சனி, 16 ஏப்ரல், 2016

தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை : அண்ணா நூலகம் பாராமுகம்....தனி குழு அமைக்க வேண்டி வரும்

சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால், தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.பராமரிப்பு இல்லை சென்னை ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணியம் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வக்கீல்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையர்களாக நியமித்து, நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

சட்ட ஆணையர்கள் அறிக்கை இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
ஐகோர்ட்டு நியமித்த சட்ட ஆணையர்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர் ஒரு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், நூலகத்தை கடந்த 7–ந் தேதி ஆய்வு செய்தோம். ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த குறைகளை அரசு நிவர்த்தி செய்யவில்லை. கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. 6 மற்றும் 7–வது தளங்களில் குளிர்சாதனம் சரிவர செயல்படவில்லை. புத்தகங்களை படிக்க வசதியான விளக்குகள் பராமரிக்கப்படவில்லை. 2 லிப்டுகள் மட்டுமே செயல்படுகின்றன. கூட்டரங்குகள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. நாற்காலிகள் உடைந்து உள்ளன என்று கூறப்பட்டு இருந்தது.
குழு அமைக்கப்படும் இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர், ‘அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை அரசு இதுவரை நிவர்த்தி செய்யவில்லை. அந்த பணிகளை எல்லாம் தமிழக அரசால் செய்ய முடியவில்லை என்றால், அதை செய்ய திறமை இல்லை என்றால், இந்த பணிகளை செய்யவும், அவற்றை கண்காணிக்கவும், ஒரு குழுவை நாங்கள் அமைக்கிறோம். தற்போது நூலகத்தில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்ய எவ்வளவு காலஅவகாசம் வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு அரசு வக்கீல், ‘ஜூன் 30–ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் நிவர்த்தி செய்துவிடுகிறோம்’ என்று உத்தரவாதம் அளித்தார்.
தள்ளிவைப்பு இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூலை 22–ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் குறைகளை நிவர்த்தி செய்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.   dailaythanthi.in

கருத்துகள் இல்லை: