வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ராகுல் : மன்னிப்பா? நெவர் ! ஆர்.எஸ்.எஸ்.பற்றிய எனது கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை!


மகாராஷ்டிர மாநிலம், சோனாலேயில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது, 'மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்எஸ்எஸ் அமைப்புதான்' என்று குற்றம்சாட்டி பேசியிருந்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக, பிவண்டி பகுதி ஆர்எஸ்எஸ் செயலாளர் ராஜேஷ் மகாதேவ் குந்தே என்பவர், பிவண்டியில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நடைபெற்று தற்போது, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆர்எஸ்எஸ் காரணம் என்று ராகுல்காந்தி ஒருபோதும் சொல்லவில்லை என்றார். இவ்வழக்கில், ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளநிலையில், மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். என குற்றம்சாட்டிப் பேசியது தவறு என்று, ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி ட்விட்டரில் ‘என்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளின் பக்கமும் எப்போதும் நான் நிற்கிறேன். பேசியதை மறுப்பவனில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பு மற்றும் பிரித்தாளும் நடவடிக்கைக்கு எதிரான எனது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை’ என்று ட்வீட் செய்துள்ளார்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: