புதன், 11 ஏப்ரல், 2012

5 கோடி+ 75,000 ஜீவனாம்சம்- மாஸ்டர் சுந்தரம் மீது 'முதல் மனைவி' தாரா வழக்கு!


Dance Master Sundaram

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துடன் நடந்த திருமணத்தை செல்லும் என்று அறிவிக்கக் கோரியும் தனக்கு ரூ 5 கோடி ரொக்கம் மற்றும் மாதம் ரூ 75000 ஜீவனாம்சம் கோரியும் சென்னை குடும்பநல கோர்ட்டில் டான்ஸ் மாஸ்டர் தாரா (வயது 62) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் பிரபுதேவாவின் தந்தையான டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு எதிராக டான்ஸ் மாஸ்டர் என்.ஏ.தாரா, சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடத்தப்படும், சமரச தீர்வு மையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி சுந்தரத்துக்கு பலமுறை சமரச தீர்வு மையம் நோட்டீசு அனுப்பியது.
அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து, அந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை. எனவே புகார் மனுவை வழக்காக சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று தாராவுக்கு சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியது.

1970-ல் திருமணம்

அதன் அடிப்படையில், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தாரா கடந்த பிப்ரவரி மாதம் மனுவில், "எனது தந்தை அமீருதீன். நான் வடக்கு உஸ்மான் சாலை, பார்த்தசாரதிபுரத்தில் வசிக்கிறேன்.

சர்வர் சுந்தரம் என்ற படத்தில் இருந்து நான் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்திடம் உதவி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினேன். அந்த வகையில் வந்த பழக்கத்தில் 1964-ம் ஆண்டு முதல் அன்பை பகிர்ந்து கொண்டு ஒன்றாக வாழ்ந்தோம். இந்த நிலையில் எனக்கும், அவருக்கும் 25.1.70 அன்று இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

மகன் பிறந்தான்

எங்களுக்கு நயீம் அன்சார் என்ற மகன் 27.7.71 அன்று பிறந்தான். எங்கள் திருமணத்துக்கு நயீமின் பிறந்தநாள் சான்றிதழ் ஆதாரமாக உள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால், திருமணம், குழந்தை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று சுந்தரம் கூறியிருந்தார்.

அதை நான் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தேன். எனவே உறவினர், நண்பர்கள் சிலரை மட்டும் அழைத்து வெளியே தெரியாமல் திருமணம் செய்துகொண்டோம். குழந்தை பிறந்த பிறகு வீட்டுக்கு வருவதை சுந்தரம் குறைத்துக்கொண்டார்.

கடனுடன் வாழ்க்கை

1973-74-ம் ஆண்டில் எங்கள் வீட்டுக்கு அவர் வரவேயில்லை. பின்னர் 1975-ம் ஆண்டில் இருந்து டான்ஸ் மாஸ்டராகி நானே சம்பாதித்தேன். எனது மகனின் உடல்நிலை காரணமாக 8-ம் வகுப்புக்கு மேல் அவனை படிக்கவைக்க முடியவில்லை.

1995-ம் ஆண்டில் இருந்து எனக்கு வருமானம் வருவது குறையத் தொடங்கியது. வங்கியிலும், நண்பர்களிடமும் கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டும் நிலைக்கு வந்துவிட்டேன்.

ஏகப்பட்ட சொத்துகள்

இந்த சூழ்நிலையில் என்னையும், எனது மகனையும் சுந்தரம்தான் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு 'செட்டில்' ஆகிவிட்டார். அவர்களுக்கு பிரபுதேவா, ராஜூசுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

எனது துணையுடன்தான் சுந்தரம் பல சொத்துகளை சம்பாதித்தார். மைசூரில் அவருக்கு சொந்தமாக திரிபுரசுந்தரி திருமண மண்டபம் உள்ளது. அவற்றுடன் பண்ணை வீடுகள், தோட்டங்கள் உள்பட ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகள் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் உள்ளன.

திருமணம் செல்லும்

எனவே எனக்கு, சுந்தரம் ரூ.5 கோடி பராமரிப்புச் செலவும், மாதம் ரூ.75 ஆயிரம் ஜீவனாம்சமும் அளிக்க உத்தரவிட வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாரா மற்றும் நயீன் அன்சார் தாக்கல் செய்துள்ளனர். அதில், சுந்தரத்துடன் நடந்த திருமணத்தை செல்லும் என்று அறிவிக்க வேண்டும் என்று தாராவும், சுந்தரத்தை தனது தந்தை என்று அறிவிக்க வேண்டும் என்று நயீம் அன்சாரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: