வெள்ளி, 15 ஏப்ரல், 2016

JNU பிரச்சனையா? பனாமா ஊழல் அம்பலமா? high light பண்ணு சியாசின் ! இதுதாண்டா சங்பரிவார் !

இராணுவத்தின் தேசப்பக்தி பனாமாவிலா ? சியாச்சினிலா ?
army_tradeபடங்கள் நன்றி: THE IRISH TIMESஜே.என்.யு விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அம்பலப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு உடனடியாக கைகொடுத்தது சியாச்சின் பனிமலை. உலகின் மிக உயரமான போர் முனை என்று அறியப்படும் சியாச்சின் பனிச் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 21,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி அங்கே பாதுகாவலில் ஈடுபட்டிருந்த பத்து வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
உடனடியாக அந்தப் பிணங்களை வைத்து சமூக வலைத்தள மோடி பக்த ஜனசபா, தேசபக்தி பஜனையைத் துவங்கியது. “சியாச்சின் மலையினிலே… எங்கள் வீரர்கள் தேசம் காக்கப் போராடும் வேளையிலே… கண்ணையா குமார் என்ன சொன்னார் தெரியுமா….” என்று தொடை தட்டிக் கிளம்பிய தேசபக்த குஞ்சுகள் பனாமா ஆவணக் கசிவுகளில் இந்திய இராணுவத்தின் பெயர் அடிபடத் துவங்கிய பின் போன இடமும் தெரியவில்லை தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்துக் கொண்ட தடமும் தெரியவில்லை. high light

உப்புமா கம்பெனிகளுக்கென்றே நேர்ந்து விடப்பட்ட ஒரு நாடு பனாமா . கருப்புப் பண முதலைகள், ஹவாலா கேடிகள் மற்றும் வரி ஏய்ப்புகளுக்கான உப்புமா கம்பெனிகள் பனாமாவைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது. அமெரிக்காவில் வரி ஏய்ப்பு செய்ய பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களின் மூலம் எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டு பிள்ளையார் சுழி போட்டது ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம். இது உலக அறிவுஜீவிகளின் புரவலரான ராக்பெல்லருக்குச் சொந்தமானது என்பது ஒரு உப தகவல். பின்னர் 1920-களில் பனாமாவின் நிதிச் சட்டங்களை அமெரிக்க வால் வீதியின் உயர்மட்ட சூதாடிகளே வகுத்துக் கொடுத்துள்ளனர்.
படங்கள் நன்றி: THE IRISH TIMES
வரி ஏய்ப்பு மட்டுமின்றி பெரியளவிலான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான லாபி வேலைகள் மற்றும் கமிஷன்கள் பனாமாவில் பதிவு செய்யப்பட்ட இரகசிய நிறுவனங்களின் வழியே நடந்துள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகளின் அரசுத் துறைகள் அறிவிக்கும் டெண்டர்களை வெல்வதற்கு பனாமாவில் பதிவு செய்துள்ள உப்புமா கம்பெனிகளின் வழியே தான் பன்னாட்டு நிறுவனங்கள் லஞ்சப் பணத்தைப் கைமாற்றுகின்றன.
மிகக் குறிப்பாக பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களைக் குறுக்கு வழியில்  பெறுவதற்கான கையூட்டுக்கள் இந்த வழியிலேயே பாய்ந்துள்ளன.
1996-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த எலக்ட்ரானிக்கா எஸ்.பி.ஏ என்கிற நிறுவனம் மின்னணு உளவுக் கருவிகள் பராமரிப்பு ஒப்பந்தம் ஒன்றை இந்திய இராணுவத்திற்காக மேற்கொள்கிறது. இந்நிறுவனம், இந்திய இராணுவத்திற்கு ராடார் எச்சரிக்கைக் கருவி, லேசர் கதிர்களைக் முன்னறிவிக்கும் கருவி மற்றும் ஏவுகணை எச்சரிக்கைக் கருவி போன்றவைகளை விற்றுள்ளது. இந்திய இராணுவத்துடன் ஒப்பந்தங்களை வெல்வதற்காக எலக்ட்ரானிக்கா நிறுவனம் பனாமாவில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களான இண்டர்டிரேட் எண்டர்பிரைசஸ் (IEL) மற்றும் இண்டர்டிரேட் ப்ராஜக்ட் கன்சல்டண்ட் லிமிடெட் (IPCL) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 17 சதவீதம் வரை கமிஷன் வழங்கியுள்ளது.
2000, 2003 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை IPCL நிறுவனம் எலக்ட்ரானிக்கா நிறுனத்திடமிருந்து கமிஷன் பெற்றுள்ளது. ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலம் தொடங்கி பின்னர் வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலம் வரை நடைபெற்றுள்ள இந்த பணப்பரிமாற்றங்களின் மதிப்பு சுமார் ஒரு கோடியே முப்பது லட்சங்கள் ஆகும். எனினும், தனது வருடாந்திர வரவு செலவு அறிக்கையில் தமது கம்பெனியின் வருமானமாக சராசரியாக இரண்டாயிரம் பவுண்டுகளையே கணக்கில் காட்டியுள்ளது. ஆவணப் பூர்வமாக பெற்ற தொகையையே குறைத்துக் கணக்கில் காட்டியுள்ளது இந்த உப்புமா கம்பெனி. எனில், கணக்கில் வராமல் கைமாற்றி விட்ட தொகையின் அளவு என்னவாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தில்லி வட்டாரங்களில் செயல்படும் அயல்நாட்டு ஆயுத கம்பெனிகளில் எலக்ட்ரானிக்கா ஒரு சிறிய கம்பெனி. புதுதில்லியின் மத்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் தேசிய பாதுகாப்புக் கல்விப் பேராசிரியர் பரத் கர்நாடின் கருத்துப்படி, நமது தலைநகரில் மட்டும் சுமார் 300 அயல்நாட்டு ஆயுத கம்பெனிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கம்பெனிகள் ஒவ்வொன்றும் நேரடியாகவும் IPCL போன்ற இடைத்தரகு நிறுவனங்களின் மூலமும் லாபியிங் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களைப் பேசி முடிக்கவும், அதற்குத் தேவையான கையூட்டுக்களை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கள்ளத்தனமாக கொடுப்பதுமே இவர்களின் பிரதான செயல்பாடுகள். ஆயுத பேரத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் முறையாக இந்திய அரசிடம் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறது அரசின் விதிமுறைகள். எனினும், இது தொடர்பான விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுவதும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்வதுமே எதார்த்த நடைமுறையாக உள்ளது. அதிகாரிகளுக்குப் பாயும் லஞ்சத் தொகை பனாமா போன்ற வரியேய்ப்பு சொர்க்கங்களில் பதிவு செய்யப்பட்ட நிழல் நிறுவனங்களாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
வரியேய்ப்பு சொர்க்கங்கள் என்று அழைக்கப்படும் நாடுகள் தங்களது வரி விதிப்புக் கொள்கைகளை தாராளமானதாகவும், நிதி விவகாரங்களை இரகசியமானதாகவும் பராமரிக்கின்றன. உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நிதி மூலதனம் பறந்து செல்வதற்கு இந்த வரியேய்ப்பு சொர்க்கபுரிகளில் பதிவு செய்யப்பட்ட நிழல் நிறுவனங்களையே பயன்படுத்திக் கொள்கின்றன. இந்நிறுவனங்களின் வழியே பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளுக்குள் நுழைந்து வெளியேறும் மூலதனத்தின் அளவையே வளர்ச்சிக்கான அடையாளமாக முதலாளிய அறிஞர்கள் விதந்தோதுகின்றனர்.
modi2015-ம் ஆண்டுக் கணக்கின் படி உலக பணக்காரர்களின் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கு வரியேய்ப்பு சொர்க்கங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பதுக்கப்பட்டுள்ளது (சுமார் 32 ட்ரில்லியன் டாலர் – Financial Secrecy Index). சில ஆயிரத்திலிருந்து சில லட்சங்களுக்குள் மக்கள் தொகை கொண்ட தீவு நாடுகளான இவ்வரியேய்ப்புத் திரைமறைவு சொர்க்கங்களோடு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்நாடுகளில் வைத்து ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கும் அவற்றின் இடைத்தரகு நிறுவனங்களுக்கும் இடையே சட்டப்பூர்வமான முறைகளில் கைமாற்றிக் கொள்ளப்படும் கமிஷன் தொகை சட்டப்பூர்வமான வழிகளில் அவற்றின் இந்திய கிளைகளுக்கு மாற்றப்பட்டு பின் இராணுவ அதிகாரிகளுக்கு ‘சட்டவிரோதமான’ முறைகளில் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது.
தற்போது பனாமா ஆவணக் கசிவைத் தொடர்ந்து பதினைந்து நாட்களுக்குள் விசாரணை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு மாண்புமிகு பிரதமர் திரு. ஐம்பத்தாறு இன்ச் அவர்கள் நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என்கின்றன செய்திகள். லஞ்சத்தின் ஊற்று மூலத்தையே சட்டப்பூர்வமாக்கி விட்ட பின், அது பெருக்கெடுத்துப் பாயும் வழிகளில் தடுப்பணைகள் கட்ட முடியும் என்று நம்பச் சொல்கிறது பாரதிய ஜனதா அரசு.
இராணுவ நடைமுறைகள் மட்டுமின்றி, அதன் நிதிப் பரிவர்த்தனைகளும் நிதிக் கையாள்கையும் மக்களுக்குப் பதில் சொல்லும் கடமையில் இருந்து ’சட்டப்பூர்வமான’ வழிகளிலும், இராணுவத்தைச் சுற்றிப் பூசப்பட்டுள்ள தேசபக்த சாயங்களினாலும் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவம் என்கிற அமைப்பே மக்களுக்கு மேலாகவும் மக்களிடமிருந்து விலகி நிற்கும் ஒரு அமைப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனுள்ளே லஞ்ச ஊழலுக்கான சகல வசதி வாய்ப்புகளும் ‘சட்டப்பூர்வமாகவே’ நிலைநாட்டப்பட்டுள்ளன. மொத்தமும் இருளாக இருக்கும் அவ்வமைப்பின் உள்ளே கைமாறிய லஞ்சத்தின் மீது மட்டும் வெளிச்சம் பாய்ச்சிக் கண்டுபிடிக்கவுள்ளதாக சொல்வதே கேலிக்கூத்து.
இராணுவத்தை வைத்து தேசபக்தி கூச்சல்கள் அதிகம் எழுப்புவதே அதன் சர்வ வியாபகமான சர்வாதிகாரத்தை நிலைநாட்டத்தான். இறுதியில் இராணுவம் மக்களை ஆயுதத்தால் மட்டும் ஒடுக்கவில்லை, அந்த ஆயுதத்தை வாங்கும் முகாந்திரத்தில் மக்கள் பணத்தையும் கொள்ளையடிக்கின்றன.
– தமிழரசன்  வினவு.கம

கருத்துகள் இல்லை: