செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஜெயேந்திர, விஜயேந்திரரிடம் இருந்து பாதுகாப்புக் கோரி சங்கரராமன் மனைவி மனு


Sankararaman Murder
 
புதுச்சேரி: சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் புதுச்சேரி நீதிமன்றத்துக்கு சங்கர்ராமனின் மனைவி பத்மா தனது மகனுடன் திடீரென வந்து நீதிபதியை சந்தித்து தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்குமாறு கோரி மனு கொடுத்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் ஆஜராயினர்.
இன்று வழக்கறிஞர்கள் வாதம் நடந்தது. அப்போது சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் திடீரென நீதிமன்றத்துக்கு வந்தனர்.
பத்மாவிடம் ஏற்கனவே சாட்சி விசாரணை முடிந்துவிட்ட நிலையில் அவர் நீதிமன்றத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அவர் திடீரென நீதிமன்றத்துக்கு ஒரு மனுவோடு வந்தார்.நீதிமன்ற ஊழியர்களை சந்தித்த அவர், நான் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி முருகனை சந்திக்க வேண்டும் என்றார். ஆனால் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இப்போது அவரை சந்திக்க முடியாது என்று ஊழியர்கள் கூறிவிட்டனர்.
ஆனாலும் பத்மாவும், அவருடைய மகனும் நீதிமன்றத்தின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தந்தனர். பின்னர் நீதிபதியை சந்தித்த அவர்கள், தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி மனு அளித்தனர்.

கடந்த ஆண்டு பத்மா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், இந்த வழக்கில் தன்னை பொய் சாட்சி சொல்லுமாறு சிலர் மிரட்டுவதாகவும், தனது மகன், மகளை ஆசிட் டேங்கரில் போட்டு உருத் தெரியாமல் அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: