வியாழன், 12 ஏப்ரல், 2012

சினிமா நடனக் கலைஞர்கள் சங்கத்தை உடைத்த ரகுராம்: புதிய சங்கத்தை அறிவித்தார்!

Raghuram,  Prabhu Deva and Srikanth
சென்னை: நடனக் கலைஞர்கள் சங்கத்தை இரண்டாக உடைத்தார் மூத்த டான்ஸ் மாஸ்டர் ரகுராம். தனது தலைமையில் நடன இயக்குநர்கள் சங்கத்தை அறிவித்துள்ள அவர், யார் வேலை கொடுத்தாலும் நாங்கள் செய்வோம். எந்த அணியிலும் நாங்கள் இல்லை என அறிவித்துள்ளார்.
இது, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தொழிலாளர் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் எனத் தெரிகிறது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி)த்தில் மொத்தம் 23 சங்கங்கள் உள்ளன. அதில், தென்னிந்திய திரைப்பட நடன கலைஞர்கள் சங்கமும் ஒன்று. இந்த சங்கத்தில் நடன கலைஞர்களும், நடன இயக்குனர்களும் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

இருதரப்பினருக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வந்தன.

'பெப்சி' தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்து வரும் இந்த சூழ்நிலையில், நடன கலைஞர்கள் சங்கம் இரண்டாக உடைந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை தியாகராயநகர் பர்கிட் ரோட்டில் உள்ள நடன கலைஞர்கள் சங்கம் நேற்று இழுத்து மூடப்பட்டது.

புதிய சங்கம்

உடனடியாக டான்ஸ் மாஸ்டர் ரகுராம் தலைமையில், 'தென்னிந்திய திரைப்பட நடன இயக்குனர்கள் சங்கம்' என்ற புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது (இனி நடனக் கலைஞர்கள் வேறு, நடன இயக்குநர்கள் வேறு... இரண்டுக்கும் தனித்தனி சங்கங்கள்!).

நடனக் கலைஞர்கள் சங்கத்தை உடைத்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு சாதகமான வேலையா என்று ரகுராமிடம் கேட்டபோது, "நடன கலைஞர்களுக்கும், நடன இயக்குனர்களுக்கும் இடையே சரியான புரிதலும், அணுகுமுறையும் இல்லை. எனவே நடன கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நடன இயக்குனர்கள் விலகி விட்டோம். எங்களின் புதிய சங்கத்துக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

நாங்கள் தயாரிப்பாளர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் நடுநிலை வகிக்கிறோம். யார் வேலை கொடுத்தாலும் நாங்கள் செய்வோம். எங்களைப் பொறுத்த வரை ஊதிய விவகாரம் முடிந்துவிட்டது," என்றார்.

உங்கள் வரைக்கும் எல்லாம் முடிந்தால் போதும் என்று மற்ற சங்கங்களை விட்டுவிட்டீர்களே... என்றதற்கு, "ஆமாங்க, வேலையில்லாம நாங்க சும்மா இருக்க முடியாதே. எங்களுக்கு பிரச்சினை தயாரிப்பாளர்களுடன் இல்லை. எங்கள் சங்கத்துக்குள்ளேயே பிரச்சினை இருக்கிறது," என்றார்.

ரகுராமுக்கு ஆதரவாக கல்யாண், அசோக்ராஜ், தாரா ஆகியோரும் வீதியில் நின்றபடி மாறி மாறி பேட்டி கொடுத்த வண்ணமிருந்தனர்!

கருத்துகள் இல்லை: