வெள்ளி, 3 ஜூன், 2016

கிருஷ்ணகிரி சாலை விபத்து ; 17 பேர் பலி : 30 பேர் காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடந்த சாலை விபத்தில் 10 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என 17 பேர் உயிரிழந்துள்ளனர். காயமுற்ற 30 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. சூளகிரி அடுத்த மேலுமலை நெடுஞ்சாலையில், இறக்கத்தில் லாரி இறங்கும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் எதிரே வந்த பஸ் மீது மோதியதுடன், பின்னால் வந்த கார்கள் மீதும் மோதியது. லாரியில் வந்த 2 பேர் மற்றும் பஸ்சில் பயணித்த பயணிகள் 17 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் பலருக்கு எழும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.
சூளகிரி போலீசார் மற்றும் பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.b>விபத்து நடந்தது எப்படி ?
கடலை லோடு ஏற்றி வந்த லாரியின் டயர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனையடுத்து லாரி அங்கும், இங்குமாக சென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இதில் லாரி முன்பக்கம் முழுமையாக அப்பளம் போல் ஆனது. பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் பாதிப்புக்குள்ளாயினர். சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: