ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ராஜா மனு?ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் ரத்து

ஸ்பெக்ட்ரம் வழக்கில் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. இதனால், ராஜா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் குறைதீர் மனு (கியூரேட்டிவ் பெட்டிசன்) தாக்கல் செய்யப்படவுள்ளது என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008 ஜனவரியிலிருந்து, தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கிய, 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களையும் ரத்து செய்து, கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ராஜா சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிக்கு புறம்பானது: அந்த மனுவில், "தன்னிடம் விளக்கம் கேட்காமலே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் லைசென்ஸ்களை ரத்து செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் கருத்தைக் கேட்காமல், தீர்ப்பு வழங்குவது இயற்கையின் நீதிக்குப் புறம்பானது. தவிர, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பால், சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்துவரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். எனவே, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் மறுஆய்வு செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.

மனுக்கள் நிராகரிப்பு: இந்த மறு ஆய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. மேலும், இந்தத் தீர்ப்பால், டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தது. ராஜாவைப் போல், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும், சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தன. அந்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. இந்நிலையில், மறுஆய்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், குறைதீர் மனு தாக்கல் செய்வது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜா, தன் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார். அதனடிப்படையில், ராஜா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் குறைதீர் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: