியாக பழங்குடியினர் ST எனச் சான்றிதழ் வாங்கி வேலைவாய்ப்புகளை பறித்துக் கொண்ட போலிகள் பற்றிய எச்சரிக்கையும், அவர்களை முறியடிப்பதும்
– போன்றவை ஆகும்.
அற்பமான காரணங்கள் கூறி வன உரிமைச் சட்டம் 2006யை, தமிழகத்தில் அமலாக்க மறுத்த பொழுது, 2009- 2013ல் நூற்றுக்கணக்கான கிராமங்களில் போட்டி கிராமசபைகளை அமைத்தது, மலை / காடு சார்ந்த சிறு வனப் பொருட்களை அரசாங்கத்தை மீறித் தாங்களே எடுத்துக் கொள்வது, வனத்துறை, அரசாங்க உத்தரவுகளுக்காக காத்திருக்காமல் தங்களுக்கானத் தார் சாலை, மண் சாலையைத் தாங்களே அமைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலமாக, பழங்குடியினர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதற்காகவும் (Empowerment) அவர் பணியாற்றினார்; உற்சாகம் ஊட்டினார்.
இணைந்து பணியாற்றிய தருணங்கள்
2009-10 காலங்களில் தான் தோழர். கே.ஏ.குணசேகரன் அவர்களோடு நெருக்கம் ஏற்பட்டது. சேர்வராயன் /ஏற்காடு மலைப் பகுதியில், வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டு வந்த சட்ட விரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக தோழர்கள் சிலரோடு இணைந்து பணியாற்றி ஆய்வு செய்து உண்மை அறியும் குழு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். எமது சார்பில், 2011ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
வேதாந்தா’வின் கொள்ளையை வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக முன்வைக்காமல், பழங்குடியினர் வாழ்வாதாரத்துடன் இணைத்து பிரச்சினையை நாங்கள் எழுப்பியதானது அவரை ஈர்த்தது; நம்பிக்கையையும் அதிகரித்தது. பின்வரும் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட்டோம்.
1)பழங்குடியினர் நிலம் அபகரிப்பு பற்றிய விரிவான கள ஆய்வு
2)வன உரிமைச் சட்டம் 2006 பற்றிய விழிப்புணர்வும், அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதலும்
3)2013 ல் ஆந்திரா செம்மரக் கட்டை விவகாரங்களில் பழங்குடியினர் சிக்கிச் சாவது மீதான ஜவ்வாது மலை / ஜமுனாமரத்தூர் ஆய்வு, உண்மை அறியும் குழு அறிக்கை, சிறையிலிருந்த பழங்குடி கைதிகளின் விடுதலைக்கான இயக்கம், 4)உண்மையானப் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு பங்கை, போலிப் பழங்குடியினர் அபகரித்துக் கொண்டதற்கு எதிரானப் போராட்டங்கள்…
ஆந்திர சிறைகளில் இருந்த பழங்குடித் தொழிலாளர்கள் விடுதலைக்குப் பணியாற்றிய AIPF முயற்சிகள் பற்றி அவர் பெரும் மதிப்பைக் கொண்டிருந்தார்.
பேச்சு, மூச்சு எல்லாமே…
திடீரென்று அழைப்பார்.
“காம்ரேட், இன்னைக்கு நியூஸ் பாத்திருப்பீங்க. முப்பது பேரு மாட்டியிருக்கான். கவுன்சிலிங் கொடுத்தாப் போதுமுன்னு எஸ்.பி, கலெக்டர் எல்லாம் சொல்றாங்க. டிரைபல் நிலத்தை மீட்டுத் தரதப் பத்தி எவனும் பேச மாட்டங்கறான்..”
“ஜி! பிப்த் /5th செட்யூல்ல இணைக்கனும்னு ஹை கோர்ட்ல கேஸ் போட்டிருக்கு. நளினி சிதம்பரம் பீஸ் வாங்காம நடத்துனாங்க. சாதகமா உத்தரவு வந்திருக்கு…”
“தோழர், இன்னைக்கு அங்க வரேன், இருக்கீங்களா, GR இருக்காறா ? ஒரு ட்ராப்ட் இருக்கு, உங்கள் ஒப்பினியன் வேணும்..”
பேச்சு, மூச்சு எல்லாம் பழங்குடி நலன் தான்.
அவர் பழங்குடி மத்தியில் இருந்து தோன்றிய அறிவாளி, செயல்வீரர்.
தேர்தல் காலங்களில்,அவரிடம் அரசியல் ரீதியான பலவீனங்கள் வெளிப்பட்ட போதும் கூட…
இடதுசாரிகள் கவனம் குவிக்கத் தவறிய தமிழகப் பழங்குடியினர் பிரச்சினைகளை மய்யமான விவாதப் பொருளாக கொண்டு வந்து சேர்த்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு.
தோழருக்கு செவ் வணக்கம்!
பழங்குடியினர் நிலம், வாழ்வுரிமைக்கானப் பணிகளைத் தொடர்வேன்!
சந்திரமோகன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை: