வியாழன், 2 ஜூன், 2016

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு டென்ஷனில் அர்ச்சகர்கள், ஜோதிடர்கள், யோகா மாணவர்கள்

மின்னம்பலம் : . ‘‘தேர்தல் முடிவைவிட ஜெயலலிதா அதிகம் எதிர்பார்த்திருந்தது சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின் தீர்ப்பைத்தான். அது இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்துவருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி நடந்த விசாரணையின்போது, ஜுன் 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாகவும், அனைத்துத் தரப்பினரும் அன்றே தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் சொல்லியிருந்தனர். அந்த இறுதிக்கட்ட விசாரணை இன்று நடந்தது. இன்று காலையிலிருந்தே ஜெயலலிதா சற்று டென்ஷனாகவே இருந்தாராம்.
 வழக்கம்போல எழுந்தவர், இன்று நீண்டநேரம் பூஜையில் உட்கார்ந்திருந்தாராம். டெல்லியில் இருந்த படியே வழக்கறிஞர்கள் கார்டனில் இருக்கும் பூங்குன்றனுக்கு வழக்கு பற்றிய தகவல்களைச் சொல்ல அதை உடனுக்குடன் ஜெயலலிதாவிடம் இண்டர்காம் மூலமாக சொல்லிக்கொண்டே இருந்தாராம் .. பூங்குன்றனின் போனில் சொன்ன தகவல்களுக்கு ஜெயலலிதா எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்தாராம்.


காலை 11 மணியளவில் மதுரையில் உள்ள கோயில் ஒன்றிலிருந்து பிரசாதம் கார்டனுக்கு வந்திருக்கிறது. அதை பூங்குன்றன்தான் வாங்கிக்கொண்டாராம். முதல்வருக்கும், பிரசாதம்வந்த தகவலைச் சொல்லியிருக்கிறார். உடனே, பிரசாதத்தை மட்டும் அனுப்பச் சொல்லியிருக்கிறார் முதல்வர். சசிகலாவும், இளவரசியும் மட்டும் ஜெயலலிதாவுக்கு அருகிலேயே இருந்தார்களாம். அப்போது ஜெயலலிதா சில விஷயங்களை மனம்விட்டுப் பேசியதாகச் சொல்கிறார்கள். ‘இந்த விசாரணையில் என்ன வேணும்னாலும் தீர்ப்பு வரலாம். எது வந்தாலும் அதைச் சமாளிக்க நாம தயாராக இருக்கணும்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். அதற்கு சசிகலா, ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுக்கா... நல்லதுதான் நடக்கும்’ என்று பேசினாராம்.

ஆனாலும், ஜெயலலிதா எதையோ யோசித்தபடியே இருந்தாராம். கடந்தமுறை, ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். முதல்வர் பதவியும் இழந்தார். அது ஜெயலலிதா எதிர்பார்க்காத நிகழ்வு. கோர்ட்டுக்குப் போய்விட்டு மாலையில் சென்னை திரும்பிவிடலாம் என நினைத்து பெங்களூருவுக்குப் போனவரை அங்கேயே கைதுசெய்து உட்காரவைத்துவிட்டார்கள். அதனால், அப்போது வேறுவழியில்லாமல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். ஆனால், பன்னீர்மீது அண்மைக்காலமாக ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஒருவேளை தீர்ப்பு பாதகமாக வந்தால், மீண்டும் பன்னீர் என்பதில் ஜெயலலிதாவுக்கு விருப்பம் இல்லை. பன்னீருக்கு மாற்று யார்? என்பதே ஜெயலலிதாவின் யோசனையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இன்னொரு தகவலும் கார்டனில் இருந்து கசிய ஆரம்பித்திருக்கிறது.

முன்பெல்லாம் எந்தத் தகவலாக இருந்தாலும் பூங்குன்றன், சசிகலா அதன்பிறகே ஜெயலலிதாவின் கவனத்துக்கு வந்துசேரும் என்பதே நிலைமை. பத்திரிகைகளில் வரும் பல செய்திகள்கூட அவரது கவனத்துக்குப் போகாமல் மறைக்கப்பட்டது உண்டு. அத்துடன், கட்சி நிர்வாகிகள் அனுப்பும் புகார்களும் ஜெயலலிதா பார்வைக்குப் போகாமல் மறைத்துவந்தார்கள். ஆனால், இப்போது காலையில் செய்தித்தாள்களை கேட்டு வாங்கிப் படிக்க ஆரம்பித்திருக்கிறாராம் ஜெயலலிதா. அத்துடன், அதிகாரிகள் தரப்பில் இருந்து சொல்லப்படும் தகவல்கள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் என் கவனத்துக்கு வரவேண்டும் என்றும் பூங்குன்றனுக்கு உத்தரவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: