செவ்வாய், 31 மே, 2016

வதேரா வசமாக சிக்குகிறார்! பாரபட்சமில்லா விசாரணைக்கு சோனியா அறிவுறுத்தல்!

புது தில்லி : லண்டனில் பினாமி பெயரில் இருந்த கட்டடத்தை சீரமைப்பதில், ஆயுத விற்பனையாளரான சஞ்சய் பண்டாரியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு தொடர்பு இருந்தது குறித்த குறிப்புகள் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.
லண்டனில் ஆப்சன் இந்தியா சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை சஞ்சய் பண்டாரி நடத்தி வந்தார்.
இந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த போது, ஆயுத தயாரிப்பு மற்றும் விற்பனையில் மோசடி நடந்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து, பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாதம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது.
அந்த ஆவணங்களின் வாயிலாக, பண்டாரிக்கும், ராபர்ட் வதேராவுக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், லண்டனில் பிரையான்ஸ்டன் ஸ்கொயர் என்ற சொத்தை சாட்டா என்பவர் பெயரில் ராபர்ட் வதேரா வாங்கியிருக்கலாம் என்றும், அந்த கட்டடத்தை மறுசீரமைப்பது முதல் பழுதுபார்த்தல், அலங்கரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் பண்டாரா, ராபர்ட் வதேராவுக்கு மெயில் மூலம் தகவல்களை அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதே சமயம் 2010 ஏப்ரலில் வதேராவுக்கு அனுப்பப்பட்ட மெயிலில், சொத்தை மறுகட்டமைப்பு செய்ததற்கு ஆன செலவை திருப்பி அளிக்கும்படி சாட்டா கேட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், ஹரியானாவில் பல்வேறு நில மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ராபர்ட் வதேராவின் மீதான பிடி இறுகுகிறது.
எனினும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான் என்றும், இதில் உண்மையே இல்லை என்றும் வதேராவின் வழக்குரைஞர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். தினமணி.com

கருத்துகள் இல்லை: