வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அவரு ஜெயிலுக்குப் போகக்கூடாது!’ - உத்தரவிட்ட உயரதிகாரி!

மின்னம்பலம்.காம் :வெள்ளி, 26 ஆக 2016 மொபைல் டேட்டாவை ஸ்வைப் செய்ததும் வாட்ஸ் அப், ‘எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து ஒருவழியாக கைது செய்யப்பட்டார்!’ என்ற மெசேஜை அனுப்பியது. நினைவூட்டலுக்காக நாம் ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் சொன்ன சில தகவல்களை அனுப்பியிருக்கேன்...’ என்ற மெசேஜும் அதைத்தொடர்ந்து சில மெசேஜ்களும் வந்து விழுந்தன.
‘‘மதன் காணாமல்போன விவகாரத்துக்கும் பாரிவேந்தருக்கும் தொடர்பு இருப்பதால், இதை அரசியலாகவும் பார்க்கிறார்கள். தேர்தலுக்குமுன்பு திமுக-வுக்கு தேர்தல் நிதியாக ரூ.10 கோடி கொடுத்திருக்கிறார் ரவி. அதாவது பாரிவேந்தரின் மகன். ஆனால், அதிமுக-வுக்கு எதுவும் நிதி கொடுக்கவில்லை. மதன் காணாமல்போன விவகாரம், தேர்தல் நிதி விவகாரம் எல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருக்கிறது. ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் போலீஸ் அமைதியாக இருக்கிறது.

மதன் குடும்பத்தினர் புகார் கொடுத்த பிறகுதான் சென்னை போலீஸ் விசாரணையைத் தொடங்கும். அப்படித் தொடங்கும்போது, பாரிவேந்தரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவார்கள்.
பாரிவேந்தர் தரப்பிலோ, ‘எங்களுக்கும் மதனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் கட்சியில் ஒரு உறுப்பினர். அதைத்தாண்டி அவருக்கும் எங்களுக்குமான தொடர்புகள் எதுவும் இல்லை!’ என்று சொல்லிவருகிறார்கள். ஒருவேளை, ஜெயலலிதாவிடம் இருந்து கிரீன் சிக்னல் வந்துவிட்டால் தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ பிடி இறுகும் என்று போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். எப்படியிருந்தாலும் எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லவேண்டுமானால் மதன் வர வேண்டும். அவர் வருவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது’’ - இது, மே 31ஆம் தேதி நாம் டிஜிட்டல் திண்ணையில் சொன்னது.
அடுத்து ஜுன் 20ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் சொன்ன விஷயம்... ‘வேந்தர் மூவீஸ் மதன் காணாமல் போய் மூன்று வாரங்கள் ஆகின்றன. வழக்கு பதிவுசெய்து, விசாரணைக்கு என தனி அதிகாரி நியமித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மதன் இருக்கிறாரா… இல்லையா என்பதே விடைதெரியாத மர்மமாக இருக்கிறது. ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறது காவல்துறை என்று விசாரித்தால், அத்தனை கைகளும் கமிஷனர் ஆபீஸை நோக்கி நீளுகிறது!’

அடுத்து ஜுன் 21ஆம் தேதி நாம் சொன்னது இதுதான்...‘வடபழனியில் உள்ள மதனின் வீட்டில் காவல்துறையினர் திடீரென வந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை போலீஸார் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதில், 20 ரெசிப்ட்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு பணம் கொடுக்கப்பட்ட ரசீதுகளும், அந்த நிறுவனத்தின் பெயரில் எடுக்கப்பட்ட சில டிடி-களின் ஜெராக்ஸும் இருந்திருக்கின்றன. இதுதவிர, இரண்டு கம்ப்யூட்டர்களையும் காவல்துறை எடுத்துக்கொண்டு போயிருக்கிறது. இந்த கம்ப்யூட்டரில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழம் பற்றிய சில ஆவணங்களும் இருந்திருக்கின்றதன. ஆனால் என்ன காரணமோ, தெரியவில்லை… மதன் வீட்டில் சோதனை நடத்தியது பற்றி இதுவரை காவல்துறை தரப்பில் மூச்சு விடவே இல்லை. எதை மறைக்க காவல்துறை இப்படி நடந்துகொள்கிறது என்பது மதன் மாயனதைவிட பெரிய மர்மமாக இருக்கிறது!’
அடுத்து ஜுன் 25ஆம் தேதி நாம் சொன்னது...
“மதன் உயிரோடு இருக்கிறார் என்பதில் மட்டும் அவரது உறவினர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் இப்போது அமைதியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். மதனைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு இரண்டு வார காலம் நீதிமன்றம் அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால் உரிய காரணத்தை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் சொல்லியாக வேண்டும். ஏற்கனவே, எஸ்.ஆர்.எம். நிறுவனத் தரப்பில் மதன் காணாமல்போனது குறித்து யாரிடமெல்லாம் விசாரணை நடத்தப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதனால், இந்த இரண்டு வார கால அவகாசத்தில் எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் தரப்பில் விசாரணை நடத்தியே ஆகவேண்டிய கட்டாயம் காவல் துறைக்கு இருக்கிறது. அந்த விசாரணை நடக்கும்போது மதன் குடும்பத்தினரும் உடன் இருக்கலாம் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதனால், பாரிவேந்தர் மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோரிடம் விசாரணை நடக்கும்போது, மதனின் அம்மா தங்கம், மனைவி சுமலதா ஆகியோரும் உடன் செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. ‘மதனிடமிருந்து வாங்கிய பணத்தை வேந்தர் தரப்பில் திருப்பிக் கொடுத்தால்தான் அவர் வெளியில் வருவார்’ என்று சொல்கிறார்களாம் மதனுக்கு நெருக்கமானவர்கள். எப்படியோ இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மதன் விவகாரத்தில் அதிரடி திருப்பங்கள் இருக்கலாம்!” என்று ப்ளாஷ் ஃபேக் மெசேஜ்கள் முடிந்தன.

‘‘இப்போது என்ன நடந்தது?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்க... பதிலை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
’பச்சமுத்துவை விசாரணைக்கு அழைக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தது காவல் துறை அதிகாரி ஒருவர்தான். எப்படியாவது இந்த வழக்கிலிருந்து பச்சமுத்துவைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அந்த உயரதிகாரி ரொம்பவே ஆர்வம் காட்டி வந்தார். நீதிமன்றம் பல கேள்விகளை கேட்டபோதும்கூட பச்சமுத்துவை விசாரணைக்கு அழைக்கவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் அத்தனையும் கவனித்த கார்டன் தரப்பு, ‘அவரைக் கூப்பிட்டு விசாரிக்காமல் என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?’ என்று கோபத்துடன் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகே, வேறு வழியில்லாமல் நேற்று பச்சமுத்துவை விசாரணைக்கு அழைத்து வந்தார்கள். ’மீடியா பார்வைக்கு அவரை விடிய விடிய விசாரிப்பதுபோல இருக்கட்டும். அவருக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுங்க...’ விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் அந்த காவல் துறை உயரதிகாரி. அதன்படியே, நேற்று இரவு பச்சமுத்துவுக்கு ராஜ உபசாரத்தை நடத்தியிருக்கிறது காவல்துறை. விசாரணையின் முடிவில் அவரை வீட்டுக்கு அனுப்புவதுதான் திட்டம். ஆனால், கார்டனிலிருந்து பேசியவர்களோ, ‘சட்டப்படி அவர் மேல வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் செய்யுங்க. எந்தச் சலுகையும் காட்ட வேண்டாம்’ என, கறாராக சொன்னதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகே, இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை அந்த காவல்துறை அதிகாரி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் பரிசோதனைக்காக பச்சமுத்துவை அழைத்துச் செல்வதற்கு முன்பே, மருத்துவமனையில் இருந்த டாக்டர்களிடம் காவல்துறை உயரதிகாரி பேசிவிட்டாராம். ‘அவரு ஜெயிலுக்குப் போகக்கூடாது. அதுக்கு என்ன மாதிரி சர்ட்பிகேட் கொடுக்கணுமோ அப்படி கொடுத்துடுங்க... எந்தப் பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக்குறேன்...’ என்று சொல்லிவிட்டாராம். பச்சமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்களும், அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை எனச் சான்றிதழ் வழங்க... ஜெயிலுக்குப் பதிலாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்’ என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது.
“அந்த காவல்துறை அதிகாரி பச்சமுத்துவிடம் பாசம் காட்டுவது கார்டனுக்குத் தெரியுமா?’’ என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்க...

கருத்துகள் இல்லை: