ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

ரூ 60 லட்சம் மோசடி வழக்கு.. செந்தில் பாலாஜி மீது புகார்.. முன்னாள் போக்குவரத்து துறையில் பணபோக்குவரத்து ?

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு எதிரான புகார்கள் நாளுக்குநாள் எக்ஸ்பிரஸ் வேகமென அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதில் லேட்டஸ்ட்டான புகார், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பையாவின் புகார் ஆகும். அவரின் புகார் இதுதான் ‘வேலை வாங்கித் தருவதாக ரூ.60 லட்சம் மோசடி செய்துவிட்டார் செந்தில்பாலாஜி’. இதையொட்டி, அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: ‘அரசு போக்குவரத்துக் கழகத்தின் காரைக்குடி மண்டலத்தில் தொழில்நுட்ப உதவியாளராக உள்ளேன். மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜிமூலம் ஆட்களை நியமிக்கவுள்ளதாக மேலாண் இயக்குநராக இருந்த பாபு என்னிடம் கூறினார். இவரது பேச்சை நம்பி, எனக்குத் தெரிந்த பலரிடமிருந்து ரூ.60 லட்சம் வரை பணத்தை மேலாண் இயக்குநரிடம் வாங்கிக் கொடுத்தேன்.


இவர் ஓய்வுபெற்றதும், புதிய மேலாண் இயக்குநர் ரங்கராஜ் பணியை முடித்துத்தருவார் என்றார். ஆனால் உறுதியளித்தபடி யாருக்கும் வேலை தரவில்லை. மாறாக, சிலருக்கு மட்டும் கடந்தாண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றினார். மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, காரைக்குடி மண்டல முன்னாள் மேலாண் இயக்குநர் பாபு, தற்போதைய மேலாண் இயக்குநர் ரங்கராஜ் உள்ளிட்டோர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இதேபோல் திருப்பத்தூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், சுப்பையா பணத்தை வாங்கி ஏமாற்றியதால் அவர்மீது நடவடிக்கை கோரி மனுச் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.விமலா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, மனுக்கள்மீதான விசாரணையை ஆகஸ்ட் 23க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: