சனி, 14 ஏப்ரல், 2012

Rahul Gandhi: நான் பிராமணன்...அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்


Rahul Gandhi
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக "சாதி" ஆயுதத்தை கையிலெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நண்பனாக, இஸ்லாமியர்களின் நண்பனாக வேஷம் போட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து பார்த்தது. கட்சியின் "நம்பிக்கை நட்சத்திரம்" என அழைக்கப்படும் ராகுல்காந்தி தலித்துகளின் குடிசைகளுக்குள் ஓடி, உட்கார்ந்து சாப்பிட்டு போட்டுக் காண்பித்த அத்தனை காட்சிகளுமே அட்டர் பிளாப்பில்தான் முடிந்தது!


பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் சமாஜ்வாதி கட்சியை நம்புகின்றனர். தலித்துகள் மாயாவதி பக்கம் சாய்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் "பிராமணர்கள்" வாக்குகளைக் கவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

நான் ஒரு பிராமணன்!

இதன் முன்னோட்டமாக டெல்லியில் அண்மையில் ராகுல்காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாதி ஆயுதம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல்காந்தி சட்டென " நான் ஒரு பிராமின்... அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்" என்று கூறியது கட்சியினரின் பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவினரிடையே அதிர்வலைகளை உருவாக்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கென பாரம்பரிய வாக்காளர்களாக இருந்தவர்கள் பிராமணர்களே என்பதால் பிராமின் லாபி இத்தகைய ஒரு சூழலை காங்கிரசுக்குள் உருவாக்கி உள்ளது.

ராகுல்காந்தியின் இத்தகைய வெளிப்படையான ஒப்புதலால் காங்கிரஸ் கட்சியால் பிராமணர்களின் வாக்குகளைத் தக்க வைத்து அப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்ற கனவில் அம்மாநில காங்கிரஸ் பெருந்தலைகள் இலவுகாத்துக் கொண்டிருக்கின்றன.

இதேபோல் கடந்த ஆண்டும் ராகுல்காந்தி தம்மை இப்படி பிராமின் என்று கூறியபோதே பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேறுமா கால்குலேஷன்?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தலித்துகள், பிராமணர்களை ஒன்றிணைத்து மாயாவதி ஆட்சியைப் பிடித்த பார்முலாவை காப்பியடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.. தங்களுக்கு தலித்துகள், பிராமணர்கள் மற்றும் கணிசமான பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் சேர்ந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என எண்ணுகிறது காங்கிரஸ்.

ராகுல் தலைகீழாக நின்று போராடிப் பார்க்கிறார்.. எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலையில்தான் காங்கிரஸ் கட்சி இருப்பதாகவே அதன் நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதனிடையே ராகுலின் இத்தகைய ஒரு கருத்து இணையதளங்களில் கடுமையாக அலசலையும் உருவாக்கியுள்ளது. ராஜீவ் ஒரு பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் தம்மை பிராமணர் என்று சொல்வது சரியா ? என்ற ரேஞ்சில் தொடங்கும் விமர்சனம் இத்தாலிய குடியுரிமை வரை நீண்டு கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட இனத்தின் காவலன் என்று தம்மை காங்கிரஸ் கூறிக் கொள்வது பொய்தானே என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உபி பிராமணர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள தலித் - பிற்பட்ட மக்களின் விரோதியாகப் போகிறதா காங்கிரஸ்?

கருத்துகள் இல்லை: