ஞாயிறு, 29 மே, 2016

ரூ.150 கோடி, 2 லட்சம் வேட்டிகள்: அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் ரத்து ஆனதன் பின்னணி

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன் முதலாக 2 தொகுதிகளுக்கு நடைபெற இருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. காரணம் பெரிய அளவில் வாக்காளர்களுக்கு பணம், பொருள் விநியோகம் நடந்ததாக கடும் புகார்கள் எழுந்ததே.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது இந்திய தேர்தல் வரலாற்றில் தமிழகத்துக்கு ஏற்பட்ட கரும்புள்ளி என்றே அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
இரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, அந்தத் தேதியும் இப்போது ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் அறிவிப்பு மீண்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?

ஏப்ரல் 22-ம் தேதி அரவக்குறிச்சியில் சி.பி.ஜம்புநாதன் என்பவரின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்ட போது ரூ.4.77 கோடி ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டது. இத்துடன் அதிமுக அரசின் அமைச்சர்களுக்கு தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அன்புநாதன் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்வதோடு, கோயம்புத்தூரில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அவர் அதிமுக உறுப்பினரும் கூட என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள 29 பக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 200 வேட்டிகள் மற்றும் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1.30 கோடிக்கு சேலைகளும் வேட்டிகளும் வாங்கியதாக ஆதாரங்களும் கிடைத்தது. பணத்தை கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பதிவு செய்யப்படாத ஆம்புலன்சிலிருந்து பெரிய அளவில் பணம் எண்ணும் எந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் மே மாதம் 10-ம் தேதி, தேர்தலுக்கு 6 நாட்கள் முன்னதாக அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி வீட்டிலும் இவரது மகன் கே.சி.பி.சிவராமனின் கரூர் மற்றும் சென்னை இல்லங்களிலும் வருமான வரித்துறையினர் மேலும் ஒரு அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.1.98 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.95 லட்சம் ரொக்கம் மட்டும் வேட்பாளர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது. வருமான வரித்துறை தங்களது சோதனை, கைப்பற்றப்பட்ட ரொக்கம், பொருட்கள் ஆகியவற்றை வீடியோவில் பதிவு செய்து அரவக்குறிச்சியில் மட்டும் 7 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன.

ஒரு சந்தர்ப்பத்தில் தொகுதியில் நபர் ஒருவர் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்த போது அந்த நபர் ரூ.68,000 ரொக்கத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இத்தோடு 429 லிட்டர்கள் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறைதீர் தளத்தில் பணவிநியோகம் தொடர்பான 33 புகார்கள் பதிவாகியிருந்தன.
தேர்தல் செலவுகள் குறித்த ஆய்வு நோக்கரின் அறிக்கை:

தஞ்சாவூர் தொகுதியில் லாட்ஜ் ஒன்றிலிருந்து ரொக்கம் மற்றும் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை பற்றி விரிவுபடுத்தப்பட்ட அறிக்கையை செலவு நோக்கர் தேர்தல் ஆணையத்திடம் அளித்ததையும் ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் மே 13-ம் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில் தஞ்சையில் உள்ள முத்து லாட்ஜில் பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனையில் கட்டிட மேற்கூரையிலிருந்து ரூ.5 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர். மேலும் வார்டுகள், அதில் வாக்காளர்களின் பெயர்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய 3 கையெழுத்துக் குறிப்புகளும், 4-வது கையெழுத்துக் குறிப்பில் ரூ.35 லட்சம் தொகை குறிப்பிடப்பட்டிருந்ததும் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது, போலீஸ் உயரதிகாரி இதன் பிறகு கைப்பட எழுதிய குறிப்பில் இருந்த சரவணன், மனோகர் ஆகியோர் யார் என்பதை கண்டறிய உத்தரவிட்டார். “சரவணன் என்பவர் லாட்ஜ் உரிமையாளரின் மகன்” என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மே. 14-ம் தேதி கார்களில் சோதனை மேற்கொண்ட போது அதிமுக பிரச்சார பொருட்கள் சிக்கின. இதோடு கைப்பட எழுதப்பட்ட குறிப்புகளின் நகல்கள் கொத்தாகக் கைப்பற்றப்பட்டன. “இதில் வாக்காளர் ஒருவருக்கு ரூ.500 வீதம் பணவிநியோகத்திற்கான வார்டு வாரியான விவரங்கள் அடங்கியிருந்தது. இதில் 13 வார்டுகளின் கணக்குகள் இருந்தன, மொத்தத் தொகை ரூ.1.4 கோடி. இதனடிப்படையில் காரில் இருந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் போது, ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே ரூ.6 கோடி பணவினியோகம் செய்யப்பட்டதாக அதன் உத்தரவில் கூறியுள்ளது. தஞ்சாவூரில் அதிமுக மாணவர் அமைப்பைச் சேர்ந்த சரவணன் விவகாரம் உட்பட 3 சந்தர்ப்பங்களில் மொத்தமாக ரூ.25.48 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவணன் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வேட்பாளர்களின் வலுவான பணபலம்:

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொழில் செய்து வருவதால் பணபலம் மிக்கவர்களாக இருந்ததாக 3 நோக்கர்கள் கண்டுபிடித்த விவரங்களை சனியன்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. “இது குறித்து ஊடகங்கள் உட்பட, பலதரப்பட்ட மக்களுடன் பேசும்போது, அதாவது மரியாதைக்குரிய நபர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவரிடமும் பேசிய போது அரவக்குறிச்சியில் பணம் எப்படி தேர்தல் ஜனநாயக நடைமுறைகளை பின்னடையச் செய்தது என்பதை நோக்கர்களிடம் தெரிவிக்கப்பட்டது.”

மேலும், “ஆவணங்களின் படி குறிப்பிட்ட தகவல் பெறப்பட முடியாவிட்டாலும், நோக்கர்கள் 3 பேரான எங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்னவெனில் அரவக்குறிச்சியில் 2 பெரிய கட்சிகள் மட்டும் வாக்காளர் ஒருவருக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அளிக்கப்பட்டது என்பதே. தேர்தல் நடைமுறைகளின் போது கைப்பற்றப்பட்ட ரூ.8.3 கோடி என்பது பனிமலையின் ஒரு முகடே” என்று நோக்கர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், “அயல்நாட்டில் வசிக்கும் வாக்காளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோர் மறுத்த போதும் கூட வாக்குக்குப் பணம் அளிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது” என்று தேர்தல் ஆணைய உத்தரவு தெரிவிக்கிறது.

அரவக்குறிச்சிக்கான சிறப்பு நோக்கர்கள், பணவினியோகம், மதுபானம், மற்றும் இலவச விநியோகம் குறித்த 112 புகார்களை பெற்றுள்ளனர். இதன் படி அதிமுக வேட்பாளர் ரூ.59.4 கோடியும், திமுக வேட்பாளர் ரூ.39.6 கோடி பெறுமானமும் விநியோகித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். “பறிமுதல் நடவடிக்கைகளுக்கு முன்னதாகவே, திமுக வேட்பாளர் 1 லட்சம் கரை வேட்டிகளையும், அதிமுக வேட்பாளர் 1 லட்சம் வேட்டிகள் மற்றும் பச்சைக் கலர் சேலைகள் ஆகியவற்றை வினியோகித்துள்ளனர்.

இது தவிர, அதிமுக வேட்பாளர் கிராமங்கள், சிறு மற்றும் பெரிய குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் அன்பளிப்பு அளித்துள்ளனர், அதாவது, கோயில்களை புனரமைப்பு செய்வதற்கும், மண்டபங்கள் கட்டுவதற்கும் இந்தத் தொகையை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். அதாவது ரூ.150 கோடி ஏற்கெனவே வாக்காளர்களைச் சென்றடைந்து விட்டது என்று தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது tamilthehindu.com

கருத்துகள் இல்லை: